தமிழ்
அன்னையால்
அறிமுகப்படுத்தப்பட்ட
ஆதிஅன்னை நீ !
விவரம் தெரிந்த பிறகு
தாய்பாலினும் மூத்தபால் ,
முப்பால் என அறிந்தோம் !
அறப்பசியையும் ,
அறிவுப்பசியையும் ,
அதனை அருந்தித்தான்
ஆற்றிக்கொண்டோம் !
வீரம் ,
உன்னிலிருந்து விளைந்ததுதான் !
காதல் கூட - நீ
கற்றுத்தந்தது தான !
உன்னைக்
காதாறக் கேட்டவர்கள் ,
செவியாலும் சுவை உணர முடியும் !
செவியாலும் மணம் நுகர முடியும் !
என பேதையைப் போல
போதையில் புலம்பிச் செல்கிறார்கள் !
உன்னைப் படித்துக்கொண்டே
உண்ணும் உணவுதான்
நிலா இல்லாத சமயங்களில்
எங்களுக்கான நிலாச்சோறு !
அது ,
அன்னையால் ஊட்டப்படும்
அன்புச்சோறு ! அறிவுச்சோறு !
கற்பனைக் கருவாகி
மொழிவழியே உருவாகி
உன்னை நீயே
படைத்துக் கொள்வதில்
இங்கே எண்ணற்ற படைப்பாளிகள்
உருவாகி விடுகிறார்கள் !
உருவாகி விடுகிறார்கள் !
எங்களின் பிழைப்பே
உன்னால் தான நடக்கிறது !
உன்னை
விண்டெடுத்து விற்பவர்கள்
வாழ்வாங்கு வாழ்கிறார்கள் !
எங்களின்
தாகத்தைத் தணிக்கிற
ஊற்றும் நீயே !
எங்களின்
வாசிப்பில் நிறைகிற
காற்றும் நீயே !
சில சமயங்களில்
போதையை ஊட்டுவதால்
நீ , கள் !
பல சமயங்களில்
பாதையைக் காட்டுவதால்
நீயே , கடவுள் !
இப்போதே
இறப்பதென்றாலும் ,
இறைவனிடம் கேட்கவிருப்பது
ஒன்றே ஒன்று தான !
" இறைவா !
கடைசிச் சொட்டு உயிரை
கணநேரமாவது ,
நாக்கில் நிலைநிறுத்து !
'தமிழ் ' எனச்சொல்லிவிட்டு
தன்மானத்தோடு சாகிறேன் "
- என்பதுதான் அது !!!
Comments
Post a Comment