ஒரு பிரிவும் சில இதயங்களும் ......
ஒரு மாலை நேர மந்தகாச தனிமையில்
நாம் மறுபடி சந்தித்தோம் .
நான் வழக்கமாக புன்னகைத்தேன்
நீ மாறாக மௌநித்தாய் .
என்னை அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டே ,
அந்த அழைப்பிதழை நீட்டினாய் .
அதில் , உன் பெயருக்குப்பக்கத்தில்
எவன் பெயரோ இருந்தது .
நான் அவஸ்த்தையாய் " ஏன் " என்றேன் ,
நீ அமைதியாய் " யதார்த்தம் " என்றாய் .
என்னிடம் இருந்த உன் இதயத்தை
நீ பிடுங்கிகொண்டதில் ,
உன்னிடம் இருந்த என் இதயம்
துடிப்பை நிறுத்தி இருந்தது .
அவனது புகைப்படம் காட்டினாய்
மாதச்சம்பளம் ஐந்து இலக்கம் என்றாய் .
கடைசியில் , நம் நான்கு வருட காதலை
நாசூக்காய் விற்றிருந்தாய் .
சிப்பந்தி வந்தான் . உன் அனுமதியுடன்
உனக்கான பணத்தையும் சேர்த்தே கொடுத்தேன்
சுகமாய் இருந்தது .
பிரியும் போது சொன்னாய்
" திருமணத்திற்கு வந்து விடாதே " என்று .
நான் வறட்சியாய் புன்னகைத்தேன் .
ஒரு சில நிமிடங்கள்
நாம் மௌனமாய் அமர்ந்திருந்தோம்
அது தான் நாம் நம் காதலுக்கு செலுத்திய
இறுதி அஞ்சலி .
தெருவில் நடந்து கொண்டிருந்தேன்
தள்ளுவண்டியில் கம்பளி ஆடை விற்றுக்கொண்டிருந்தார்கள்
அப்பாவுக்கு குளிர் தாங்காது என வாங்கிக்கொண்டேன் .
சிறிது தொலைவு நடந்ததில்
அம்மாவின் ஞாபகம் வந்து
ஆப்பிள் பழங்களை வாங்கினேன் . விரும்பி சாப்பிடுவாள் .
அடுத்த மாத சம்பளத்தில்
பள்ளி செல்லும் தம்பிக்கு ஒரு
மிதிவண்டி வாங்க முடிவெடுத்தேன்
பாவம் நடந்தே செல்கிறான் .
என் பழைய காதலியே ,
ஒரு வகையில் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் .
உன் பிரிவால் , என்னைச்சுற்றியுள்ள
பிற இதயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டேன் .
Comments
Post a Comment