காதல் மழை
பூங்காவில்
கூட்டம் அதிகமில்லை !
நான்
பூக்களோடு
பேசிக்கொண்டிருந்தேன் !
பட்டாம்பூச்சி ஒன்று
கண்ணாமூச்சி காட்டியது !
ஒரு யுவனும்
ஒரு யுவதியும்
கண்ணிய இடைவெளியில்
காதல் புரிந்தனர் !
சறுக்கு விளையாட்டுச்
சிறுவனிடம்
சாதித்த சிரிப்பு !
கன்னத்தில்
கைவைத்தபடி
ஆகாயத்தை
அண்ணாந்திருந்தார்
அறுபது முதியவர் !
குறுஞ்செய்தி ஒன்று
கூவி அழைத்தது !
இதயத்திருடி
இப்போதுதான் கிளம்புகிறாளாம் !
நிமிடங்கள்
நகரவில்லை !
வினாடிகள்
விலகவே இல்லை !
அவளின்
உருவத்தை மட்டும்
உருப்போட்டபடி
உள்ளத்தால் தவமிருந்தேன் !
முப்பது நிமிடங்கள்
கழித்து
மூன்றாவது யுகத்தில்
நுழைந்தபோது
மனங்கவர்ந்தவள் வந்துவிட்டாள் !
பார்த்தவுடன்
புன்னகைத்தாள்
பரம்பொருள் தரிசனம் !
பேரின்பப்பரவசம் !
இப்போது முடியப்போகும்
இக்கவிதையில்
இருக்கலாம்
இலக்கணப்பிழை !
அதையெல்லாம்
கழுவிக் களைந்திடும்
பெய்திட்ட காதல் மழை !
Comments
Post a Comment