எல்லாம் முடிந்து விட்டது
எல்லாம் முடிந்து விட்டது .
அப்படித்தான்
தோன்றுகிறது !
அல்லது
அப்படி
நினைத்துக் கொள்கிறோம் !
அகதிகளாக வாழ்வதென்பது
அனாதைத்தனத்தின் உச்சம் !
அதுதான் எங்களின்
ஆண்டாண்டுகால
அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் !
தலைவன் இல்லாவிடினும்
தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது!
மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் !
பழையபடியே புரட்சி நடக்கலாம் !
ஆனால் எதற்கு ?
எங்களைப் பொறுத்தவரை ,
தன்மானம் என்பது ,
தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று !
ஆணவம் ,
அழிவுக்கு அடிகோலுவது !
சுயமரியாதை ,
வன்முறையின் தந்தை !
அது ,
களையப்படவேண்டிய
மூட நம்பிக்கையும் கூட !
இப்போது
எங்களை
எல்லோரும் மறந்து விட்டார்கள் !
எங்களில் சிலர்
எங்கேயாவது எப்போதாவது
மீண்டும் கொல்லப்ப்டும் வரை
நாங்கள் அவர்களுக்கு
புளித்துப்போன பழைய செய்திதான் !
இந்த வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது !
காலையில்
சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............
அதன் பிறகு ,
வெள்ளை அரிசியில்
மணக்கும் மதிய உணவு !
சூரியன் சாய்ந்த இரவில்
சப்பாத்தியும் குருமாவும் !
முன்பு ,
எங்களின் கதைகளை
ஊர் படித்தது !
இப்போது ,
ஊர்கதைகளை
நாங்கள் படிக்கிறோம் !
அதைவிட ,
தொலைக்காட்சியில் தவமிருந்தால்
தொல்லையின்றிப் பொழுது போய்விடும் !
முன்பு போன்ற
இட நெருக்கடிகள்
இப்போது இல்லை !
ஆனாலும் ,
எங்களுக்கு இன்னும் வேண்டியது ....
கால் நோகாத
கழிப்பறையும் ,
குற்றாலம் போன்ற
குளியலறையும் தான் !
இழந்த வாழ்க்கை நரகம் என்பதால் ,
இந்த வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிகிறது !
நாங்கள் தோற்றுவிட்டோம் - என்று
ஒப்புக்கொள்வது கூட
ஒருவகையில் சுகமாக இருக்கிறது !
எல்லாம்
முடிந்து விட்ட பிறகு ,
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
மனதளவில் தெம்பு இல்லை !
சிந்திய ரத்தம்
வீணாகக்கூடாது என்பதற்காகவே
மீண்டும் மீண்டும்
வீணாக ரத்தம் சிந்தியதை
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது !
அமைதியாக வாழ்வதை
அடிமைத்தனம் என்றாலும்
அதைப்பற்றிக் கவலை இல்லை !
எல்லாம் முடிந்து விட்டது .
Comments
Post a Comment