அம்மா
உயிர்கள்
அனைத்திற்கும்
முதல் உறவு
அம்மா !
அவள்
இல்லையென்றால்
இந்த உலகம்
வெறும் சும்மா !
போலியாக
அவள்
கண்ணீரை
உகுக்க மாட்டாள் !
பல குழந்தைகள்
என்றாலும்
பாசத்தைப்
பகுக்க மாட்டாள் !
பிள்ளைகளிடத்து
அவள் பார்ப்பதில்லை
தன்மானம் !
அன்பு ஒன்றேதான்
அவள் எதிர்நோக்கும்
சன்மானம் !
எங்கு சென்றாலும்
பின்தொடரும்
அவள்
அன்பு என்ற
கயிறு !
பாசம் உண்டே
பசியாறும்
பெற்றெடுத்த
அவள் வயிறு !
அவள்
பிசைந்து கொடுக்கும்
சோறு
அமுதத்தை மிஞ்சும்
சுவையிலே !
அவளைத்தான்
வணங்க வேண்டும்
ஆன்றோர் இருந்தாலும்
அவையிலே !
தன் மகற்கென்றால்
சிறுமுள் தைத்தாலும்
பதைத்து விடுவாள் !
தனக்கென்றால்
இடியே விழுந்தாலும்
அதைத் தன்னுள்ளே
புதைத்து விடுவாள் !
தாயை
வணங்காதவனுக்கு
இவ்வுலகில்
தகையில்லை !
தாய்க்குப் பிறகுதான்
தெய்வம் என்றாலும்
அது மிகையில்லை !
தாயை
வணங்குவோன்
முந்தி அடைவான்
சிகரத்தை !
அதனால் தான்
வைத்தார்கள்
அவள் பெயரில்
அகரத்தை !
அவள்,
அனுதினமும்
அன்பைக் கொட்டிக்
களிக்க வைப்பாள் !
வயதானாலும்
எண்ணை தேய்த்துக்
குளிக்க வைப்பாள் !
ஊரான்
குழந்தைக்கும்
திறந்துதானிருக்கும்
அவள் இல்லத்தின்
வாயில் !
அவள் இருப்பிடம்
வீடில்லை
கோயில் !
ஒரு துன்பமென்றால்
அவள் தான்
வந்து நிற்பாள்
ஊருக்கு முன்பே !
தாய்ப்பால் என்பதும்
திரவ வடிவிலான
அவள் அன்பே !
எந்த தெய்வமும்
வைத்து எண்ணப்படும்
அவள் அன்புக்குப்
பின்பே !
இடுகாட்டில்
வேகும்போதும்
நமக்காக உருகும்
அவள் என்பே !
Comments
Post a Comment