இந்த கவிதை இளைஞர்களுக்காக அல்ல
முதன் முதலாக
என் காதலை
உன்னிடம் சொன்ன போது ,
நீ சிந்திய புன்னகை
இப்போதும் அதே ஈரத்தோடு
கிடக்கிறது
என் மனக்கிளையில் .
பனி தூவும்
பின்னிரவுப் பொழுதுகளில் ,
நாம் நிகழ்த்திய
முன்விளையாட்ட்டுச சிலிர்ப்பில்
அடிக்கடி மூழ்கி விடுகிறேன் .
கலவி முடிந்தும்
காதல் இருந்த
வியர்வைத் தருணங்களில்
அவ்வப்போது
இளைப்பாறிக் கொள்கிறேன் .
பல சமயங்களில்
நாம் பேசிக்கொள்வதே இல்லை ,
அருகருகே அமர்ந்து
மௌனத்தின் மடியில்
இதமாய்த் தலை சாய்ப்பது
நமது வாடிக்கையாய் இருந்தது .
உன் முடிவு
முன்கூட்டியே தெரிந்து விட்ட போது
எனக்காக அழுதவள்
நீ மட்டும் தான் .
நடுக்கூடத்தில்
உன்னைக்கிடத்தி இருந்த போது
சுற்றங்கள் சுற்றி நின்று அழுதன .
மகன்கள் மாரில் அடித்து அழுதனர் .
அமெரிக்கப் பேத்தி
ஆங்கிலத்தில் அழுதாள்
எனக்கு மட்டும் ஏனோ
அழுகை வரவில்லை .
மூன்று வாரங்கள் கழித்து
குளியலறையில் அழுதேன்
குழந்தையைப்போல .
முப்பது வருடங்களுக்கு
முன்பிருந்த ,
பிரம்மச்சர்ய சூன்யம்
எனை மறுபடியும்
ஆட்கொண்டது .
ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதும் ,
உணவு கொள்ளும் போதும் ,
இதய நோய்க்கு
மருந்துண்ணும் போதும் ,
உயிரோடிருக்கும் குற்ற உணர்ச்சியில்
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கிறேன் .
Nicee....
ReplyDelete