வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?
வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?
ஒரு நிமிடம் நில் !
நான் சொல்வதைக் கேள் !
நீ யார் என்கிறாயா ?
உனது நலம்விரும்பி 
என்று வைத்துக்கொள்ளேன் . 
என்ன விழிக்கிறாய் !
ஒ ... நலம்விரும்பி என்பது 
போன நூற்றாண்டோடு 
வழக்கொழிந்த வார்த்தையாயிற்றே !
சரி ! இந்த நூற்றாண்டின் இறுதியோடு 
அழியப்போகும் வார்த்தையைச் சொல்கிறேன் !
நண்பன் !  என்னை உனது நண்பன் 
என்று வைத்துக்கொள்ளேன் ! 
எங்கே போகிறாய் ? 
என்னது ! உறக்கத்தின் காதலியை 
வாங்கப் போகிறாயா  ? 
ஒ .... மதுவா ?
மது - உறக்கத்தின் காதலி !
நல்ல உவமை !
நான் ஒன்று சொல்லவா ?
உறக்கத்திற்கு மனைவி 
ஒருத்தி இருக்கிறாள் ! 
அவள் பெயர் உழைப்பு !
கைச்சிறையில் மனைவி 
காத்திருக்கும்போது , 
காதலியை கடைகளில் 
ஏன் தேடி அலைகிறாய் ?
இரவெல்லாம் பணி !
அயராத உழைப்பு !
முழுச் சூரியனை 
முழுதாய்ப் பார்த்தே 
மாதங்கள் மூன்று ஆகின்றன !
உனது புளித்த  புத்திமதிகளை 
போன நூற்றாண்டு பத்தாம் பசலிகளிடம் 
வைத்துக்கொள் என்கிறாயா ?
உழைப்பு என்பது 
மூளையின்  மடிபபையும் ,
பணத்தின் தடிப்பையும் 
அதிகப்படுத்துவது மட்டுமல்ல !
அது ,
வியர்வையின் சொத்து !
உடல்நலத்தின் வித்து !
உன் உடம்பின் 
கடைசி  வியர்வையை 
நீ எப்போது பார்த்தாய் ? 
என்னது அப்படி ஒன்று 
இருப்பதையே மறந்துவிட்டாயா ?
பரிணாம வளர்ச்சியில் ,
மனிதனிடமிருந்து காணாமல் போகக்கூடிய
உறுப்புக்களின் பட்டியலில் 
வியர்வைச்சுரப்பிக்கே முதலிடம் !
இதயத்திற்குக் கூட இரண்டாமிடம் தான் !
உடல் வருந்திச் செய்யும் 
எதுவுமே உழைப்புதான் !
நின்ற இடத்திலிருந்தே ஓடு !
குதி , குனி , நிமிர் !
கைகால்களை நீட்டி மடக்கு !
இருபது நிமிடங்கள் போதும் !
அன்றிரவு உறக்கம் வரவில்லைஎன்றால் ,
செருப்பால் என்னை அடி !
அடுத்ததாக ,
உனது அம்மாவை 
கடைசியாக எப்போது நினைத்தாய் ?
கணக்கிடாதே ! அது ,
கடந்த வருடமாகக் கூட இருக்கலாம் !
காதலியிடம் நொடிக்கொருமுறை 
சாப்பிட்டாயா ? சாப்பிட்டாயா ? என்று 
உருகுகிறாயே !
அந்த வார்த்தையை 
உன் தாயிடம் எப்போதாவது 
கேட்டிருக்கிறாயா ?
இந்த உலகத்தில் எப்போதும் 
உன் நலனை எண்ணியபடியே 
வாழ அவள் ஒருத்தியால் 
மட்டுமே முடியும் !
உறக்கம் வரவில்லைஎன்றால் 
அவளிடம் ஐந்து நிமிடங்கள் 
மனம் விட்டுப் பேசு !
மனங்குளிர்ந்த அவள் உள்ளத்தின் பூரிப்பு ,
உன்னைத்தாலாட்டித் தூங்கவைக்கும் !
உறக்கத்திற்கும் தாய்க்கும் 
என்ன தொடர்பு என்கிறாயா ?
யுகம் யுகமாய் , தாய் தன் குழந்தையை 
தாலாட்டித் தானே தூங்க வைத்தாள் !
அந்தத் தாலாட்டின் அதிர்வுகள் எல்லாம் 
அண்ட வெளியில் உறைந்து போய்க் கிடக்கின்றன !
எங்கெல்லாம் தாயன்பு 
என்கிற கதகதப்பு உண்டாகிறதோ ,
அங்கெல்லாம் அவை உருகி உருகி 
பொழியத்தொடங்குகின்றன !
இது சொல்லப்படாத ஆனால் 
நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை !
இதற்கு மேலும் நீ 
மதுவைத் தேடித்தான் போவேன் என்றால் ,
உன் தாயிடம் ஒரு வார்த்தை 
சொல்லி விட்டுப் போ !!!
Uzhaippin unnathathai unarthum ithu nallathor kavithai... But it is age ji.. Antha antha vayasula manushan atha atha thedithan povan ( For Love)
ReplyDelete