குறிப்பு : படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்கிற அளவுக்கு இந்தக்கவிதை அப்படி ஒன்றும் பிரமாதமானது அல்ல .
படைப்பாளிகள்
நாம்
கலையின் படைப்பாளிகள் !
மொழியின் பாட்டாளிகள் !
படித்தல் ஒரு தவம் !
படைத்தல் ஒரு வரம் !
வரம் பெற
தவம் செய்ய வேண்டும் !
"சூழலை ",
சூழ்நிலை கொடுக்கும் !
சிறிது நடந்தாலே ,
சிந்தனைகள் சேர்ந்துவிடும் !
காற்றில் அலையும்
கற்பனைகளைக் கைப்பற்றவில்லை எனில் ,
கைமாறிப் போகும் அபாயம் இருக்கிறது !
இதுவும் பிரசவம் போன்றதுதான் !
இங்கே , பிரசவிப்பவனும்
புதிதாய்ப் பிறக்கிறான் !
ஒன்றிலிருந்து மற்றொன்றாய் ,
மற்றொன்றிலிருந்து வேறொன்றாய் ,
வேறொன்றிலிருந்து இன்னொன்றாய் ,
கலை எப்போதும் ,
தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் !
கவலை வேண்டாம் !
மனிதராய் இருந்து ,
கடவுளின் வேலையைச் செய்வதில் ,
அன்னைக்கு அடுத்தநிலையில்
இருப்பவர்கள் நாம் !
சிலசமயங்களில் ,
நமக்குள்ளேயே பொறாமை கொள்கிறோம் !
தாயின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும்
சகோதரனின் மீதான ,
பாசப் பொறாமை அது !
முடிச்சைப் போட்டு
முடிச்சை அவிழ்க்கையில் ,
மொழியின் கடலில்
அறிவைக் கடைகையில் ,
உணரப்படும் உயிர் வேதனை ,
நமக்கு மட்டுமே பரிச்சயமானது !
அகத்தே நிகழும் போதை இது !
இதை அனுபவிக்க ,
புறபோதைகளையும் நாடுகிறோம் !
தவறொன்றுமில்லை !
இது ,
காய்ச்சலில் காணும் குளிர்ச்சி !
அவஸ்தையில் அடையும் ஆனந்தம் !
நரகத்தில் நுகரப்படும் பேரின்பம் !
Comments
Post a Comment