என் மனதைத் தந்து விடாதே
கல்லூரி
முடிந்தமாலை வேளை !
நாம் இருவருமே
பேருந்துக்காகக் காத்திருந்தோம் !
மலர்க்கொத்து மகளிர் குழுவில்
நீ மட்டும் எனக்கு
ஒற்றை மலராய்
தனித்துத் தெரிந்தாய் !
பேருந்தைப் பார்க்கும் சாக்கில்
நான் உன்னைப்பார்த்தேன் !
என் பார்வையை
நீ உணர்ந்து விட்டதை
உன் கன்னச்சிவப்பு காட்டிக்கொடுத்தது !
என் காதுமடல் வெப்பத்தை விட
உன் இதயத்துடிப்பின் சத்தத்தை
அதிகமாய் உணர்ந்தேன் !
இளமையின்
இன்ப அழுத்தத்தை
இருவருமே அனுபவித்தோம் !
பார்த்துக்கொண்டே இருந்த என்னை
பளிச்சென பதிலுக்குப் பார்த்தாய்
என் பாதங்கள் பூமியைப் புறக்கணித்தன !
நம் பார்வைகள்
புணர்ந்து கொண்டதில் ,
குறுநகைக் குழந்தையை
இதழில் ஈன்றெடுததாய் !
நல்லவேளை நம்மைத்தவிர
நம்மை யாரும் கவனிக்கவில்லை !
நம்
பார்வைகள் தழுவிக்கொண்ட
பத்து வினாடிகளில்
பத்தாயிரம் முறை
புதிதாய்ப் பிறந்திருந்தேன் !
பாவை உந்தன்
பார்வையால் தடவப்பட்டு
பரிசுத்தனாய் மாறிப்போனேன் !
உன் தலையை வருடிக் கோதியபடி
என் உயிரை உருவி எடுத்தாய் !
"தொடர்ந்து பார் " என
கண்களால் கட்டளையிட்டேன் !
"பார்த்தது போதும் " என
பார்வையால் பதில் சொன்னாய் !
சட்டென்று
தலை நிமிர்ந்த நாணத்தால்
தலை குனிந்து தரையைப்பார்த்தாய் !
பேருந்து வந்தது
முன்படியில் நீ
பின்படியில் நான் !
உள்ளே நாம் பார்த்துக்கொள்ள
சந்தர்ப்பம் வாய்க்கவில்லை !
"அன்பே பறித்துக்கொண்ட
என் மனதை தயவு செய்து
திருப்பித்தந்துவிடாதே ! " என்று
மாலையில் இல்லம் திரும்பியதும்
காதல் புறாவின் காதில் சொல்லி ,
உன்னிடம் தூது அனுப்பினேன் !!!
Comments
Post a Comment