குறிப்பு : இந்தக் கவிதையில் முடிவை எதிர்பார்க்காதீர்கள் ...............
பவி
அவள் பெயர் பவித்ரா !
பவி , பவி என்று தான்
கூப்பிடுவேன் !
கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம் !
முதன் முதலில் ,
அவளாகத்தான் வந்து பேசினாள் !
"பட்டாம்பூச்சி பேசுகிறதே ! " என ,
வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன் !
அவளைப் பார்க்கும் போதெல்லாம் ,
மனது மயிலிறகால் வருடப்படும் !
அவளால் பார்க்கப்படும் போதோ ,
மனமே மயிலிறகாய் மாறிவிடும் !
அவளுடன் இருக்கும்போது மட்டும் ,
எனக்கு தேவதைகள் தென்படுவார்கள் !
அவளால் உச்சரிக்கப்பட்ட பிறகுதான் ,
என் பெயரை எனக்கே பிடித்தது !
அவளுடன்
பேசிவிட்டு வந்த தருணங்களில் ,
நான் அழகாய் மாறிப்போனதை
கண்ணாடியில் உணர்ந்திருக்கிறேன் !
ஒருமுறை ,
"போடா கிறுக்கா " என்றபடி ,
என் தலைமுடியைக் கலைத்துவிட்டாள் !
அவள் கலைத்தமுடி
கலையக்கூடாது என்பதற்காகவே ,
இரண்டு வாரங்கள்
தலை சீவாமல் அலைந்தேன் !
அதன் பிறகு கூட ,
அவள் சொல்லித்தான்
தலை வாரினேன் !
இன்னொரு முறை ,
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன் .
பின்னால் வந்தவன் இடித்துவிட்டான் .
அது நான்கு சக்கர வாகனம் .
புலி போலத்தான் திரும்பினேன் !
"பவித்ரா " என்று எழுதப்பட்டிருந்தது !
பேசாமல் வந்து விட்டேன் !
அவளது மதிய உணவை ,
பெரும்பாலும் உண்பவன் நான்தான் !
எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே ,
தினமும் தக்காளி சாதம் கொண்டுவருவாள் !
நானும் அவளும் பேசியபடியே ,
வெகுதொலைவு நடந்திருக்கிறோம் .
அப்போதெல்லாம் ,
அவளாக விடுவித்துக்கொள்ளும் போதுதான்
அவளுடைய கையை ,
அதுவரை பற்றியிருந்ததையே உணர்வேன் !
அவளைப் பார்த்துத்தான்
கவிதை எழுத ஆரம்பித்தேன் !
அந்தக் கவிதைகளைப் படித்த
மூன்று பெண்கள் முழுமனதாய்
என்னைக் காதலித்தனர் !
அவளுடன் இருந்த காலங்களில் ,
அவள் என் விதியை
வசப்படுத்தி வைத்திருந்தாள் !
எனக்கு எல்லாமே மாறித் தெரிந்தது !
அவளை என் மனதில் ,
வெகு உயரத்தில் வைத்திருந்தேன் .
அதனாலேயே என் காதலை
அவளிடம் சொல்லவில்லை !
கல்லூரியின் கடைசி நாள் !
நாங்கள் பேசிக்கொண்டே
வெகு தொலைவு நடந்தோம் !
அப்போதும் அவள் கையைப் பற்றியிருந்தேன் .
ஆனால் அவள் விடுவித்துக்கொள்ளவில்லை !
நானாகத்தான் விடுவித்தேன் !
விடைபெறும்போது ,
தன கண்களைத் துடைத்தபடியே சென்றாள் .
நான் தனியாக நின்று ,
வெகுநேரம் அழுது கொண்டிருந்தேன் !
காலங்கள் சென்றன !
அழைக்காததால் ,
என் திருமணத்திற்கு
அவள் வரவில்லை !
அழைத்தும் ,
அவள் திருமணத்திற்கு ,
நான் போகவில்லை !
ஆறு வருடங்கள் கழித்து ,
அவளை வழியில் பார்த்தேன் !
அதே பார்வை !
அதே பேச்சு !
அதே பவித்ரா !
பையனைப் பள்ளியில்
விட்டு வருகிறாளாம் !
நாங்கள் பேசுவதற்காகவே ,
பக்கத்தில் பூங்கா இருந்தது !
பேச்சின் நடுவில்
அதை அவளிடம் சொன்னேன் !
" ஒரு காலத்தில் உன்னைக் காதலித்தேன் ! "
" அப்படியா "
" உன்னை நினைத்து நிறைய கவிதைகள்
எழுதி இருக்கிறேன் " .
" ஒன்று சொல்லேன் " .
" உன் முதலெழுத்தும் ' பி ' ,
என் முதலெழுத்தும் ' பி ' ,
நமக்கு எப்போது ' பீப்பீ ' ? "
அவள் விழுந்து விழுந்து சிரித்தாள் !
சட்டென்று மௌனமானாள் .
என் கண்களையே சில நொடிகள் பார்த்தாள் !
" அப்போதே சொல்லியிருக்கலாமே " என்றாள் .
" சொல்ல முடியவில்லை " என்றேன் !
அதன் பிறகு ,
நாங்கள் பேசாமல்
அருகருகே வெகுநேரம் அமர்ந்திருந்தோம் !!!
பின்குறிப்பு : பிரதீஷ் ........... இதைப் படித்தீர்களா ?
Comments
Post a Comment