Skip to main content
வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று
!






தொலைக்காட்சியில்
ஓடிக்கொண்டிருந்தது
ஒரு சர்வதேசப் போட்டி !
நான் ,
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒய்யாரமாகக்
கால்களை நீட்டி !

அங்கே,
அரையுங்குறையுமாய்
இரு பெண்கள்
வந்தாடினார்கள் !
வியர்க்க வியர்க்க
ஓடி ஓடி
பந்தாடினார்கள் !

இருவரில் ஒருத்தி
என்
தாய்நாட்டுக்காரி !
இன்னொருத்தி,
வேறு எதோ
பேய்நாட்டுக்காரி  !

நான்,
மந்திரித்து
விட்டது போல
முந்திரி
தின்றுகொண்டே
சுந்தரிகளை
சுவாரசியமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் !

ங்கொக்கமக்கா !

வாங்கியே
ஆகவேண்டும்
தங்கம் !
இல்லையெனில்,
அது
தாய்நாட்டுக்கே
பங்கம் !

சுந்தரிகள்
இருவருமே
நெருங்கி வந்தனர்
வெற்றியை !
அநியாயத்துக்கு
நெளிய வைத்தனர்  - என்
நெற்றியை !

அடியேன்,
தொலைக்காட்சியிலேயே
கண்களை
சிறையிட்டேன் !
எல்லா
கடவுளிடமும்
வஞ்சனையில்லாமல்
முறையிட்டேன் !

இறுதியில்,
தாய்நாட்டுக்காரி
தங்கம் வென்றெடுத்தாள் !

தலைகால் புரியாமல்
கத்தினேன் !
கையை மடக்கிக்
காற்றில் குத்தினேன் !

உய் உய் உய் உய் !

வாய்நோக
அடித்தேன் சீட்டி !
ஏமாற்றாமல்
எதிர்பார்த்ததைத்
தந்து விட்டது போட்டி !

அப்பாடா !
இப்போதுதான்
இந்தநாள்
இனிமையாகப்
பூரணமாகும் !
தின்ற முந்திரி
நன்றாக
சீரணமாகும் !

ஆகிவிட்டது !

ஏப்பம் விட்டபடி
எழுந்து வந்தேன்
வீட்டின் வெளியே !

அங்கே,

பக்கத்துவீட்டுப்
பவழமல்லி
என் வீட்டுக்
கொல்லையில்
தலை நீட்டியிருந்தது !

வந்ததே கோபம் !
ங்கொய்யாலே ..........

பக்கத்து வீட்டானை
வார்த்தைகளால்
பொரிந்தேன் !
வேகமாய்
வேட்டியை
வரிந்தேன் !

செடியின் தலையை
அந்தப்புறம்
மடித்தேன் !
அப்புறம்,
அது உதவாதென்று
ஒட்டுமொத்தமாய்
ஒடித்தேன் !

விருட்டென்று
திரும்பி
வீட்டுக்குள் வந்துவிட்டேன் !

அப்போது
அலைபேசி அதிர்ந்தது !
குடிகொண்ட கோபம்
கொஞ்சம்போல உதிர்ந்தது !

எடுத்தால்,
எதிர்முனையில் நண்பன் !

வாடா வா !

தாய்நாடு
தங்கம் வென்றதை
இருவரும்
அங்கம் பூரிக்க
அறிவித்துக் கொண்டோம் !
விருந்துண்டு
வெற்றியைக்
கொண்டாடுவதென
உளப்பூர்வமாய்த்
தெரிவித்துக் கொண்டோம் !

கிளம்பி வந்தேன்
வெளியே !

அங்கே,

பவழமல்லி
பரிதாபமாய்
ஒடிந்து கிடந்தது !
சொல்லப்போனால்
கிட்டத்தட்ட
பாதியளவு
மடிந்து கிடந்தது !

கிடக்கிறது
கழுதை !

தங்கம் வென்றுவிட்டது !
தாய்நாடு

பவழமல்லியாவது !
பக்கத்து வீடாவது !

வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று ! 

Comments

  1. என்ன சொல்ல வரீங்க குரு ...
    பக்கத்துக்கு வீட்டு மனிதர்களிடம் கருணை காட்டாதவன்

    ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை ...

    தன் சுயத்தின் சுகத்திற்காக கொண்டாடுகிறான் என்றா ?

    எதார்த்தத்தை அழகாக எளித வருகிறது .......

    இன்னும் கூட எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  2. நாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி ! மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( ? ) எழுதப்பட்டது என்பதே அப்பட்டமான உண்மை !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...