நான் அருகதை அற்றவன்
நான் கனவுகள் விற்பவன்
கவிதையின் காதலன்
காதலின் கவிஞன்
சிலர் என்னை
கலைக்கிறுக்கன் என்கின்றனர் !
மோனைகளை முடுக்கி விட்டு
எதுகைகளை எடுத்தெறிந்து
வார்த்தைகளோடு விளையாடுவது
என் வியாபார வாடிக்கை !
நாயகனுக்கும் நாயகிக்கும்
ஊடல் என்றால்
நான்
கவலையோடு கூடல் கொள்கிறேன் !
அவர்கள் தழுவலுக்கு
நான் நெகிழ்கிறேன்
அவர்களின் கண்ணீருக்கு
நான் அழுகிறேன் !
சில நேரங்களில் நான் ,
மெட்டுக்குள்
முடங்கி விடுவதால் - என்னை
மொழியின் கொலைஞன்
என்போரும் உண்டு !
எனக்கும் ஒரு கூட்டம்
இருப்பதை நம்பவே முடியவில்லை
என்னை ரசிக்கும்
அவர்களின் ரசனைக்கு
நானும் ரசிகன் !
நான் கலைச் சேவகன் அல்ல .
மது குடித்த
மாலைப் பொழுதுகளில்
மல்லாந்து படுத்து
மதியைப் பார்த்தால் தான்
வரிகள் விளைந்து
கவிகள் கனிகின்றன !
சில நேரங்களில்
நான் திருட்டுக் கயவன் .
காவியங்களின்
காதல் ரசங்களைக்
களவாடிக் கவி செய்வதால்
" கற்பனையின் உச்சன் " என்று
போற்றப்படுபவன் !
என்னை
தமிழன்னையின்
தவப் புதல்வன் என்கின்றனர் .
அவளின் பாதங்களைத்
தொடக்கூட நான்
அருகதை அற்றவன் எனும்
அவலத்தை வெளியே தெரியாமல்
மறைத்துக்கொள்வதில் உள்ளது
என் வெற்றியின் ரகசியம் !!!
Comments
Post a Comment