Skip to main content
போலிக் கவிஞன்


முப்பது கவிதைகளை ,

முடித்து விட்டு

உலகக் கவியாய்

உலா வருகிறேன் !


ஏழு எதுகைகள் ,

மூன்று மோனைகள் போதும்

பத்து கவிதைகள் பக்கம் பக்கமாய் ,

பூர்த்தி ஆகும் !


கற்பனையின் கருவறை

காய்ந்து கிடப்பதால் ,

குறிப்புத்தாளை கழிவறைக்கே

எடுத்துப்போகிறேன் !


எவனோ என்னை

"வாலி " என்றான் .

"போலி " என்பதே

பொருத்தமாயிருக்கும் !


நான் அடுத்த

வைரமுத்துவாம் !

கண்ணாடி முத்து என்பதே

கச்சிதமாய் இருக்கும் !


நல்லவேளை ,

கண்ணதாசனை விட்டுவிட்டார்கள் !

இல்லையெனில் ,

"கடுகுதாசன் " என்கிற

உப்பில்லாத உவமையை

தமிழுக்குத் தந்திருப்பேன் !


ஒருவேளைச் சோற்றை

உண்ணும்போதே ,

அடுத்த வேளையை

எண்ணிப்பார்க்கும்

சராசரி மனிதமனம்

படைத்தவன் நான் !


அதனால் தான் ,

பாராட்டப்படும் போதெல்லாம் ,

அடிவயிற்றிலிருந்து புறப்படும்

பயப்பந்து தொண்டையை அடைபபதால் ,

எனக்கு வார்த்தைகளே வருவதில்லை !


நான் ,

கலைமகளின் காலை

கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறேன் !

அவளோ உயரப் பறக்கிறாள் - நான்

அந்தரத்தில் அலைகிறேன் !


முன்னூறு பிரதிகள் கண்ட - என்

முதல் தொகுப்பை ,

முழுதாய்ப் படித்தவன்

நான் மட்டும்தான் !


ஒவ்வொரு கண்காட்சியிலும் ,

தலையில் துண்டு போட்டு

நிற்கும் ஒருவனை

நீங்கள் பார்த்திருக்கலாம் !

அவன் வேறு யாருமில்லை

என் முதல் தொகுப்பை

பதிப்பித்தவன் !


ஒருமுறை ,

ஆறாம் வகுப்புச்சிறுவன்

அடுக்கடுக்காய் எழுதியதை

ஆசை ஆசையாய் ,

என்னிடம் காட்டினான் !

அப்பாடா ......

அடுத்த தொகுப்பிற்கான

ஆறு கவிதைகள்

அடுத்தடுத்துத் தயார் !

இன்னும் ஏழு கவிதைகள் தேவை !

இருக்கவே இருக்கிறான்

ஏழாம் வகுப்புச் சிறுவன் !

அடுத்த கண்காட்சியில் நீங்கள் ,

தலையில் துண்டு போட்ட ,

இரண்டு பேரைப் பார்க்கலாம் !


என்னைப்போய்

கவிஞன் என்று வெளியில் சொல்லாதீர்கள் !

எவனும் வாய்வழியாய்ச் சிரிக்கமாட்டான் !





Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...