முகநூல் அழகி
முதன் முதலில்
முகநூலில் அவள்
முகம் பார்த்தேன் !
பால்நிலவொளி
பளிங்குக்கல்லில்
பட்டுத்தெறித்தது போல
பைங்கிளியவள்
பட்டொளிவீசிக்கொண்டிருந்தாள் !
" நான் நலம்
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருந்தேன் !
நான்கு நாட்கள் கழித்து
நான் யார் என்பதை
யூகிக்க முடியாமல்
" யார் இது ? " என்று
ஒரே ஒருவரியை மட்டும்
ஒப்புக்கு அனுப்பியிருந்தாள் !
எதிர்பாராத அவள்
எதிர்வினை கண்டு
மேற்கொண்டு என்ன செய்வதென
மேலும் மேலும் யோசிக்கலானேன் !
நான்
அனுப்பியது போன்றதொரு
அன்புத்தூதை அநேகமாக
ஆயிரம் பேராவது
அவளுக்கு அனுப்பியிருப்பார்கள் .
அவளும் அவைகளை
அழகாக மறுத்து மறுத்து
வெறுத்துப் போயிருப்பாள் !
நான் அவளுக்கு அந்த
ஆயிரத்தோடு ஒருவனாய்
ஆவதா ? அல்லது
ஆயிரத்தில் ஒருவனாய்
ஆவதா ? என்பதை
ஆண்டவனால் கூட
அனுமானிக்க முடியாது என்று
அடிமனதில் ஒரு அவலக்குரல்
அடிக்கடி சொல்லித்தொலைத்தது !
கொதிநீருள்ள
கண்ணாடிக் குடுவையை
கைகளில் வைத்துக்கொண்டு
கயிற்றின் மீது நடக்கிறாயே
கடன்காரா ! என்று
மனசாட்சி மௌனமாய்
மனதிற்குள் சிரித்தது !
இருந்தாலும்
இயன்றவரை
முயன்று பார்ப்பதை
அனுபவத்திலும் சிறிது
பயின்று பார்ப்போமே என்று ,
" நான் இன்னார் .
இங்கு பணிபுரிகிறேன்
உன்னோடு நட்புச்செய்ய
உவப்பாய் உள்ளேன்
விருப்பமிருந்தால்
விருப்பம் தெரிவி ! " என்று
நாகரிகமாய் நயந்து
அனுப்பினாலும்
பதில் வருமோ வராதோ என
பயந்து காத்திருந்தேன் !
பத்து நாளாகியும்
பதில் வராததால்
" போடி இவளே ! " என்று
பிழைப்பைப் பார்க்கப்
புகுந்த போது ,
முகநூலில் அவள்தன்
முகவுரை அனுப்பியிருப்பதை
மின்னஞ்சல் ஒன்று
மின்னல் போல அறிவித்ததில்
இதயத்தில் ஓர்
இன்பப்பின்னல்
இதமாய் வந்து விழுந்தது !
முகவுரை அனுப்பியவளுக்கு
பக்கத்தை நிரப்பி
பதிலுரை எழுதி ,
பதில் வருமா என
பைத்தியகாரன் போல
பரிதவித்திருந்தேன் !
சிலநாட்கள் கழித்து
சாவகாசமாக ,
" சரி " என்று மட்டும்
செய்தியனுப்பினாள்
சதிகாரி !
அடுத்ததாக அவளது
அலைபேசி எண் கேட்டு
அறிவுகெட்டு அரைவரியில்
அனுப்பினேன் மறுசெய்தி !
சுக்கிரன் எனக்கு
சூனியம் வைத்து விட்டான் போலும் !
பழையபடியே
பத்து நாளாகியும்
பதிலில்லை !
ஆனாலும் ஒரு
நப்பாசையில் ,
அவள் மீதிருந்த
தப்பாசையில் ,
முகநூலை ,
மீண்டும் மீண்டும் திறந்தேன் !
அன்றாட அலுவலை
அடிக்கடி மறந்தேன் !
அவள் நினைவாலேயே
மனத்தால் மட்டும்
மறுபடி மறுபடி இறந்தேன் !
மாதம் ஒன்று
உருண்டு போயிருந்த போது
அவள் முகம்
என் மனத்திரையில்
இருண்டு போயிருந்தது !
பிழைப்பு
பிழைத்திருத்தம் செய்யப்பட்டு
பழையபடி பங்கமில்லாமல் நடந்தது !
ஆனால் ,
மந்தகாசமான
ஒரு வெள்ளிக்கிழமை
மாலையில் ,
முகநூலை
மறுபடியும் திறந்தபோது
மற்றொருத்தியின்
முகம் பார்த்தேன் !
தங்கத் துகள் கொண்டு
அங்கம் செய்தது போல
மினு மினுவென
மின்னிக்கொண்டிருந்தாள் அந்த
முகநூல் அழகி !!!
" நான் நலம்
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருக்கலானேன் !!!
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருக்கலானேன் !!!
குறிப்பு : முகநூல் - face book
Comments
Post a Comment