பயணங்கள் அலுப்பதில்லை
பேருந்து
ஆடி ஆடிச் சென்றது
தாலாட்டுத் தொட்டில் போல !
விடலைப் பெண்ணின்
தாவணித் துணியாய்
சாலைகள்
சீக்கிரம் நழுவின !
எங்களைப்
புறக்கணித்த புறவுலகம்
பின்னோக்கிப் பயணித்தது !
வெளியே
அந்தி மாலையின்
தங்க தரிசனம் !
மாலை நேர
சூரியக் குழந்தை
தவழ்ந்து தவழ்ந்து
தூங்கப் போனது !
வானப் போர்வையில்
முடங்கிப் போனாள்
நிலவுப் பாட்டி !
போர்வை போதவில்லை போலும்
பாதி நரை
பிறையாய்த் தெரிந்தது !
பருவம் வந்த
பாவை ஒருத்தி
பார்வையாலேயே
எனை விழுங்கப் பார்த்தாள்.
நல்ல வேளை
எங்கிருந்தோ பாய்ந்து வந்த
அவளின் சிவப்புக் காவலர்கள்
வேலிஒன்றை
வேகமாய்ப் போட்டனர் .
தலை குனிந்த
அவளின் காலடியில்
அழகாய்ப் பூத்திருந்தது
வெட்கக் கோலம் !!!
கிட்டே அமர்ந்த
கிழவி ஒருத்தி
காவிப் பல்லைக்
காட்டிச் சிரித்தாள் .
அந்தச் சிரிப்பின் மிச்சம்
அழகின் உச்சம் !!!
வீறிட்டழுத குழந்தை ஒன்று
எனைப் பார்த்து
அமைதியானது
அள்ளி எடுத்தேன்
அணைத்துக்கொண்டது !
இது போன்ற
சின்ன சின்ன
பேரின்பங்கள் உள்ளவரை
பயணங்கள் அலுப்பதில்லை !!!
Comments
Post a Comment