Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதையில் முடிவை எதிர்பார்க்காதீர்கள் ...............



பவி


அவள் பெயர் பவித்ரா !


பவி , பவி என்று தான்

கூப்பிடுவேன் !


கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம் !


முதன் முதலில் ,

அவளாகத்தான் வந்து பேசினாள் !


"பட்டாம்பூச்சி பேசுகிறதே ! " என ,

வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன் !


அவளைப் பார்க்கும் போதெல்லாம் ,

மனது மயிலிறகால் வருடப்படும் !


அவளால் பார்க்கப்படும் போதோ ,

மனமே மயிலிறகாய் மாறிவிடும் !


அவளுடன் இருக்கும்போது மட்டும் ,

எனக்கு தேவதைகள் தென்படுவார்கள் !


அவளால் உச்சரிக்கப்பட்ட பிறகுதான் ,

என் பெயரை எனக்கே பிடித்தது !


அவளுடன்

பேசிவிட்டு வந்த தருணங்களில் ,

நான் அழகாய் மாறிப்போனதை

கண்ணாடியில் உணர்ந்திருக்கிறேன் !


ஒருமுறை ,

"போடா கிறுக்கா " என்றபடி ,

என் தலைமுடியைக் கலைத்துவிட்டாள் !

அவள் கலைத்தமுடி

கலையக்கூடாது என்பதற்காகவே ,

இரண்டு வாரங்கள்

தலை சீவாமல் அலைந்தேன் !

அதன் பிறகு கூட ,

அவள் சொல்லித்தான்

தலை வாரினேன் !


இன்னொரு முறை ,

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன் .

பின்னால் வந்தவன் இடித்துவிட்டான் .

அது நான்கு சக்கர வாகனம் .

புலி போலத்தான் திரும்பினேன் !

"பவித்ரா " என்று எழுதப்பட்டிருந்தது !

பேசாமல் வந்து விட்டேன் !


அவளது மதிய உணவை ,

பெரும்பாலும் உண்பவன் நான்தான் !

எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே ,

தினமும் தக்காளி சாதம் கொண்டுவருவாள் !


நானும் அவளும் பேசியபடியே ,

வெகுதொலைவு நடந்திருக்கிறோம் .

அப்போதெல்லாம் ,

அவளாக விடுவித்துக்கொள்ளும் போதுதான்

அவளுடைய கையை ,

அதுவரை பற்றியிருந்ததையே உணர்வேன் !


அவளைப் பார்த்துத்தான்

கவிதை எழுத ஆரம்பித்தேன் !

அந்தக் கவிதைகளைப் படித்த

மூன்று பெண்கள் முழுமனதாய்

என்னைக் காதலித்தனர் !


அவளுடன் இருந்த காலங்களில் ,

அவள் என் விதியை

வசப்படுத்தி வைத்திருந்தாள் !

எனக்கு எல்லாமே மாறித் தெரிந்தது !


அவளை என் மனதில் ,

வெகு உயரத்தில் வைத்திருந்தேன் .

அதனாலேயே என் காதலை

அவளிடம் சொல்லவில்லை !


கல்லூரியின் கடைசி நாள் !


நாங்கள் பேசிக்கொண்டே

வெகு தொலைவு நடந்தோம் !

அப்போதும் அவள் கையைப் பற்றியிருந்தேன் .

ஆனால் அவள் விடுவித்துக்கொள்ளவில்லை !

நானாகத்தான் விடுவித்தேன் !


விடைபெறும்போது ,

தன கண்களைத் துடைத்தபடியே சென்றாள் .

நான் தனியாக நின்று ,

வெகுநேரம் அழுது கொண்டிருந்தேன் !


காலங்கள் சென்றன !


அழைக்காததால் ,

என் திருமணத்திற்கு

அவள் வரவில்லை !


அழைத்தும் ,

அவள் திருமணத்திற்கு ,

நான் போகவில்லை !


ஆறு வருடங்கள் கழித்து ,

அவளை வழியில் பார்த்தேன் !

அதே பார்வை !

அதே பேச்சு !

அதே பவித்ரா !


பையனைப் பள்ளியில்

விட்டு வருகிறாளாம் !


நாங்கள் பேசுவதற்காகவே ,

பக்கத்தில் பூங்கா இருந்தது !


பேச்சின் நடுவில்

அதை அவளிடம் சொன்னேன் !


" ஒரு காலத்தில் உன்னைக் காதலித்தேன் ! "


" அப்படியா "


" உன்னை நினைத்து நிறைய கவிதைகள்

எழுதி இருக்கிறேன் " .


" ஒன்று சொல்லேன் " .


" உன் முதலெழுத்தும் ' பி ' ,

என் முதலெழுத்தும் ' பி ' ,

நமக்கு எப்போது ' பீப்பீ ' ? "


அவள் விழுந்து விழுந்து சிரித்தாள் !

சட்டென்று மௌனமானாள் .

என் கண்களையே சில நொடிகள் பார்த்தாள் !

" அப்போதே சொல்லியிருக்கலாமே " என்றாள் .

" சொல்ல முடியவில்லை " என்றேன் !


அதன் பிறகு ,

நாங்கள் பேசாமல்

அருகருகே வெகுநேரம் அமர்ந்திருந்தோம் !!!





பின்குறிப்பு : பிரதீஷ் ........... இதைப் படித்தீர்களா ?















Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...