போலிக் கவிஞன்
முப்பது கவிதைகளை ,
முடித்து விட்டு
உலகக் கவியாய்
உலா வருகிறேன் !
ஏழு எதுகைகள் ,
மூன்று மோனைகள் போதும்
பத்து கவிதைகள் பக்கம் பக்கமாய் ,
பூர்த்தி ஆகும் !
கற்பனையின் கருவறை
காய்ந்து கிடப்பதால் ,
குறிப்புத்தாளை கழிவறைக்கே
எடுத்துப்போகிறேன் !
எவனோ என்னை
"வாலி " என்றான் .
"போலி " என்பதே
பொருத்தமாயிருக்கும் !
நான் அடுத்த
வைரமுத்துவாம் !
கண்ணாடி முத்து என்பதே
கச்சிதமாய் இருக்கும் !
நல்லவேளை ,
கண்ணதாசனை விட்டுவிட்டார்கள் !
இல்லையெனில் ,
"கடுகுதாசன் " என்கிற
உப்பில்லாத உவமையை
தமிழுக்குத் தந்திருப்பேன் !
ஒருவேளைச் சோற்றை
உண்ணும்போதே ,
அடுத்த வேளையை
எண்ணிப்பார்க்கும்
சராசரி மனிதமனம்
படைத்தவன் நான் !
அதனால் தான் ,
பாராட்டப்படும் போதெல்லாம் ,
அடிவயிற்றிலிருந்து புறப்படும்
பயப்பந்து தொண்டையை அடைபபதால் ,
எனக்கு வார்த்தைகளே வருவதில்லை !
நான் ,
கலைமகளின் காலை
கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறேன் !
அவளோ உயரப் பறக்கிறாள் - நான்
அந்தரத்தில் அலைகிறேன் !
முன்னூறு பிரதிகள் கண்ட - என்
முதல் தொகுப்பை ,
முழுதாய்ப் படித்தவன்
நான் மட்டும்தான் !
ஒவ்வொரு கண்காட்சியிலும் ,
தலையில் துண்டு போட்டு
நிற்கும் ஒருவனை
நீங்கள் பார்த்திருக்கலாம் !
அவன் வேறு யாருமில்லை
என் முதல் தொகுப்பை
பதிப்பித்தவன் !
ஒருமுறை ,
ஆறாம் வகுப்புச்சிறுவன்
அடுக்கடுக்காய் எழுதியதை
ஆசை ஆசையாய் ,
என்னிடம் காட்டினான் !
அப்பாடா ......
அடுத்த தொகுப்பிற்கான
ஆறு கவிதைகள்
அடுத்தடுத்துத் தயார் !
இன்னும் ஏழு கவிதைகள் தேவை !
இருக்கவே இருக்கிறான்
ஏழாம் வகுப்புச் சிறுவன் !
அடுத்த கண்காட்சியில் நீங்கள் ,
தலையில் துண்டு போட்ட ,
இரண்டு பேரைப் பார்க்கலாம் !
என்னைப்போய்
கவிஞன் என்று வெளியில் சொல்லாதீர்கள் !
எவனும் வாய்வழியாய்ச் சிரிக்கமாட்டான் !
Comments
Post a Comment