Skip to main content
ஊடல் இருந்தாலும்
காதல் குறைவதில்லை .........

இப்போதெல்லாம்
காதலோடு தொடங்குகிற
நம் உரையாடல் ,
முடியும் போது
மோதலோடுதான் முடிகிறது !

முன்பெல்லாம்
காதலின் பசிக்கு
ஊடலை ,
ஊறுகாய் போலத்தான்
தொட்டுக்கொண்டிருந்தோம் !
இப்போது அதையே
உணவாக மாற்றி
உணர்வுகளை ஓயாமல்
சுட்டுக்கொண்டிருக்கிறோம் !

நான்கு நாள் தாடியோடு
நானிருந்தது
நாகரிகமாயில்லை என
நறுக்கென்று
நீ எடுத்துரைத்ததும் ,
மாலை நெருங்கும் போது
மதிய உணவு கொண்டால்
உடலானது உபாதைகளின்
புதிய உணவு ஆகிவிடும் என்று நான்
திட்டியபடியே உன் தலையில்
குட்டியதும் என
அழகாய்த்தான் ஆரம்பித்தது
நம் முதல் ஊடல் !

அழைத்த போது
அலைபேசி
அடித்துக்கொண்டே இருந்தது
எங்குதான் தொலைந்தாய் என
எதோ ஒரு மதியத்தில்
எக்குத்தப்பாய் நான் உன்னிடம்
எகிறியதும் ,
" அது என் தனிப்பட்ட
அந்தரங்கம் . " என
தந்திரமாய் நீ என்னைத்
திருப்பிதாக்கியதும் என
நம் இரண்டாவது ஊடலே
இதயங்களில் இடியை
இறக்கியது !

வலையில் தான்
உலவிக்கொண்டிருக்கிறாயே
சிறிது அரட்டையடிக்கலாம் என
ஆசையைத் திரட்டி நான்
அன்பு அழைப்பு விடுத்தால் ,
வேலையிருக்கிறது வேண்டாம்
என என்னை விரட்டி விடுகிறாய் !
கோபத்தில் வசைகளால் நான்
உன்னைப் புரட்டி விடுகிறேன் !
இப்படியே போனால் பிறகு
பிரிந்து விடுவதுதான் என
பதிலுக்கு நீயும் என்னை மிரட்டி விடுகிறாய் !

சனிக்கிழமை சாயங்காலம்
சந்திப்பது என நாம்
சிந்தித்து முடிவெடுத்து ,
சரியான சமயத்தில் நானும் வந்து
சலிக்க சலிக்க காத்திருப்பேன் !
இரண்டு மணிநேரமாகியும்
நீ வராததால்
மிரண்டு போன விழிகளோடு
அரண்டு போய் நின்றிருப்பேன் !
அப்போது பார்த்து நீ
அலைபேசியில் அழைத்து ,
" பெரிய பாளையத்தில் இருந்து
பெரியம்மா வந்திருப்பதால்
பெருமுயற்சி செய்தும்
புறப்பட்டு வர இயலவில்லை !
பிறிதொருநாள் சந்திக்கலாம் ! " என
புலபியபடியே
நீ
பொரிந்து கொட்டுவாய் !
"பிறகு வைத்துக்கொள்கிறேன் " என
இல்லாத வேட்டியை நானும்
வரிந்து கட்டுவேன் !

முந்தைய தேதிகளின்
சேதிகளை நாம்
பேசிப்பேசி மகிழ்ந்திருக்கும் போது
ஊசிபோல ஊடே நுழைந்து
ஊறு விளைவிக்கும்
வேறு அழைப்பிற்காக ,
பாதியில் என்னைப் புறக்கணித்து
ஆதியோடு அந்தமாய்
அங்கே நீ அளந்து கொண்டிருப்பாய் ! - நானோ
மீதிக்கதை பேச வழியின்றி
வீதியில் நிற்கும் விளக்குக்கம்பமாய்
நாதியற்று நேரம்போக நின்றிருப்பேன் !
அதற்குள் நீயோ , என்னை
சோதித்து வதைப்பதில் ,
சாதித்து முடித்திருப்பாய் !
நானோ ,
தாள முடியாத கோபத்தில்
தொலைபேசியைத் தரைக்குத்
தாரை வார்த்திருப்பேன் !

இப்படி ,
எவ்வளவு தான்
ஊடல் இருந்தாலும் ,
எள்ளளவும் குறைவதில்லை
நம் மீது நாம் கொண்ட காதல் !

வசதியில் வனப்பில்
உச்சமாய் இருக்கும்
உனக்கான வரங்களை
துச்சமாய்த் தூக்கிஎறிந்து
எனக்காக நீ காத்திருப்பதும் ,
நம் காதலை
என் வீட்டில் சொல்லியதற்கு
தண்டனையாய்
தாயன்பைத் துறந்து
தினம் தினம் துளித்துளியாய்
நான் இறந்து கொண்டிருப்பதும் , என
எங்கே தள்ளாடினாலும்
அங்கே மட்டும் நம்காதல்
நிமிர்ந்து நின்று விடுகிறதடி !!!













Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...