இரண்டாவது பிறப்பு
நெஞ்சில் ஊறப்போட்ட
உன் நினைவுகள்
மொட்டுடைத்துச் சிறகடிப்பதில்
சிதறுகின்றன
கவிதையின் இறகுகள் !
உன் கனவுகளை
உள்ளம் எப்போதும்
அடை காப்பதில் ,
அங்கேயும் முளைக்கின்றன
கவிதையின் விதைகள் !
என் அறை நண்பர்கள்
என்னை வினோதமாய்ப் பார்க்கின்றனர் .
நானில்லாத ஒரு
முன்மாலைப் பொழுதில்
திறந்து கிடந்த என்
நாட்குறிப்பை ,
நான்கு பேரும்
படித்து விட்டனர் !
ஏதேனும் ஒரு
தொகுப்பிலிருந்து
உருவப்பட்ட ,
திருட்டு வரிகளோ என்ற
ஐயம் அவர்களுக்கு !
முன்பு பதிந்து போன
என் பிம்பத்தை
மாற்றிக்கொள்ள
அவர்களுக்கு
அவகாசம் தேவைப்படலாம் !
அவர்களுக்குத் தெரியுமா
நம் உயிர்கள்
இடம் மாறிக்கொண்ட
தருணத்தில் , நான்
இரண்டாவது தடவை
பிறந்து விட்டேன் என்று !
Comments
Post a Comment