உத்தமக் காதலியே ...........
நான் நானாகவும் ,
நீ நீயாகவும் இருந்து - பிறகு
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறிப்போனதன்
மர்மம் உணர்கிறாயா
என் மனங்கவர்ந்தவளே !
மௌனத்தின் மொழிகற்றதும்
விழிகளால் பேசும் கலை அறிந்ததும்
காத்திருப்பின் சுகம் புரிந்ததும்
நம் காதலால் தானென்று
என்னைபோலவே நீயும் உணர்கிறாயா
என் இதயத்திருடியே !
பேசிகொண்டிருந்த
எத்தனையோ இரவுகளில்
யார் முதலில் தூங்கிப்போனாலும்
மறுநாளே மனமார
மன்னிப்புக் கேட்பதும் ,
மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான்
மன்னிப்பில்லை என்று
பொய்யாகக் கோபிப்பதும் என
விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில்
வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று
விளங்குகிறதா வசந்தம்தந்தவளே !
அலுவலுக்கு நடுவே ,
அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும்
பிறகு ,
பேச்சிற்கு நடுவே
அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் ,
அதன் பின்
பேசிக்கொண்டிருப்பதே
அலுவல் ஆனதும் என
அன்றாட வழக்கங்கள் அனைத்தும்
அப்படியே தலைகீழானதன்
சூட்சமம் தெரிகிறதா
என் இனிய சூனியக்காரியே !
கல்லூரி செல்வதாய் நீயும்
அலுவலகம் செல்வதாய் நானும்
அவரவர் வீட்டில் அழகாகப் பொய்சொல்லி ,
பொதுவானதொரு பேருந்து நிலையத்தில்
பதைபதைத்து சந்தித்து
கோவிலுக்குப் போவதாய்த்
தீட்டியிருந்த திட்டத்தைக் கைவிட்டு
திரைப்படம் போகலாமென
திடீரெனத் தீர்மானித்து
கூட்டமில்லாதொரு திரையரங்கில்
தனியிடம் தேடியமர்ந்து ,
தவறு செய்கிறோமோ என்ற
தடுமாற்றத்தில் ,
பாதிப் படத்திலேயே எழுந்து வந்து
மீதிப் பொழுது கழிக்க
பூங்காவிற்குச் சென்று
பூக்களைப் பார்த்துக் கொண்டே
பேசிக்கொண்டிருந்து விட்டு
பிறகு பசியெடுத்தது என
கொண்டுவந்த மதியஉணவை
மாறி மாறிப் பகிர்ந்துண்டு
மகிழ்ந்திருக்கும் நாட்களை
மறக்க முடியுமா
என் மனதின்நாயகியே !
நான் வாழ்த்துக்கூறிய தேர்வில்
முதல் மதிப்பெண் பெற்றதை
மகிழ்ச்சியோடு நீ சொன்னபோது ,
கைம்மாறாய் கையிலாவது முத்தம் கொடு என
நான் சண்டித்தனம் செய்ததும்
முடியவே முடியாதென
மருகி நீ மறுத்ததும் பிறகு
வாடிய என் முகம் கண்டு
என் கன்னத்திலே நீ
கனியிதழ் பதித்ததும் ,
வண்ண வண்ண விண்மீன்கள் என்
விழிகளில் வட்டமிட்டதும் என
காதலில் வாழ்கிற கவிதை நாட்களை
கவனிக்கிறாயா
என் கனவுதேவதையே !
நானும் நீயும்
நடந்து போகும்போது ,
எதிரில் வரும்
'எக்குத்தப்பான ' பெண்களை
ஏக்கமாய் நான் பார்த்தால்
தலையில் குட்டியிருக்கிறாய்
கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாய்
" அவள் பின்னாலேயே போ ! " என
செல்லமாய்க் கடிந்திருக்கிறாய் !
ஆனால் ஒருநாள் கூட
" பதிலுக்கு நானும் பிறஆண்களைப்
பார்த்தால் என்ன ஆகும் ? " என்று
நீ கேட்டதேயில்லை !
ஒருநாள் இதை
உன்னிடமே கேட்டுவிட்டேன் .
அப்போது நீ சொன்னாய் ,
" உன்னோடு இருக்கும்போது
என் உலகமே நீயாக இருப்பதால்
புறவுலகம் மறந்துவிடுகிறதடா
பைத்தியகாரா ! " என்று
என் தலைமுடி கலைத்தபடி !
உணர்ச்சிவசத்தில் என் கண்கள்
தானாய்க் கலங்க
அது கண்டு நீயும் கலங்கி
ஆறுதலாய் என்னை நீ
அணைத்துக் கொள்ளுப்போது
நம் உயிர்கள் ஒன்றுகலப்பதை
உணர்கிறாயா என் உத்தமக்காதலியே !!!
Comments
Post a Comment