Note : This poem is based on the spectrum broad band issue ............................
விரைந்து வருவாயா தலைவா ?
தோரணங்களில் நீ சிரிக்க எனக்கு
காரணங்கள் தேவையில்லை !
நீ சிரிக்க வேண்டும் !
அது போதும் !
நீ
மேடைகளில்
முழங்கும்போது - உனக்கு
மாலை போட
முண்டியடிப்பவன் நான் !
என்னை உனக்குத் தெரியாது
எனக்கு உன்னை மட்டுமே தெரியும் !
உனக்கு வணக்கம் சொல்லாமல்
எனக்குப் பொழுதுகள் விடிவதில்லை !
உன்னை வாழ்த்திப்பாடாமல்
என் இரவுகள் இனிப்பதில்லை !
தலைவன் என்று
நீ வந்துவிட்டதால் ,
இறைவன் என்று
எவன் இருந்தாலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் !
என் வீட்டில் ஒருவேளை
அடுப்பு எரிந்தாலும் ,
அரிசியில் உன் முகத்தையே
தரிசிக்கிறேன் !
குடிசையில் நான் இருந்தாலும் - நீ
கோபுரத்தில் வாழ வேண்டும் !
மண்தரையில் நான் படுத்தாலும் - நீ
மலர் மஞ்சத்தில் உறங்கவேண்டும் !
என்னைப் பொறுத்தவரை ,
மாநாடுகள் தான்
மகிழ்ச்சியான திருநாள்கள் !
பொதுக்கூட்டங்கள் தான்
பிடித்தமான பண்டிகைகள் !
சுவரொட்டியில் உனது
சிரிப்பைக் கண்டால்தான்
சிந்தனையே சீராகும் !
கரைவேட்டியைக்
கட்டினாலே போதும் ,
கவலைகள் மறந்து
கம்பீரம் பிறந்து விடும் !
கொடிகளைக் கண்ட மனமோ
களிப்படைந்து கொண்டாடும் !
எதோ பெரிய இழப்பாம் !
தொகை மட்டும்
லட்சங்களின் கோடியாம் !
புலன் ஆய்ந்தவர்கள்
பட்டியல் நீட்டி ,
வில்லங்கத்திற்கு
விஞ்ஞான விளக்கம் சொல்கிறார்கள் !
வீணாய்ப்போன மண்டைக்குத்தான்
விளங்க மாட்டேன் என்கிறது !
பத்திரிக்கைகள்
பக்கம் பக்கமாய் எழுதுகின்றன !
எதிர்க்கட்சிகள்
ஏளனமாய்ச் சிரிக்கின்றன !
அண்டை வீட்டுக்காரன் கூட
ஆவேசமாய் ஏசுகிறான் !
யாவற்றையும் ,
நிலவின் களங்கம் - என்று கூறி ,
நாசூக்காய்
நகர்ந்து விடுகிறேன் !
மனசாட்சி மட்டும்
முரண்டு பிடிக்கிறது
மது இருந்தால் அதுவும்
மாண்டு போகும் !
இது வேறு ஒன்றுமில்லை தலைவா !
சூழ்நிலை பின்னிய
சூழ்ச்சிவலை !
விதி செய்த சதி !
காலம் போட்ட கோலம் !
சரித்திரத்தின் சோதனை இது
சோர்ந்து விடாதே !
வரலாற்றின் வேதனை இது
வீழ்ந்து விடாதே !
ஆனால் ,
மௌனத்தை எப்போது
உடைக்கப் போகிறாய் ?
கறைகளை எப்போது
துடைக்கப் போகிறாய் ?
இகழ்ச்சிகளை
இல்லாமல் செய்வாயா ?
தூற்றுதல்களைத்
தூக்கி எறிய வருவாயா ?
எப்போது என
நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் !
நாளைய தீர்ப்பில் ,
நியாயத்தின் பக்கம்
நீ இல்லை என்றானாலும் ,
நாணிச் சாக நானிருக்கிறேன் !
நீ நிமிர்ந்தே நட !
இறுதியாக ,
ஒரே ஒரு வேண்டுகோள் !
எனக்காகவோ
உனக்காகவோ வேண்டாம் - நம்
உறவுக்காகவாவது ,
உண்மையை உலகிற்கு உரைத்திட
விரைந்து வருவாயா தலைவா ???
Comments
Post a Comment