வீரம்
குதிரைகள் கனைத்தன !
"அனைத்தும் ஆயத்தம் அரசே ! "
தலை வணங்கித்
தகவல் சொன்னான் தளபதி !
"யானைப்படை
எப்போதோ தயார் !"
பணிந்து சொன்னான் படைத்தலைவன் !
"மன்னர் வாழ்க "
உவந்து சொன்னான்
உப தளபதி !
வீரத்தாய்
நெற்றியில் திலகமிட்டாள் !
உத்தம பத்தினி ,
உச்சியில் முத்தமிட்டாள் !
தங்கத்தனையன்
தழுவிக்கொண்டான் !
பத்துவயதுச் சிறுவனொருவன்
புழுதியில் புரண்டழுதான் .
போருக்கு அவனும் வருகிறானாம் !
நிறைந்த குடிமக்கள்
நிறைவாய்ப் பார்த்தனர் .
வீரவாழ்த்துக்கூறி ,
வழியனுப்பினர் !
நாங்கள் ,
அறப்பால் குடித்துவிட்டு
மறப்பால் வார்க்கப் புறப்பட்டோம் !
பத்து சிங்கங்கள்
பூட்டிய ரதத்தில்
பயணம் தொடங்கியது !
களத்தில்
குவிந்திருந்தான்
போரின் பங்காளன் !
தருமத்தை ஒதிவிட்டு ,
யுத்தத்தை ஆரம்பித்தோம் !
வாளோடு வாள் !
தோளோடு தோள் !
கண்ணுக்கு கண் !
பல்லுக்குப் பல் !
குருதிக்கு குருதி !
மரணத்தின் ஓலத்தைவிட ,
வீரத்தின் முழக்கமே ,
விஞ்சி நின்றது !
எதிர் நாட்டவனொருவன்
எனை நோக்கி வேல் எறிந்தான்
எங்கிருந்தோ வந்த
என் நாட்டு வீரன் - அதை
நெஞ்சில் வாங்கி நிமிர்ந்து நின்றான் !
தலைவனைக் காப்பாற்றிய
தன்மானச் சிரிப்போடு
இறுமாப்பாய் இறந்து போனான் !
அவனுக்காய்
கண்களில் வழிந்தது உதிரம் !
கதறி அழுதது இதயம் !
ஒரே ஒரு அம்பை விட்டு
எதிரி நெற்றியில் வைத்தேன்
இரத்தப்பொட்டு !
முதுகின் பின்னேயிருந்த
மற்றோர் எதிரி
முன்னே வந்து
முறைத்து நின்றான் !
அந்தோ ...........
அவனிடம் ஆயுதம் ஏதுமில்லை !
வாளை வானில் விட்டெறிந்து ,
அம்புகளை அந்தரத்தில்
தூக்கிப்போட்டு ,
தோளைத்தட்டி ,
"வாடா " என்றேன் !
அடுத்து நடந்தது ,
வில் யுத்தமல்ல
மல் யுத்தம் !
எட்டாவது குத்தில் ,
எதிரி வீழ்ந்தான் !
வீரத்தில் மீசை
மேலும் மேல்நோக்கி வளைந்தது !
அடுத்தாற்போல ,
எதிர் நாட்டு மன்னனே
எதிரே வந்தான் !
வாட்சண்டைக்கு அழைத்தான்
விரும்பி ஏற்றேன் !
சண்டை ஆரம்பமானது !
வாளோடு வாள்
உரசியதில் உண்டான
வெளிச்சத்தைப் பார்த்து
பயந்த சூரியன்
மேகத்தின் பின்னே பதுங்கினான் !
இருபடைகளும்
திரண்டு நின்று பார்த்தன .
எதிர்நாட்டு அரசன்
தன தாயிடம் இருந்து
வீரப்பாலைச் சற்று
அதிகமாய்க் குடித்திருப்பான் போல !
அவன் வீசிய வாள் ,
என் நடுநெஞ்சைப் பிளந்து நின்றது !
வீசியவனே விக்கித்து நின்றான் !
படைகள் பதறின ,
எட்டுத்திக்கும் கதறின ,
எதிரிகளும் பகைமையை உதறி ,
கண்ணீர் உகுத்தனர் !
எனது முகம் ,
வீரத்தில் நிறைந்து இருந்தது !
எனக்கு கவலை இல்லை !
புழுதியில் புரண்டழுதானே ,
பத்துவயதுச சிறுவன் ,
அவன் போதும் !
என் நாட்டை எப்படியும்
காப்பாற்றி விடுவான் !
இறுதியாக ,
கைகட்டிக் காத்து நின்ற காலனை
கைதட்டி அழைத்தேன் !
Ji good.. but something lack.. i think the ending
ReplyDelete