முதல் தருணம் .........
இளங்கலை இறுதியாண்டில் ,
உன்னிடம் உள்ளம் திறந்தேன் !
மௌனமாகப் பார்த்தாய் !
" சம்மதமா ? " என்றேன் !
சின்னதாகச் சிரித்தாய் !
நொடிபொழுதில் ,
நிறம் மாறித்தெரிந்தது உலகம் !
இம்சையே இல்லாமல் ,
இரண்டு இதயங்கள்
இனிதாய் இடம் மாறின !
பார்வைகளை
வார்த்துக்கொண்டு ,
காதலைப் பருகினோம் !
சிறிது தூரம் ஒன்றாக நடந்தோம் !
வழியில் ஒரு ரோஜாச்செடி !
" ரோஜா வேண்டுமா ? " என்றேன் .
" அதற்கு வலிக்குமே ! " என்றாய் !
" அதைத் தலையில் சூடினால் உனக்கு வலிக்கும் .
வலிக்கும் வலிக்கும் சரியாப் போகும் ! " என்றேன் .
"குறும்பு ......" என்றபடி குத்தினாய் .
குழைத்து குறுகுறுத்தது உயிர் !
நாம் இன்னும் நடந்தோம் .
பட்டாம்பூச்சி ஒன்றைப் பார்த்து ,
" பிடித்துத்தா " என்றாய் !
" தருகிறேன் ... உன்னைப்பிடித்து
பட்டாம்பூச்சியிடம் " என்றேன் .
கன்னத்தைத் தான் கிள்ளினாய்
செத்து செத்து பிழைத்து வந்தேன் !
சிறிது தொலைவில் ,
தேநீர் கடை வந்தது !
எதிரெதிரே அமர்ந்து ,
தேநீர் பருகினோம் !
எதிர் பாராத நொடியில் ,
நீ குடித்த தேநீரின் மீதத்தை
பிடுங்கிக் குடித்துவிட்டு ,
" இதோ வந்துவிடுகிறேன்
கொஞ்சம் வேலை இருக்கிறது "
என்று எழுந்தேன் .
" எங்கே போகிறாய் ? " என்றாய் .
நான் சொன்னேன் .....
" தேவர்களைப் பார்க்க ........
அமுதத்திற்கு அர்த்தத்தை
அவர்களிடம் சொல்லியே ஆக வேண்டும் " .
உதட்டைச் சுழித்து
ஒழுங்கு காட்டினாய் !
அப்போது தான் உன் கைகளை
முதன் முறையாகப் பற்றினேன் !
அவைகளை எடுத்து
என் நெஞ்சில் வைத்துக்கொண்டு சொன்னேன் .
" இன்று நமது பந்தத்தின்
ஆயிரமாவது யுகத் தொடக்க விழா ! "
சட்டென்று அழுது விட்டாய் !
" அழாதே ! அழாதே ! " என்றபடியே
நானும் அழுதேன் !
அதன் பிறகு ,
நாம் உடல்களால் மட்டும்
பிரிந்து சென்றோம் !!!
Comments
Post a Comment