கல்லூரிக் கன்னியும்
வாகனக் கணவனும் !
அன்று ,
அதிகாலையில் எழும்போதே
அவளை நினைத்து
ஆவலாய் எழுந்தேன் !
அவள் ?
காலை வேளையில்
கடந்து போகும்
கல்லூரிக் கன்னி !
குனிந்தே வருபவள்
அருகே வந்ததும்
நிமிர்ந்து பார்த்து
நகர்ந்து போவாள் !
எனக்கு மட்டும்
மழை பொழியும் !
இன்று எப்படியும்
இனிதாய் சிரித்து ,
இளங்கிளியை இன்பமாய்
இம்சித்து விடவேண்டும் !
என்ற தீர்மானத்தில்
இருந்த போதும் ,
இந்தக் கவிதை
அதைப் பற்றி மட்டுமல்ல !
வண்டி சாவியை
வைத்த இடம் தெரியவில்லை !
தொலைந்த சாவியால்
தேகத்தின் தினவும்
தொலைந்து போனது
அன்றைய தினத்தின்
கனவும் கலைந்துபோனது !
வண்டி ,
தேடி வாங்கிய
தவணை வண்டி !
அதனால் தான்
சாவியும்
தவணை முறையில்
தினமும் தொலைகிறது !
ஒருமுறை ,
தொலைந்ததைத் தேடி
தவித்த போது
தொலைக்காட்சிப் பெட்டியின்
தலையில் இருந்ததென
தங்கை வந்து தலையில் குட்டி
திட்டிக் கொடுத்தாள் !
இன்னொரு முறை
படுக்கை விரிப்பில்
பார்த்த அன்னை ,
பொறுப்பே இல்லையென்று
பொருமிப் போனாள் !
மற்றொருமுறை ,
குளியலறையில்
கண்டெடுத்த தந்தை
கண்டித்து விட்டே
கொடுத்துச் சென்றார் !
இப்போது
வியூகம் அமைத்துத்
தேடினாலும் ,
வாகனக் கணவன்
ஒளிந்து கொண்டு
வித்தை காட்டினான் !
வாகனக் கணவன் ?
வாகனத்தின் பூட்டைப் புனர்பவன் !
வலைவீசித் தேடினாலும்
வகையாய் மாட்ட - அது என்ன
விலாங்கு மீனா ?
சல்லடை கொண்டு
சலித்தாலும்
சடுதியில் சிக்க - அது என்ன
சில்லறைக் காசா ?
இன்றைக்குப் பார்த்து
அலுவலகத்தில்
அவசியப் பணியொன்றை
அவசரமாய் முடிக்க வேண்டும் !
நேற்று
பாதியில் விட்ட
புள்ளிவிபரத்தை - இன்று
பத்து மணிக்குள்
பதிந்து கொடுக்க வேண்டும் !
தவறினால் ,
மேலதிகாரியின்
நாராசப் பேச்சிற்கு
நாய் கூட நாணிச் சாகும் !
இன்று
என்ன தவறு செய்தேன் ?
அல்லது
செய்ய இருந்தேன் ?
இது
சாவு தண்டனை அல்ல
சாவி தண்டனை !
யோசித்துப் பார்த்ததில் ,
இளங்கிளி தான்
இடறி வந்தாள் !
இன்று
கல்லூரிக் கன்னியை
கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என
கடவுளிடம்
கற்பூரம் அடித்தேன் !
மறுநொடியே ,
" வண்டில பார்த்தியா "
என்றொரு அசீரிரி !
அம்மாதான் சொன்னாள் .
ஆண்டவனே சொன்னது போல
விரைந்து ஓடி
வெளியே வந்தேன் !
சொருகிய சாவியைக்
கண்டவுடன்
உறைந்த உயிர்
உருகி வந்தது !
வேகமாய் ஏறி
விரட்டி ஓட்டினேன் !
என் காலை நேர தேவதை
எதிரே வந்தாள் !
என்னையே பார்த்தாள் !
எதோ சொல்லவும் வந்தாள் !
நான் ,
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ,
சாலையை மட்டும் பார்த்தபடி
சென்று விட்டேன் !
அடுத்த நாள்
அவள் வரவில்லை !
அதற்கும் அடுத்த நாளும்
அவள் வரவில்லை !
வழியை அவள் மாற்றினாளா ?
அல்லது
விதி மாற்றியதா ?
தெரியவில்லை !
இரண்டு மாதங்களாகி விட்டன
இளங்கிளி கண்ணில் பட்டு !
இப்போதெல்லாம் நான்
எவளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!
Comments
Post a Comment