Skip to main content
சமூக முதிர்ச்சி





சேர்ந்தாற்போல
நான்கு இளைஞர்கள்
நடந்து போனால்
காட்டாயம் அவர்களிடம்
மதுவாசம் !

தகாத வார்த்தைகளால்
தந்தையைத் திட்டுகிறான்
ஒரு சிரிப்பு நடிகன் !
தியேட்டரில்
கைதட்டுகிறார்கள் !

பள்ளிச்சிறுமி ,
கையில் அலைபேசி ,
நமட்டுச் சிரிப்பு
அடிவயிற்றில் பகீர் !

ஆசிரியர்களை 
வேவு பார்க்க
மாணவர்களை
நியமிக்கும்
பள்ளி நிர்வாகம் !

ஜோதிடர்களின்
தயவால் தான்
இன்னும்
கூட்டமிருக்கிறது
கோவில்களில் !

காதல் பேசுவது
பெண்களுக்குப்
பொழுது போக்கு !
இளைஞர்களுக்கு
பிறவிப் பயன் !

முகநூலை
தடை செய்தால்
லட்சக்கணக்கில்
தீக்குளிப்பு கட்டாயம் !

அருந்தமிழ் நாட்டில்
அடுக்கு மொழியில்
ஆங்கிலம் பேசும்
ஐந்து வயதுக் குழந்தைக்கு
அம்மா என்ற வார்த்தை
தெரியவில்லை !
பலே !

பந்தி போடும்
வரை தான்,
கல்யாண வீடுகளில்
கூட்டமெல்லாம் !

வரிக்கு
விலக்கிருப்பதை
உறுதி செய்த பின்புதான்
வக்கற்றோரை நோக்கி
உதவிக் கரங்கள்
நீள்கின்றன !

கற்பு என்பது
கெட்ட வார்த்தை !

பாசம் என்பது
மூட நம்பிக்கை !

புனிதம் என்பது
பைத்தியகாரத்தனம் !

பற்றியெரியும்
குடிசையின் முன்
குளிர்காய்கிறார்கள் !
ஒளி கொடுக்கும்
தீபத்தை
ஊதி அணைக்கிறார்கள் !
மாற்று சிந்தனையாம் !

" பெண்களுக்கென்று
தனியாக
மதுபானக் கடைகள்
திறக்கப் படும் "
அடுத்த
தேர்தலுக்கு
ஒரு வாக்குறுதி
தயார் !

" எதற்கும் சற்று
வறுமைக் கோட்டை
இறக்கியே போடு ! "
ஐநா சபைக்கு
கணக்குக் காட்ட
உதவும் !

இனிவரும்
இன்குபேட்டர்களில்
கருமுட்டைகள்
குழந்தைகளாகும் !

' இதிலென்ன தப்பு ? ' என்று
இறைச்சிக் கடைகளில்
இறந்தவர்களின்
சடலங்கள்
தொங்கும் நாள்
இதோ வந்துகொண்டிருக்கிறது !

" சமூக முதிர்ச்சி "
என்பதன் பொருளே
மேற்சொன்ன
மாற்றங்களை
ஏகோபித்து
ஏற்றுக் கொள்வதுதானே !
வேறென்ன ???










Comments

  1. சமூக முதிர்ச்சி மிகவும் கவலைப்பட வைக்கிறது. ஆக்கம் அருமை.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...