Skip to main content
குறிப்பு : சுத்தக்காரர்கள் இக்கவிதையைப் படிக்க வேண்டாம் !











சுகாதாரம்


   


சுகாதார அமைச்சர்
பள்ளிக்கு வருகிறாராம் !

கிழிந்து விட்டது
ஒட்டுமொத்த உற்சாகமும்
அழிந்து விட்டது !

தலைமையாசிரியர்
தலையில் அடித்துக் கொண்டார் !

உடனடியாக
அணி பிரிக்கப்பட்டது !
பணி ஒதுக்கப்பட்டது !

சுற்றுப்புறத்தில்
வீசியது
சுத்தத்தின் புயல் !
அங்கே
ஒவ்வொருவனும் ஆனான்
ஒரு குட்டி முயல் !

கூட்டலும், பெருக்கலும்
தரையில் நிகழ,
சொடுக்கப்பட்ட பம்பரமாய்
யாவரும் சுழல,

பித்தம் பிடித்தது போல
யுத்தம் செய்வது போல
யாவரும் அங்கே
சுத்தம் செய்தார்கள் !

ஓடி ஓடி
சுவரெல்லாம்
வெள்ளையடித்தார்கள் !
தேடித் தேடி
தூசியைக்
கொள்ளையடித்தார்கள் !

வேர்த்து வேர்த்து
கோலங்கள் இடப்பட்டன !
பார்த்துப் பார்த்து
பூஞ்செடிகள் நடப்பட்டன !

தலைமையாசிரியர்
மூக்கு விடைத்தபடி
மேற்பார்வை பார்த்தார் !

நோட்டம்
முடிந்ததும்
கூட்டம் நடந்தது !

பாக்கி இருப்பவை
பட்டியல் போடப்பட்டன !

அதன் படி,

வளாகமெங்கும்
வண்ணங்கள் தீட்டப்பட,
ஆங்காங்கே
கம்பீரமாய்
கொடிகள் நாட்டப்பட,
வாழ்த்துரைகள்
மீண்டும் மீண்டும்
வாசித்துக் காட்டப்பட,
நேரம் இல்லையென்று
கழிவறை மட்டும்
கமுக்கமாய்ப் பூட்டப்பட,

அந்த நாளும்
வந்து விட்டது !

ஆர்ப்பரித்தது
பார் !
கூடி நின்றது
ஊர் !
வரிசை கட்டியது
கார் !
தோற்றுப் போனது
தேர் !

அமைச்சர்
வந்திறங்கினார் !

இருமுறை
இருமினார் !
தொண்டையை
செருமினார் !

வெயில் ஆகாமல்
வியர்வையில்
பிசுபிசுத்தார் !
அப்புறம் குனிந்து
உதவியிடம்
கிசுகிசுத்தார் !

உதவி,
தலைமையாசிரியரை
நெருங்கி,
அவர் காதோடு
சொன்னார்,

" தலைவருக்கு
கொஞ்சம் போல சர்க்கரை !
சில நிமிடங்கட்கு ஒருமுறை
சிறுநீர் கழித்தாக வேண்டும் !
கொஞ்சம் உங்கள்
கழிவறையைக் காட்டுங்கள் ! "



Comments

  1. பள்ளி பருவத்தின்
    நினைவுகளை
    மீள் பிரசுரிக்கிறது

    உங்கள் வரிகள்

    வரி வரியை
    பள்ளியை சுற்றி
    வட்டம் போட்டு இருக்கிறீர்கள் ....

    நிதர்சனம் கண் முன்
    நிழலாடுது .........

    சமூகத்தின் அவலத்தை
    சாட்டையால் அடித்தது போல ......

    சுத்தம் செய்ய வேண்டிய இடம் தவிர
    அனைத்தும் சுத்தம் .........

    மனித மனம் போல
    அசுத்தத்தின் மறைவிடங்கள்

    ஆழ வெளிபடுகிறது கவிதையில்

    பாராட்டுக்கள் ..........

    ReplyDelete
  2. அப்பா ! கவிதை என்று நான் நினைத்துக் கொண்டு எழுதியதை விட அதற்கு கவிதையாக ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்களே, அது இன்னும் கவிதையாக இருக்கிறது ! சில நேரங்களில், ஆட்டைக் கொண்டு போய் சிம்மாசனத்தில் ஏற்றினால், அது கம்பீரமாகத் தெரியுமாம் ! அது போலத் தான், உங்கள் சிம்மாசனப் பின்னூட்டத்தில் எனது ஆட்டுக் கவிதை கம்பீரமாய்த் தெரிகிறது ! நன்றி

    ReplyDelete
    Replies
    1. எதையும் பிரமாண்டமாய் பார்க்கும் அதே கண்தான் புள்ளியையும் பார்க்கிறது

      நன்றி நண்பா

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...