கர்மா
அது ஒரு
நட்சத்திர நடிகனின்
படம் !
அதற்குத்தான்
போவேனென்று
நண்பன்
ஒரே அடம் !
அதுதான்
அப்படத்தின்
முதல் நாள்
ஓட்டம் !
அதனாலேயே
அங்கு நிலவியது
கட்டுக்கடங்காத
கூட்டம் !
எப்படியோ
வந்து விட்டோம் !
சீட்டு வாங்குவதற்குள்
நொந்து விட்டோம் !
ஒளிர்ந்தது
திரை !
ஆரம்பித்தது
விசில்களின்
உரை !
அங்கே
' தலைவன் '
படுத்துக்கொண்டே
போட்டான்
சண்டை !
கத்திக் கத்தியே
ஒவ்வொருவனுக்கும்
வறண்டது
தொண்டை !
நாங்கள்
அமர்ந்திருந்தது
அரங்கத்தின்
கடைசி வரிசையில் !
மூலையில் இருந்து
முதல்
மூன்று இருக்கைகளில்
அவர்கள் இருந்தார்கள் !
ஞாயிறுதோறும்
சந்தை செல்லும் - ஒரு
தந்தை !
வீட்டில்
சும்மாயிருக்கும் - ஒரு
அம்மா !
அப்புறம் அவள்,
அவர்களின் மகள் !
அவர்கட்கு அடுத்து
நண்பனும் நானும் !
அவள்,
பக்குவமான
பருவத்தில்
இருந்தாள் !
இளமையைப்
பதற வைக்கும்
உருவத்தில்
இருந்தாள் !
கன்னியைக் கண்டதும்
நண்பனுக்கு
மூக்கு
விடைத்துக் கொண்டது !
காது,
அடைத்துக் கொண்டது !
அவன்,
அடிக்கடி
அவளைப் பார்த்து
மலைத்தான் !
கலைந்த தலையை
மறுபடி மறுபடி
கலைத்தான் !
சந்தர்ப்பம் உருவாக்க
வேண்டுமென்றே
வண்டி சாவியைத்
தொலைத்தான் !
குறும்புக் காரன் என்று
அக்குடும்பத்தின் மனதில்
நிலைத்தான் !
அதுமட்டுமா,
கன்னியைக்கவர
இவன் பங்குக்கு
கத்திக் கத்தியே
கலங்கடித்தான்
அரங்கை !
அவன்
சேஷ்டைகள் யாவும்
ஒத்திருந்தன
ஒரு குரங்கை !
பொறுக்க முடியாமல்
நான் கேட்டேன் !
" நண்பா !
இவ்வாறு செய்வது
பண்பா ? "
அவன் சொன்னான்,
" போடா
கையாலாகாத
கோழை !
வாலிபத் தோட்டத்தில் - நீ
வீழ்ந்து விட்ட
வாழை !
வேண்டாமென்றால்
ஒத்திக் கொள் !
ஆனமட்டும் வாயைப்
பொத்திக் கொள் ! "
அவ்வளவுதான்
அமைதியானேன் !
நண்பன்
மீண்டும் ஏறினான்
முருங்கை !
சிதைத்தான்
அக்குடும்பத்தின்
மன ஒருங்கை !
படம்
எப்போது
முடியுமென
அவர்கள்
வெறித்தார்கள் !
முடிந்ததும்
அவசரமாய்
வெளியே
தெறித்தார்கள் !
நண்பன்
மீண்டும் எவளிடமாவது
ஆதியிலிருந்து ஆரம்பிக்க
வீதியை நோட்டமிட்டான் !
அலையென
வந்தவன்
சிலையென
நின்று விட்டான் !
அங்கே,
இருசக்கர வாகனத்தில்
ஒருவனின் முதுகை
ஒட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு மங்கை !
அது
அந்த நண்பனின்
திருமணமாகாத
தங்கை !!!
முடிவில் நல்ல அதிர்ச்சி...
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும், கவிதையை உள்வாங்கி வெளியிட்ட கருத்துக்கும் நன்றி திரு. தனபாலன் அவர்களே !
Delete