Skip to main content
மேலதிகாரிகளே ..............




மேலதிகாரிகளே ,
அணியில் நீங்கள் இல்லாவிடினும்
பிணி ஏதும் இன்றிப்
பணி நடந்துகொண்டுதானிருக்கும்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ?





மேலதிகாரிகளே ,
அறிவுரைகளை நீங்கள்
அடுக்கிக்கொண்டே போனால்
மதிப்பிழந்து போகும் உங்கள்
" முகவுரை " என்பதை
மனதில் பதித்துக்கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
சுட்டுவதாலும்
குட்டுவதாலும்
உங்கள்மீது வராத மரியாதை ,
ஆறுதலாய்த் தோளைத்
தட்டுவதால் வருமென்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
புத்தியில் அமிழ்ந்திருக்கும்
பள்ளமும் ,
கண்கள் உமிழ்ந்திருக்கும்
கள்ளமும் ,
ஆகிய இவையிரண்டும்
உங்கள்காலடியில் நீங்கள் பறிக்கும்
பள்ளமென்பதை
உள்ளத்தால் உணர்ந்திடுங்கள் !




மேலதிகாரிகளே ,
பொறுப்பாய் இருக்கிறேனென்று
எந்நாளும் ,
வெறுப்பாய் நீங்களிருந்தால் ,
நற்பெயரென்பது உங்களுக்கான
மறுப்பாகிவிடும் மறந்துவிடாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
கர்வமுடிச்சு அவிழ்ந்தாலே
சர்வசிக்கல்களும்
சரியாகுமென்பதைப்
புரிந்து கொள்ளும்
பக்குவம் உங்களுக்கிருக்கிறதா ?




மேலதிகாரிகளே ,
அனுபவம் தரும்
" மன - பாடத்தை " விடவா
புத்தகத்தின் மனப்பாடம் - உங்கள்
வித்தகத்தை விஸ்தரிக்கப்போகிறது ?




மேலதிகாரிகளே ,
ஒரு குழந்தையின்
குசும்பையே ரசிக்க முடியாத நீங்கள் ,
விசும்பையே வெற்றிகொண்டேனென்று
வீண்பெருமை கொள்ளாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
பலசமயங்களில்
இரைந்து பேசுவதைவிடவும்
கரைந்து பேசுவதென்பது
காரியத்தைச் சாதிக்குமென்பதை
கவனத்தில் வையுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள் மகளின்
பள்ளிவிபரம் தெரியாமல் , - உலகின்
புள்ளிவிபரம் அத்துபடி என்று நீங்கள்
பீற்றிக்கொள்வதில்
பெருமையொன்றுமில்லை !




மேலதிகாரிகளே ,
உடலுழைத்து
நீங்கள் சிந்திய
வியர்வைத்துளிகளை வைத்து
உங்களை மதிப்பிட்டால் ,
அந்த மதிப்பில்
ராஜ்ஜியம் செய்வது வெறும்
பூஜ்ஜியமாகத்தானிருக்கும் !




மேலதிகாரிகளே ,
இறுகியமுகம் உங்களுக்கென்று
இறுமாந்திருக்காதீர்கள் .
அப்படிப்பார்த்தால்
இறந்தவனிடமும் இருக்கிறது
அதே இறுகியமுகம் !




மேலதிகாரிகளே ,
உங்கள் ஊழியர்களின்
சாதனைகளுக்கு
நீங்கள் ஒரு பாட்டாளியாவதும் ,
அவர்களின் தவறுகளுக்குப்
பொறுப்பு ஏற்பதில்
நீங்கள் ஒரு கூட்டாளியாவதும் - என
தலைமையின்
தலையாய பண்பே
இந்த இரண்டும்தானென்பதை
இதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள் !!!






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...