Skip to main content
வாலிபா ...........

வாலிபா ,
காலையில் எழும்போதே
ஆலைக்குப் போய்
வேலை செய்வதென்றாலே
வெறுப்பாய்த்தானிருக்கும் !

எல் தோன்றும் முன்பே
பல் துலக்க வேண்டியதிருக்கும் !
( எல் - சூரியன் )

குளிப்பு நடக்கும்போது
களிப்பு இருக்காது !

சீரணம் சீர்கேடும் என்கிற
காரணம் சொல்லி ,
சிலநேரங்களில் நீ
சிற்றுண்டியை
சீண்டாமலே போகலாம் !

அலுவலகத்தில்
இருக்கையில் அமர்ந்தாலே
இக்கட்டுகள் உன்னோடு
சொக்கட்டான் ஆடலாம் !

அடுப்பு எரிவது போல் - உன்னுள்
கடுப்பு எரியலாம் !

மேலதிகாரியின்
முகம் பார்க்காத நாளையே
மாபெரும் நாளாய்
மனது கொண்டாடலாம் !

ஒருவாய் சோற்றிற்கும்
ஒருபாய் உறக்கத்திற்கும்
பகலெல்லாம்
பேய்பாடு படுவதும்
நித்தம் நித்தம்
நாய்பாடு படுவதும்
எதற்க்காக ?
சிறிது சிறிதாய்
சாவின் பக்கம்
சாயத்தானே ?
ஒருநாள்
அனைத்தும் அடங்கி
ஒயத்தானே ?
என்று நீ
தத்துவங்களின்
தத்துப்பிள்ளை ஆகலாம் !

ஆனாலும் வாலிபா .........
சிகரங்களில் சிம்மாசனம்
கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம்
பாடுகள் பட்டு
மேடுகள் ஏறியவர்கள்தான் என - வரலாற்றின்
ஏடுகள் புரட்டிப்பார் புரியும் !

நெற்றியின் வியர்வை
நிலத்தில் விழாவிட்டால் - உனது
வெற்றியின் வேர்
உலர்ந்து விடும் !
உழைப்புக்கு அஞ்சாதே !
உனக்கொரு பொழுது
விரைவிலேயே
புலர்ந்து விடும் !

வாழ்வே
வெறுப்பாயிருக்கிறது என
விலைகொடுத்து நீ போதையை
வாங்கினால் ,
இன்னல்களுக்கு நீயே
ஜன்னல் திறப்பது போலாகும் !

உனது விரக்தியின்
வாயில் அடைபட
வாரம் ஒருமுறை
கோயில் செல் !

தெரியாமல்
காலை மிதித்தாலும்
அதனைப் புன்னகையோடு ஏற்கும்
நல்ல உள்ளங்களை
அங்கே காணப்பெறுவாய் !

தாய்தந்தையரின்
தோளில் தலைசாய்த்தபடி
உன்னைப் பார்த்து பார்த்து
சிரிக்கும் குழந்தைகள் வடிவில்
அங்கே கடவுள் உனக்கு
தரிசனம் தரலாம் !

அயல் நாட்டில்
பணியில் இருக்கும்
தன் மகன் போலவே
நீயிருக்கிறாய் என
பாசத்தோடு உன்னைப்பார்க்கும்
வயது முதிர்ந்தோரின்
ஆசிர்வாதங்கள்
அங்கே உனக்குக் கிடைக்கலாம் !

கடவுள் உனக்குக்
கல்லாகவே தெரிந்தாலும்
இரண்டு நிமிடங்கள்
கண்களை மூடி நின்றுபாரேன் !
கவலைகள் அனைத்தும்
சலவை செய்யப்பட்டு
உன் மனது
வெண்மையாய் மாறிவிட்ட
உண்மையை உணர்வாய் !

தொலைகாட்சி பார்க்கும்
உனது தாயை
ஒருநாள் கவனித்துப்பார் தெரியும் !
நெகிழ்ச்சியான காட்சிகளில்
அவள் தன் கண்ணீரை
எத்தனை முறை துடைத்துக்கொள்கிறாள் என்று !
அந்த நல்ல மனம்
புண்படாமல் வாழ்ந்தாலே
சமுதாயம் உன்னைப்
பண்பட்ட மனிதன் என்று போற்றும் !

உனது சக்திக்குத் தகுந்தபடி
தங்கைக்கு ஒரு அணிகலன்
வாங்கித்தாயேன் !
அண்ணன் வாங்கித்தந்தது என
ஆண்டு முழுவதும்
அண்டை அயலாரிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் !

படகுகளும்
துடுப்புகளும் உனக்காகக்
காத்திருக்கும் போது
துன்பத்தின் கடலை
நீந்திக் கடக்க முயல்வது
அறிவீனம் என்று
அறிந்து கொள் தோழா !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...