Skip to main content
உத்தமக் காதலியே ...........




நான் நானாகவும் ,


நீ நீயாகவும் இருந்து - பிறகு


நான் நீயாகவும்


நீ நானாகவும் மாறிப்போனதன்


மர்மம் உணர்கிறாயா


என் மனங்கவர்ந்தவளே !




மௌனத்தின் மொழிகற்றதும்


விழிகளால் பேசும் கலை அறிந்ததும்


காத்திருப்பின் சுகம் புரிந்ததும்


நம் காதலால் தானென்று


என்னைபோலவே நீயும் உணர்கிறாயா


என் இதயத்திருடியே !




பேசிகொண்டிருந்த


எத்தனையோ இரவுகளில்


யார் முதலில் தூங்கிப்போனாலும்


மறுநாளே மனமார


மன்னிப்புக் கேட்பதும் ,


மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான்


மன்னிப்பில்லை என்று


பொய்யாகக் கோபிப்பதும் என


விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில்


வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று


விளங்குகிறதா வசந்தம்தந்தவளே !




அலுவலுக்கு நடுவே ,


அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும்


பிறகு ,


பேச்சிற்கு நடுவே


அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் ,


அதன் பின்


பேசிக்கொண்டிருப்பதே


அலுவல் ஆனதும் என


அன்றாட வழக்கங்கள் அனைத்தும்


அப்படியே தலைகீழானதன்


சூட்சமம் தெரிகிறதா


என் இனிய சூனியக்காரியே !




கல்லூரி செல்வதாய் நீயும்


அலுவலகம் செல்வதாய் நானும்


அவரவர் வீட்டில் அழகாகப் பொய்சொல்லி ,


பொதுவானதொரு பேருந்து நிலையத்தில்


பதைபதைத்து சந்தித்து


கோவிலுக்குப் போவதாய்த்


தீட்டியிருந்த திட்டத்தைக் கைவிட்டு


திரைப்படம் போகலாமென


திடீரெனத் தீர்மானித்து


கூட்டமில்லாதொரு திரையரங்கில்


தனியிடம் தேடியமர்ந்து ,


தவறு செய்கிறோமோ என்ற


தடுமாற்றத்தில் ,


பாதிப் படத்திலேயே எழுந்து வந்து


மீதிப் பொழுது கழிக்க


பூங்காவிற்குச் சென்று


பூக்களைப் பார்த்துக் கொண்டே


பேசிக்கொண்டிருந்து விட்டு


பிறகு பசியெடுத்தது என


கொண்டுவந்த மதியஉணவை


மாறி மாறிப் பகிர்ந்துண்டு


மகிழ்ந்திருக்கும் நாட்களை


மறக்க முடியுமா


என் மனதின்நாயகியே !




நான் வாழ்த்துக்கூறிய தேர்வில்


முதல் மதிப்பெண் பெற்றதை


மகிழ்ச்சியோடு நீ சொன்னபோது ,


கைம்மாறாய் கையிலாவது முத்தம் கொடு என


நான் சண்டித்தனம் செய்ததும்


முடியவே முடியாதென


மருகி நீ மறுத்ததும் பிறகு


வாடிய என் முகம் கண்டு


என் கன்னத்திலே நீ


கனியிதழ் பதித்ததும் ,


வண்ண வண்ண விண்மீன்கள் என்


விழிகளில் வட்டமிட்டதும் என


காதலில் வாழ்கிற கவிதை நாட்களை


கவனிக்கிறாயா


என் கனவுதேவதையே !




நானும் நீயும்


நடந்து போகும்போது ,


எதிரில் வரும்


'எக்குத்தப்பான ' பெண்களை


ஏக்கமாய் நான் பார்த்தால்


தலையில் குட்டியிருக்கிறாய்


கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாய்


" அவள் பின்னாலேயே போ ! " என


செல்லமாய்க் கடிந்திருக்கிறாய் !


ஆனால் ஒருநாள் கூட


" பதிலுக்கு நானும் பிறஆண்களைப்


பார்த்தால் என்ன ஆகும் ? " என்று


நீ கேட்டதேயில்லை !


ஒருநாள் இதை


உன்னிடமே கேட்டுவிட்டேன் .


அப்போது நீ சொன்னாய் ,


" உன்னோடு இருக்கும்போது


என் உலகமே நீயாக இருப்பதால்


புறவுலகம் மறந்துவிடுகிறதடா


பைத்தியகாரா ! " என்று


என் தலைமுடி கலைத்தபடி !


உணர்ச்சிவசத்தில் என் கண்கள்


தானாய்க் கலங்க


அது கண்டு நீயும் கலங்கி


ஆறுதலாய் என்னை நீ


அணைத்துக் கொள்ளுப்போது


நம் உயிர்கள் ஒன்றுகலப்பதை


உணர்கிறாயா என் உத்தமக்காதலியே !!!






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...