Skip to main content
காதல் வந்த பிறகு ........


எப்போதும் இருக்கும்
உலகம் தான் !
இப்போது மட்டும்
நிறம் மாறித்தெரிகிறது !

எப்போதும் பார்க்கிற
மனிதர்கள்தான் !
ஆனால் அவர்களின்
மகிழ்வான தருணங்களில்
அவர்களுக்கு நான்
எதிர்படுகிறேன் !

எப்போதும் இருக்கும்
அதே அலுவலகம் தான் !
இப்போதுமட்டும்
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்தாலே
கவிதை கவிதையாக
கற்பனை விரிகிறது !

எப்போதும் கேட்கிற
பாடல்தான் !
இப்போதுமட்டும்
அதன் அர்த்தங்களை
உணர்ந்துகொண்டு
ஆனந்தப்படுகிறது மனது !

இப்போதெல்லாம்
மழை வந்தால்
கண்கள் முதலில்
வானவில்லைத்தான்
தேடுகின்றன !

இப்போதெல்லாம்
சக ஊழியனோடு
சண்டையே வருவதில்லை !

மொட்டைமாடியை விட
உன்னதமான ஒரு இடம்
உலகத்தில் வேறு ஏதாவது
இருக்கிறதா என்ன ?

இப்போதெல்லாம்
நானிருக்கும் இடத்தில்
அழகான பெண்களும்
இருக்கிறார்கள் !
ஆனால் ,
அவர்களைப் பார்க்கத்தான்
ஏனோ தோன்றுவதில்லை !

இப்போதெல்லாம்
குறைவான உணவை
நீண்ட நேரம் உண்கிறேன் என்று
அம்மா அடிக்கடி
குறைபட்டுக் கொள்கிறாள் !

இப்போதெல்லாம்
தன்னுடைய
அழகுசாதனப்பொருட்களை
நானெடுத்துப்
பூசிக்கொள்கிறேன் என்று
தங்கை தினமும்
என்னை ஏசிக்கொண்டிருக்கிறாள் !

இப்போதெல்லாம்
காதலின் காய்ச்சலின்
தேகம் எப்போதும்
திளைத்திருப்பதால்
வேலைநிறுத்தம்
செய்துவிட்டன போலும்
என் உடலின்
வியர்வைச்சுரப்பிகள் !

இப்போதெல்லாம்
ஆபாச சுவரொட்டிகள்
அருவருப்பாயிருக்கின்றன !

சந்தேகமேயில்லாமல்
இப்போதெல்லாம்
சந்திக்கும் பெண்களையெல்லாம்
சகோதரிகளாகத்தான்
நினைக்கிறேன் நான் !

இப்போதெல்லாம்
அலுவலகத்தில் எனக்கு
வேலையே இருப்பதில்லை !
ஆனாலும்
பொசுக்கென்று ஏன்
பலரும் பாராட்டித் தொலைக்கிறார்கள்
என்பதுதான் புரிவதில்லை !

இப்போதெல்லாம்
தொலைகாட்சியிலோ
திரைப்படத்திலோ ,
நெகிழ்ச்சியான காட்சி வந்தால்
கண்களில் தானாக
கண்ணீர் வழிவதை
சத்தியமாக என்னால்
நம்பவேமுடியவில்லை !!!








Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...