குறிப்பு : இந்தக் கவிதை கட்டை பிரம்மச்சாரிகளுக்கு ............. காதலிப்பவர்கள் படிக்கவேண்டாம்
விதியே முடிந்து விட்டது
எதிரே வருகிற எவளும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !
திருமதிகளைக் கண்டால்
தலை தானாய்க் குனிந்து கொள்கிறது !
வலைகளில்
வலைவீசத் தெரியவில்லை !
மின்னஞ்சல்களில்
முயன்று பார்க்கத் தோன்றவில்லை !
குறுஞ்செய்திகளில்
குசலம் விசாரிக்க யாருமில்லை !
வருடக்கணக்காய்
வீட்டில் வரன் பார்க்கிறார்கள் !
நடுமீசையில் எட்டிப்பார்க்கிறது
நரைத்த முடி ஒன்று !
பித்தம் என்று
பித்தலாட்டம் செய்தாலும்
கயமையைக் கண்கள்
காட்டிக்கொடுக்கின்றன !
பாதி வருடம் போனால்
பாதிக் கிழடு என்பார்கள் !
கல்லூரிகளில்
காதல் கோட்டை
கட்டாமல் விட்டது
கடைசியில் ஓட்டையாகி விட்டது !
பணியிலாவது
பார்த்துக்கொள்ளலாம் என்றால் ,
ஆண்கள் மட்டுமே
அணியில் உள்ளனர் !
தொலைகாட்சி மட்டுமே
தற்போதைய தோழி !
பல்போன கிழவிதான்
பக்கத்து வீட்டின் பேச்சுத் துணை !
நோயில் படுத்தால்
நாதியில்லை கேட்பதற்கு !
சுயசமையலைச் சாப்பிட்டே
சுரணை செத்துவிட்டது !
அழுக்குத் துணிகளை அலசியே
ஆயுள் ரேகை தேய்ந்து விட்டது !
தவிப்பைத் தாங்காமல்
தலையணை தவிக்கிறது !
பெருமூச்சில்
போர்வையே பொசுங்குகிறது !
பாயில் பக்கத்தில் படுக்க
பேய் கூட பயக்கிறது !
பேருந்தில்
பெண்களே இருப்பதில்லை !
திரையரங்குகளில்
தேடினாலும் கிடைப்பதில்லை !
கோவில்களில் குடியே இருந்தாலும்
கடைக்கண் பார்வையைக்
கன்னிகள் காட்டுவதே இல்லை !
வீதி வீதியாய் அலைந்தாலும்
விரக்திதான் விஞ்சுகிறது !
அழகு இல்லாததால் அலைவரிசை
அந்தரத்தில் அலைகிறது !
கற்பனையைக் காதலித்தாலும் ,
கற்பனையில் காதலித்தாலும்
பருகக் கிடைப்பது கானல்நீர்தான் !
இளமையின் எழுச்சி
இற்றுப்போய் விட்டது !
மன்மதப் பாடம்
மறந்து போய் விட்டது !
தனியாகவே காலந்தள்ள
தைரியம் பிறந்தாலும் ,
விடியும் விடியும் என்று காத்திருந்து ,
விதியில் பாதி முடிந்து விட்டது !!!
Comments
Post a Comment