விளையாடிப் பார்க்கலாம் வா
வாலிபா கேள் !
நீ குருடனல்ல
இருட்டில் இருக்கிறாய்
அவ்வளவு தான் !
நீ முடவனல்ல
காயம் பட்டவன் - அதை
காலம் ஆற்றி விடும்
கவலைப்படாதே !
கதவு சாத்தியிருக்கிறது என
கைகட்டி நிற்காதே !
ஒரு முறை தட்டிப் பார் !
அது பூட்டப்படாமல்
கூட இருக்கலாம் !
இரண்டு அடிகளை மட்டும்
நீயாக எடுத்து வை !
மூன்றாவது அடிக்கு
முயற்சி இல்லாமல்
முன்னேறி இருப்பாய் !
வெற்றிக்கான படிகட்டுகள்
மொத்தமே நூறு !
ஒரே ஒரு எட்டு வை !
நீ நின்றிருப்பது
தொண்ணூற்றி ஒன்பதாவது
படிகட்டாகக் கூட இருக்கலாம் !
உனது
சோகத்தின் ஈரங்கள்
தாமரைத் தண்ணீர் போல
தொலையட்டும் !
அவை தந்த
பாடத்தின் சுவடுகள்
பசுமரத்து ஆணிபோல
பதியட்டும் !
மரத்தடிகள்
இளைப்பாற மட்டுமே !
தங்குவதற்கு அல்ல .
முன்னேறி நடந்து பார்
மாளிகைக்கே மன்னனாவாய் !
காதல் என்பது
இளமையின் போதை மாத்திரை !
அதன் விலையும் அதிகம் !
விளைவுகளும் அதிகம் !
எச்சரிக்கையாய் இரு !
வெளிச்சத்தில் இருக்கும்போதே
விளக்கையும் தேடிக்கொள் !
இனிமேலும் இரவே இல்லையென்று
இயம்ப இயலாது அல்லவா !
விதி என்பது வீணர்களின் வார்த்தை !
சதி என்பது சோம்பேறியின் சாக்கு !
அறிவுரைகளை
அவ்வப்போது ஏற்றுக்கொள்
அவை அனுபவித்தவனின்
ஆசிர்வாதங்களாக இருக்கலாம் !
முயற்சியிடம் தோற்றுப்போகும்
முதல் எதிரி யார் தெரியுமா ?
விதிதான் !
வருந்தாதே !
தோள்களின் தினவில்
தரணியையே ஆளும்
தகுதி பெற்றவன் நீ !
தயங்காதே !
நீ
நெட்டி முறித்தால்
சோம்பலின் சாரம்
வெளிறிப்போகும் !
நீ
எட்டி உதைத்தால்
ஏழு உலகமும்
எகிறிப்போகும் !
உலகம் ஒரு
விளையாட்டு மைதானம் !
சோம்பேறிகள்
விதியின் பக்கம் !
சாதனையாளர்கள்
முயற்சியின் பக்கம் !
அதிர்ஷ்டமும் , அவநம்பிக்கையும்
அவர்களின் அணி !
நேர்மையும் , நம்பிக்கையும்
நமது அணி !
விளையாடிப் பார்க்கலாம் வா !!!
Comments
Post a Comment