படைப்புலகப் பிச்சைக்காரன்
இப்போதெல்லாம்
பாடு பொருள்கள் கிடைப்பதில்லை !
கற்பனைகள்
வறண்டு விட்டன !
உவமைகள்
தீர்ந்து விட்டன !
மோனைகள்
முரண்டு பிடிக்க ,
எதுகைகள்
ஏளனம் செய்கின்றன !
வார்த்தைகளை
மாற்றிப் போட்டே
வண்டி ஓடுகிறது !
பக்கத்து மொழியிடம்
கடன் வாங்கித்தான்
பிழைப்பே நடக்கிறது !
மூளையைப் போலவே
மழுங்கிக் கிடக்கிறது
என் பேனாவின் முனையும் !
எனக்கும்
கசாப்புக்கடைக்காரனுக்கும்
வித்தியாசம் ஒன்றுமில்லை !
அவன் கூறுபோடுவது ஆட்டை !
நான் கூறு போடுவது பாட்டை !
அவன் கொல்வது கோழியை !
நான் கொல்வது மொழியை !
இதில் அவ்வப்போது
இலக்கியச் சேவை வேறு !
அறுபதுபக்கத்தொகுப்பில்
பொருளடக்கமே மூன்று பக்கம் !
அணிந்துரைகளும்
பொழிப்புரைகளும்
சேர்ந்தாற்போல இருபது பக்கம் !
இதில்
என்னுரை ஒரு
ஏழு பக்கம் !
கணக்கிடுங்கள்
கவிதைகள் எத்தனை பக்கம் ?
இதில் கொடுமை என்னவென்றால்
தலா ஒரு கவிதைக்கு
நான்கு பக்கம் என
நாசூக்காய் ஒத்துக்கியிருந்தேன் !
என்னை யாராவது கவிஞன்
என்றால் சிரிப்பு வருகிறது !
நான் சட்டைப்பையில்
குறிப்புத்தாளுடன் அலைகிறேன் !
எங்கேயாவது ,
எவனாவது ,
எதையாவது சொன்னால்
சடுதியில் குறித்துக்கொள்ள !
"படைப்புலகப் பிச்சைக்காரன் " என்பது
எனக்கு நானே வழங்கிய பட்டம் !
கொஞ்சம் இருங்கள் ..............
எனது அடுத்த கவிதை
இப்போது தயாராகி விட்டது .
வருகிறேன் !!!
Comments
Post a Comment