Skip to main content
நண்பன்



நானும் அவனும்

ஒரே சமயத்தில் ,

ஒரே தொழிற்சாலையில் தான்

பணியில் சேர்ந்தோம் !


இருவரும் ,

வேறு வேறு துறைகள் !

அவன் தர நிர்ணயம் !

நான் தரக்கட்டுப்பாடு !


ஆறு மாதங்கள் கழித்தே என்

அறையில் வந்து தங்கினான் !


ஒரே அறையில் தங்கியதால்

நண்பர்களாக ஆனோம் !

பிறகு ,

நண்பர்களாக ஆகிவிட்டதால்

ஒரே அறையில் தங்கினோம் !


ஒவ்வொரு முறையும் ,

" மச்சி , மச்சி " என்று அவனைக்

கூப்பிடும் போதெல்லாம் ,

அவனுடைய காதலியை

எனது தங்கையாகத் தான் உணர்கிறேன் !


அவனுடைய தாயை

நான் " அம்மா " என்றே அழைக்கிறேன் !

நட்பில் தான்

அன்பின் வசதிக்காக மட்டுமே ,

உறவுகள் உருவாக்கப்படுகின்றன !


அறையில் அவ்வப்போது

விளையாட்டாய் ,

மல்யுத்தத்தில் ஈடுபடுவோம் !

பெரும்பாலும் தோற்பது அவன்தான் !

பாவி ,

விட்டுக்கொடுக்காமல் இருத்தலை

விளையாட்டாய்க்கூடச் செய்யமாட்டான் !


அறையில் பெரும்பாலும்

சமைப்பவன் அவன்தான் !

அதிலும் ,

அவன் சமைக்கும் உப்புமாவிற்கு

அப்படியே அம்மாவின் கைப்பக்குவம் !


மது அருந்த மாட்டான் !

ஆனால் நான் மது அருந்தும்போதெல்லாம்

கூடவே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பான் !


அறையில் நான் இல்லாத

சமயங்களில் கூட ,

தொலைக்காட்சியில் ,

எனக்குப் பிடித்த பாடலை ,

எனக்காகப் பார்த்துக்கொண்டிருப்பான் !


கணக்கில் கெட்டிக்காரன் !

ஆனால்

எனக்காக செலவு செய்த

கணக்கில் மட்டும்

வேண்டுமென்றே கோட்டை விடுபவன் !


என்னுடைய நண்பன்

அவனுக்கும் நண்பன் !

என்னுடைய எதிரி

அவனுக்கும் எதிரி !

இந்த விசயத்தில் மட்டும் அவன் ,

கடைசி வரை

கற்புக்கு அரசனாக இருந்தான் !


காதலிக்காக

வேறு வேலை தேடினான் !

அவனுடைய மனசுக்காக

நல்ல வேலை கிடைத்தது !


மகிழ்ச்சியாகத்தான் இருந்தது !

அவனுடனான கடைசி நாளை

கொண்டாடித் தீர்த்தோம் !


அவனது உடைமைகளோடு

அவனை வழியனுப்பிய போது

மனதுக்கு நிறைவாய் இருந்தது !


திரும்பி அறைக்கு வந்து ,

தனிமையை உணர்ந்த போது தான்

உண்மை உரைத்தது !


இனிமேல் அவன்

இங்கு இருக்கப்போவதில்லை !


குறுஞ்செய்திகள் ,

மின்னஞ்சல்கள் ,

அலை பேச்சுக்கள் ,

இவையாவும் அவனது

வெற்றிடத்தை முழுமையாக

நிரப்பப் போவதில்லை !


அவன் இருந்த அறை !

அவனோடு மல்யுத்தம்

நடத்திய தலையணை !

அவன் தூய்மை செய்த

எனது தட்டுக்கள் !

அவன் கடைசியாகப்

பரிசளித்த வாசனை திரவியம் !

எல்லாம் இருந்தன

அவனைத் தவிர !

முதன் முறையாக

சூனியத்தை உணர்ந்தேன் !


இரண்டு நாட்கள் கழித்து ,

அலைபேசியில்

" மச்சி " என்று

அவன் அழைத்த போது ,

என்னால் ,

கண்ணீர்த் துளிகளை

கட்டுப்படுத்த முடியவில்லை !





Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...