Skip to main content
முகநூல் அழகி






முதன் முதலில்


முகநூலில் அவள்


முகம் பார்த்தேன் !




பால்நிலவொளி


பளிங்குக்கல்லில்


பட்டுத்தெறித்தது போல


பைங்கிளியவள்


பட்டொளிவீசிக்கொண்டிருந்தாள் !




" நான் நலம்


நீ நலமா ? " என்று


நாசுக்கானதொரு


நேசவரியை அனுப்பிவைத்து


நாட்கணக்காய்


நகம்கடித்துக் காத்திருந்தேன் !




நான்கு நாட்கள் கழித்து


நான் யார் என்பதை


யூகிக்க முடியாமல்


" யார் இது ? " என்று


ஒரே ஒருவரியை மட்டும்


ஒப்புக்கு அனுப்பியிருந்தாள் !




எதிர்பாராத அவள்


எதிர்வினை கண்டு


மேற்கொண்டு என்ன செய்வதென


மேலும் மேலும் யோசிக்கலானேன் !




நான்


அனுப்பியது போன்றதொரு


அன்புத்தூதை அநேகமாக


ஆயிரம் பேராவது


அவளுக்கு அனுப்பியிருப்பார்கள் .


அவளும் அவைகளை


அழகாக மறுத்து மறுத்து


வெறுத்துப் போயிருப்பாள் !


நான் அவளுக்கு அந்த


ஆயிரத்தோடு ஒருவனாய்


ஆவதா ? அல்லது


ஆயிரத்தில் ஒருவனாய்


ஆவதா ? என்பதை


ஆண்டவனால் கூட


அனுமானிக்க முடியாது என்று


அடிமனதில் ஒரு அவலக்குரல்


அடிக்கடி சொல்லித்தொலைத்தது !




கொதிநீருள்ள


கண்ணாடிக் குடுவையை


கைகளில் வைத்துக்கொண்டு


கயிற்றின் மீது நடக்கிறாயே


கடன்காரா ! என்று


மனசாட்சி மௌனமாய்


மனதிற்குள் சிரித்தது !




இருந்தாலும்


இயன்றவரை


முயன்று பார்ப்பதை


அனுபவத்திலும் சிறிது


பயின்று பார்ப்போமே என்று ,


" நான் இன்னார் .


இங்கு பணிபுரிகிறேன்


உன்னோடு நட்புச்செய்ய


உவப்பாய் உள்ளேன்


விருப்பமிருந்தால்


விருப்பம் தெரிவி ! " என்று


நாகரிகமாய் நயந்து


அனுப்பினாலும்


பதில் வருமோ வராதோ என


பயந்து காத்திருந்தேன் !




பத்து நாளாகியும்


பதில் வராததால்


" போடி இவளே ! " என்று


பிழைப்பைப் பார்க்கப்


புகுந்த போது ,


முகநூலில் அவள்தன்


முகவுரை அனுப்பியிருப்பதை


மின்னஞ்சல் ஒன்று


மின்னல் போல அறிவித்ததில்


இதயத்தில் ஓர்


இன்பப்பின்னல்


இதமாய் வந்து விழுந்தது !




முகவுரை அனுப்பியவளுக்கு


பக்கத்தை நிரப்பி


பதிலுரை எழுதி ,


பதில் வருமா என


பைத்தியகாரன் போல


பரிதவித்திருந்தேன் !




சிலநாட்கள் கழித்து


சாவகாசமாக ,


" சரி " என்று மட்டும்


செய்தியனுப்பினாள்


சதிகாரி !




அடுத்ததாக அவளது


அலைபேசி எண் கேட்டு


அறிவுகெட்டு அரைவரியில்


அனுப்பினேன் மறுசெய்தி !


சுக்கிரன் எனக்கு


சூனியம் வைத்து விட்டான் போலும் !


பழையபடியே


பத்து நாளாகியும்


பதிலில்லை !




ஆனாலும் ஒரு


நப்பாசையில் ,


அவள் மீதிருந்த


தப்பாசையில் ,


முகநூலை ,


மீண்டும் மீண்டும் திறந்தேன் !


அன்றாட அலுவலை


அடிக்கடி மறந்தேன் !


அவள் நினைவாலேயே


மனத்தால் மட்டும்


மறுபடி மறுபடி இறந்தேன் !




மாதம் ஒன்று


உருண்டு போயிருந்த போது


அவள் முகம்


என் மனத்திரையில்


இருண்டு போயிருந்தது !


பிழைப்பு


பிழைத்திருத்தம் செய்யப்பட்டு


பழையபடி பங்கமில்லாமல் நடந்தது !




ஆனால் ,




மந்தகாசமான


ஒரு வெள்ளிக்கிழமை


மாலையில் ,


முகநூலை


மறுபடியும் திறந்தபோது


மற்றொருத்தியின்


முகம் பார்த்தேன் !




தங்கத் துகள் கொண்டு


அங்கம் செய்தது போல


மினு மினுவென


மின்னிக்கொண்டிருந்தாள் அந்த


முகநூல் அழகி !!!




" நான் நலம்
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருக்கலானேன் !!!






குறிப்பு : முகநூல் - face book




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...