எங்கே எனது பழைய விதி
எனக்கு என்னவாயிற்று ?
எல்லாம் மாறிவிட்டதோ ?
காலையில் யாரும்
என்னை எழுப்ப வில்லை .
கசங்கியிருந்த போர்வை
ஒரு குறையாய்த் தோன்றவில்லை !
கேட்காமலேயே அம்மா
காபி கொடுத்தாள் !
சேர்ந்து சாப்பிட
தங்கை அழைத்தாள்
அப்பாவின் பார்வையில்
அதிசயமாய்
அன்பு இருந்தது !
வெளியே வந்தேன் .
என்னை வரவேற்க
வானவில்லின்
வளையம் இருந்தது !
சிறிது நடந்தேன்
பூக்களின்
பாதை தெரிந்தது !
ஒரு சிறுமி வந்தாள்
இனிப்பு கொடுத்தாள்
அவளுக்குப் பிறந்தநாளாம் !
எனக்கும் தானோ ?
சாலையில் நடந்தேன்
குறும்பாய்ப் பார்த்தபடி
கன்னி ஒருத்தி
கடந்து சென்றாள் .
எவர் குழந்தையோ
என்னைப் பார்த்து
வெள்ளையாய்ச் சிரித்தது !
கேட்காமலேயே
காசு கொடுத்தேன்
பிச்சைக்காரன் புன்னகைத்தான் .
வேலைக்காக
விண்ணப்பித்தேன்
அஞ்சல்காரன் ஆசீர்வதித்தான் !
பாழாய்ப்போன
என் பழைய விதியைத்
தேடினேன் .
கடைசி வரை
கிடைக்க வில்லை !
என்ன மாயம் நடந்தது ?
அட ,
நேற்றுத்தான்
அவளிடம்
என் காதலைச் சொல்லி இருந்தேன் .
அவளும்
அழகாய்ச் சிவந்து
சம்மதம் என்றிருந்தாள்.
பாருங்களேன் ,
எனது
இந்தப் புலம்பலும்
ஒரு கவிதையாய் மாறிவிட்ட
அதிசயத்தை !!!
Comments
Post a Comment