நேற்றுப்பெய்த மழையில் .............
நேற்றுப்பெய்த மழையில் ,
பூமி புதிதாய்த் தெரிந்தது !
மேகங்களின் தன்மை ,
வெண்மையாய் இருக்க ,
வானத்தின் நிறம்
நீலமாய்த் தெரிந்தது !
பறவைகள் ,
சந்தோஷமாய் சிறகடித்தன !
அலாரம் வைக்காமலேயே
ஆறு மணிக்கு விழிப்பு வந்தது !
கதிரவனைக் கண்டதும்
கைகள் தானாய்க் கும்பிட்டன !
அம்மா தந்த தேநீர்
திகட்டாமல் தித்தித்தது !
குளிர்ந்த நீரும்
சுகமாய்ச் சுட்டது !
அதிசயமாய்
அப்பா கூட திட்டவில்லை !
தங்கை அன்போடு
" அண்ணா " என்றழைத்தாள்
தெருவில் நடந்தேன்
அன்றைக்கென்று
அனைவரின் வாசல்களிலும்
அழகான கோலங்கள் !
அழித்துவிடக்கூடாதென்ற
அச்சத்தோடு
அடி மேல் அடி வைத்தேன் !
தாயோடு வந்த சிறுமி ஒருத்தி ,
தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் !
எப்போதும் அழுகிற குழந்தை ,
இப்போது சிரித்தது !
மாமரம் ஒன்று
மழை நீரால் ஆசீர்வதித்தது !
குறுக்கே வந்த வாகனக்காரன்
சீறாமல் சிரித்துச்சென்றான் !
பெருமுயற்சிகள் ஏதுமின்றி
பேருந்தில் சன்னலோரம்
இடம் கிடைத்தது !
பக்கத்து இருக்கையில்
அமர்ந்த பாட்டி ,
பாசமாகப் பார்த்தாள் !
பயணச்சீட்டு வாங்க
பத்து ரூபாயை நீட்டினேன் .
நான்கு ரூபாய் மீதியை
நடத்துனர் " நாணயமாக "
கொடுத்துப் போனார் !
முகத்தில் அறைந்த காற்றில் ,
குளிருக்கு பதிலாக
குளுமை இருந்தது !
என்றைக்கும் போல
பள்ளி ,
பயங்கரமாகத் தெரியவில்லை !
பிடிக்காத வாத்தியாருக்கும்
பண்போடு வணக்கம் வைத்தேன் !
மூன்றாம் வகுப்பு மல்லிகா
மகிழ்ச்சியோடு
மிட்டாய் தந்தாள் !
புதிய பாடம் ஒன்று
படித்ததில் பதிந்தது !
கடினக் கணக்கு ஒன்று
கவனித்ததில் புரிந்தது !
அன்று ஏனோ
பக்கத்து வீட்டு
பள்ளித்தோழன்
பகல் உணவு கொண்டுவரவில்லை !
ஏன் என்றதற்கு ,
" நேற்றுப் பெய்த மழையில் நனைந்தது
கூரை மட்டுமல்ல
எங்கள் வீட்டின் தரையும் தான் !
இரவெல்லாம் ,
தண்ணீரை வாரிஇரைத்தே - அம்மா
தெம்பில்லாமல் படுத்து விட்டாள் ! " என்றான் .
அவனுக்கு என்
பகல் உணவைப்
பகிர்ந்தளித்தேன் !
பசியோடு புசித்தான் !
அதன் பிறகு ,
இன்றைக்கும் மழை
பெய்ய வேண்டும் என
இறைவனிடம் வைக்கவிருந்த
கோரிக்கையை
இறுதியாய் இரத்து செய்தேன் !!!
Comments
Post a Comment