கோபத்தை நிறுத்தி விடாதே
சில பொழுதுகளில்
காக்க வைத்துத
தவிக்க விட்டால்
கோபித்துக் கொள்ளுகிறாய் !
தனிமைச் சூழலில்
துணிந்து தொட்டால்
சினந்து தள்ளுகிறாய் !
சின்னச் சின்ன
பொய்கள் சொன்னால்
சிவந்து துள்ளுகிறாய் !
கடந்து செல்லும்
கன்னியை கவனித்தால்
காரமாய்க் கிள்ளுகிறாய் !
உன்னிடம்
எனக்குப் பிடித்ததே
என்னிடம்
நீ கொள்ளும் கோபம் தான் !
உனது கோபத்தை
என் மீது நீ கொண்ட
உரிமையின் வெளிப்பாடாய்
உணர்கிறேன் !
அக்கறையின் அம்சமாய்
அறிகிறேன் !
கரிசனத்தின் தரிசனமாய்க்
காண்கிறேன் !
தயவு செய்து
உனது கோபத்தை நிறுத்தி விடாதே !!!
குறிப்பு : இந்தக் கவிதையில் " கொள்கிறாய் " என்கிற பதம் " கொள்ளுகிறாய் " என்று ஓசை நயத்துக்காக எடுத்தாளப்பட்டுள்ளது .
Comments
Post a Comment