காதலியே கேள் .....
காதலியே கேள் !
இனிமேல் நாம்
மழையில் நனைய வேண்டாம் !
அமுத மழை இப்போதெல்லாம் ,
அமிலத்தை அணிந்துதான்
தரையையே தொடுகிறது !
வடுகப்பட்டிக் கவிஞன் சொன்னானென்று ,
வானின் நிறத்தை மையாக்கி ,
காதல் கடிதம் தீட்டச் சொன்னாய் !
நானிலத்தின் கழிவுகளால் ,
நீலம் எல்லாம் நீர்த்துப்போக ,
வார்த்தையை வடிக்க
வழியின்றி விழிக்கிறேன் !
தண்ணீரை உன்னுடன்
ஒப்பிடச் சொல்கிறாய் !
குளோரின் குரூரமாகச் சிரிப்பது
கேட்கவில்லையா உனக்கு ?
மொட்டை மாடியில் ,
காற்று வாங்குவதைக் குறைத்துக்கொள்வோம் !
ஏனென்று கேட்கிறாயா?
ஹைக்கூத் தென்றலை ,
ஹைட்ரோ கார்பன் கவர்ந்து விட்டதாம் !
செய்தியை , செவிமடுக்க வில்லையா நீ ?
கணநேரமாவது ,
குளிர்ச்சியைக் குறைத்துக்கொள்வோம் !
ஓசோன் ஒருநாளாவது
ஓய்வெடுக்கட்டும் !
உந்தன் ,
பார்வையின் மின்சாரமே போதுமே !
புறவுலக மின்சாரத்தை
பத்திரப்படுத்துவோம் !
பூச்சிக்கொல்லிகள்
ஆட்சி செய்வதால் ,
பருக்கைச்சோற்றைப் பகிர்ந்து கொள்வதை
பெருமளவில் குறைத்துக்கொள்வோம் !
புகையின் பகையை ,
பூமி இனிமேலும் பொறுக்காது !
ஆகையால் ,
காலாற நடந்தே ,
காதலை அனுபவிப்போம் !
இனிமேலான இரவுகளில் ,
காற்றைத் தூது விட்டே பேசிக்கொள்ளலாம் !
கதிர்வீச்சுக்களின் கோபமூச்சு ,
கடுகளவேனும் குறையட்டுமே !!!
Comments
Post a Comment