வந்தாலும் வரலாம்
வெளியே
வெயிலின் தலைவன்
உச்சியில் இருந்தான் !
வெக்கையில்
வெந்த தேகம்
சடுதியில் சக்கையானது !
எவனைப்பார்த்தாலும்
எரிச்சலாய் இருந்தது !
சென்றவிடமெல்லாம்
சாக்கடை மணத்தது !
யாவருக்கும்
முன்மண்டையில்
உற்பத்தியாகிப் பொழிந்தது
வியர்வையின் அருவி !
ஆசைகள்
ஆயுளை நீட்டின !
மருந்துகள்
மரணத்தை ஒத்திப்போட்டன !
விளைவாய் ,
கும்பல் கும்பலாய்
கூட்டம் கூடிக் கும்மியடித்தது !
விலகாமலேயே
விலக்கப்பட்டார்கள் !
நெருங்காமலேயே
நெருக்கப்பட்டார்கள் !
நடக்காமலேயே
நகர்த்தப்பட்டார்கள் !
சிந்தையில்லா
மனிதர்கள்
மந்தையைப்போல
மிரண்டு ஓடினர் !
பேருந்தில்
பெருங்கூட்டம் !
உணவகத்தில்
உலகக்கூட்டம் !
கடைகளில்
கணக்கில்லாத கூட்டம் !
திரையரங்குகளில்
திருவிழாக்கூட்டம் !
வண்டிக்காரன் ஒருவன்
முண்டியடித்து
சண்டித்தனம் செய்தான்
சீருடைக் காவலன் ஒருவன் - அவனை
தண்டிப்பேன் என கண்டித்தான் !
போக்குவரத்தின்
நெரிசலில்
வரிசையின் தர்மம்
விரிசல் கண்டது !
நகர்ந்து செல்லும் வாகனங்கள்
நொடி நேரம் நின்றாலும் - அன்றைய
நாளின் பொழுது நடுச்சாலையில் தான் !
சத்தம் அதிகமாய் இருந்தவனே
யுத்தத்தில் வென்றான் !
யுத்தத்தில் வென்றான் !
உலகறியாத குழந்தைகள்
உரத்து அழுதன !
தம்பதிகளின்
தெருச்சண்டையில்
தாம்பத்தியம்
தரம் தாழ்ந்தது !
வகையாய்க் குடித்த
வாலிபர்கள் வஞ்சங்களை
வசைபாடித் தீர்த்துக் கொண்டனர் !
எவளோ எவளையோ
முறைத்தாள் !
எவனோ எவனையோ
அறைந்தான் !
மனதை ரணப்படுத்தும்
நாக்குச் சாட்டை
சுதந்திரமாய்ச்
சொடுக்கப்பட்டது !
நான்கு திசைகளிலும்
நாராச ஒலி
செறிந்து செறிந்து
உச்சத்தை அடைய ,
கேட்டது ,
பேரிரைச்சல் அல்ல
பேய் இரைச்சல் !
காதுகளில் பாய்ந்தது
நகரத்தின் சத்தம் அல்ல
நரகத்தின் சத்தம் !
அடுத்த
பத்தாண்டுகளில்
பூங்காவிற்குச் செல்வதென்றாலும்
பதிவு செய்து காத்திருக்க வேண்டும் !
நடைபயிலுவதற்கும்
நடைபாதைச் சீட்டு வாங்க நேரிடும் !
வீதிகளில் உலவுவதற்கு
விலக்கு வந்தாலும் வரலாம் !!!
Comments
Post a Comment