Skip to main content
வீரம்


குதிரைகள் கனைத்தன !

"அனைத்தும் ஆயத்தம் அரசே ! "

தலை வணங்கித்

தகவல் சொன்னான் தளபதி !


"யானைப்படை

எப்போதோ தயார் !"

பணிந்து சொன்னான் படைத்தலைவன் !


"மன்னர் வாழ்க "

உவந்து சொன்னான்

உப தளபதி !


வீரத்தாய்

நெற்றியில் திலகமிட்டாள் !

உத்தம பத்தினி ,

உச்சியில் முத்தமிட்டாள் !

தங்கத்தனையன்

தழுவிக்கொண்டான் !


பத்துவயதுச் சிறுவனொருவன்

புழுதியில் புரண்டழுதான் .

போருக்கு அவனும் வருகிறானாம் !


நிறைந்த குடிமக்கள்

நிறைவாய்ப் பார்த்தனர் .


வீரவாழ்த்துக்கூறி ,

வழியனுப்பினர் !


நாங்கள் ,

அறப்பால் குடித்துவிட்டு

மறப்பால் வார்க்கப் புறப்பட்டோம் !


பத்து சிங்கங்கள்

பூட்டிய ரதத்தில்

பயணம் தொடங்கியது !


களத்தில்

குவிந்திருந்தான்

போரின் பங்காளன் !


தருமத்தை திவிட்டு ,

யுத்தத்தை ஆரம்பித்தோம் !


வாளோடு வாள் !

தோளோடு தோள் !

கண்ணுக்கு கண் !

பல்லுக்குப் பல் !

குருதிக்கு குருதி !


மரணத்தின் ஓலத்தைவிட ,

வீரத்தின் முழக்கமே ,

விஞ்சி நின்றது !


எதிர் நாட்டவனொருவன்

எனை நோக்கி வேல் எறிந்தான்

எங்கிருந்தோ வந்த

என் நாட்டு வீரன் - அதை

நெஞ்சில் வாங்கி நிமிர்ந்து நின்றான் !


தலைவனைக் காப்பாற்றிய

தன்மானச் சிரிப்போடு

இறுமாப்பாய் இறந்து போனான் !


அவனுக்காய்

கண்களில் வழிந்தது உதிரம் !

கதறி அழுதது இதயம் !


ஒரே ஒரு அம்பை விட்டு

எதிரி நெற்றியில் வைத்தேன்

இரத்தப்பொட்டு !


முதுகின் பின்னேயிருந்த

மற்றோர் எதிரி

முன்னே வந்து

முறைத்து நின்றான் !


அந்தோ ...........

அவனிடம் ஆயுதம் ஏதுமில்லை !


வாளை வானில் விட்டெறிந்து ,

அம்புகளை அந்தரத்தில்

தூக்கிப்போட்டு ,

தோளைத்தட்டி ,

"வாடா " என்றேன் !


அடுத்து நடந்தது ,

வில் யுத்தமல்ல

மல் யுத்தம் !


எட்டாவது குத்தில் ,

எதிரி வீழ்ந்தான் !


வீரத்தில் மீசை

மேலும் மேல்நோக்கி வளைந்தது !


அடுத்தாற்போல ,

எதிர் நாட்டு மன்னனே

எதிரே வந்தான் !


வாட்சண்டைக்கு அழைத்தான்

விரும்பி ஏற்றேன் !


சண்டை ஆரம்பமானது !

வாளோடு வாள்

உரசியதில் உண்டான

வெளிச்சத்தைப் பார்த்து

பயந்த சூரியன்

மேகத்தின் பின்னே பதுங்கினான் !


இருபடைகளும்

திரண்டு நின்று பார்த்தன .


எதிர்நாட்டு அரசன்

தன தாயிடம் இருந்து

வீரப்பாலைச் சற்று

அதிகமாய்க் குடித்திருப்பான் போல !


அவன் வீசிய வாள் ,

என் நடுநெஞ்சைப் பிளந்து நின்றது !

வீசியவனே விக்கித்து நின்றான் !


படைகள் பதறின ,

எட்டுத்திக்கும் கதறின ,

எதிரிகளும் பகைமையை உதறி ,

கண்ணீர் உகுத்தனர் !


எனது முகம் ,

வீரத்தில் நிறைந்து இருந்தது !


எனக்கு கவலை இல்லை !

புழுதியில் புரண்டழுதானே ,

பத்துவயது சிறுவன் ,

அவன் போதும் !

என் நாட்டை எப்படியும்

காப்பாற்றி விடுவான் !


இறுதியாக ,

கைகட்டிக் காத்து நின்ற காலனை

கைதட்டி அழைத்தேன் !









Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...