Skip to main content
அப்பா




தாய்ப்பால் உண்ட உற்சாகத்தில்


தொட்டிலுக்குள்ளே நான்


துள்ளிக்கொண்டிருக்கும் போது


ஆசையோடு எட்டிப்பார்க்கும்


மீசை மனிதராய் எனக்கு


அறிமுகமானவர் நீங்கள் !




வளரும் பிராயத்தில்


நான் உங்களைப்போலவே


நடப்பதாகவும்


உங்களைப்போலவே


பேசுவதாகவும்


ஊர் உலகம் சொல்லும்போதெல்லாம்


பெருமையோடு நீங்கள்


புன்னகை சிந்துவதைப்


பலமுறை பார்த்திருக்கிறேன் !




அம்மா எனக்கு


நிலவை ரசிக்கக்


கற்றுத்தந்தாள் !


நீங்கள் எனக்கு


சூரியனை வணங்கக்


கற்றுத்தந்தீர்கள் !




மிதிவண்டியின் பின்புறம்


என்னை அமர்த்திக்கொண்டு


ஒரு அரசனைப் போல நீங்கள்


நகர்வலம் செல்லும்போது ,


வழிநெடுக எனக்கு


வாழ்க்கைப் பாடம் போதிப்பீர்கள் !




ஒரு நாள் காலையில்


ஆறு பார்க்கப் போவேனென்று


அழுது நான் அடம் பிடிக்க


அழைத்துப் போனீர்கள் !


அங்கே ,


ஆற்று வெள்ளத்தின்


போக்கு புரியாமல்


எதோ ஒரு பள்ளத்தில்


காலை விட்டு ,


நீருக்குள் மூழ்கி


மூச்சடைத்தேன் நான் !


ஆனாலும் நீங்கள்


உடனிருக்கும் தைரியத்தில்


எதிரே வந்த எமனை


எட்டி உதைத்து விட்டு


முட்டி முளைத்தெழுந்தேன் !


சாவின் மீது எனக்கிருந்த பயம்


அன்றோடு செத்துப் போனது !




வாலிபனானதும் நான்


வழிமாறிப்போய்விடக்கூடாதென்று ,


வசைகளாலேயே எனக்கு


திசைகளைக் காட்டியவர் நீங்கள் !




ஆனாலும் ,


" என் மகன் இந்தப்படிப்பு


படித்திருக்கிறான் !


என் மகன் இந்த வேலையில்


இருக்கிறான் !


என் மகன் இந்த சம்பளம்


வாங்குகிறான் ! " என்று


என்னைப் பற்றி ,


பிறரிடம் பெருமையாய்ச்


சொல்லிக் கொள்வதில் தான்


உங்கள் பெருமையே இருக்கிறது !




உள்ளுக்குள்ளே உங்களை


ஆயிரம் விமர்சித்தாலும்


எங்கேயாவது எவனாவது


உங்களைப் பற்றி


பொல்லாங்கு சொன்னால் ,


அவன் முகரையைப் பெயர்க்கும்


முன்கோபத்தில் எனது


மூக்கின் நுனி சிவக்கிறதே !


நம் ரத்த பாசத்தின்


ரசாயனமென்பது இதுதானோ ?




இப்போது கூட


தொலைக்காட்சியில் தனியே


சூரிய வம்சம் படம் பார்க்கையில்


கண்களில் கண்ணீர் வழிவதை


கட்டுப்படுத்த முடியாது என்னால் !






பணி நிமித்தம் உங்களைப்


பிரிந்து வந்த பிறகு


மதுவருந்தும் ஒவ்வொரு


ஞாயிற்றுக் கிழமையிலும்


நான் நினைத்துக் கொள்வேன் ,


நீங்கள் மட்டும்


அருகே இருந்திருந்தால்


அடித்தாவது என்னைத்


திருத்தியிருப்பீர்கள் என்று !




என்னைத் திட்டவோ


அடிக்கவோ செய்ய


உங்களை விட்டால்


உலகத்தில் எவனுக்கு


உரிமை இருக்கிறது ?




இப்போது கூட


நான் தெருவில் நடக்கையில்


என்னைப் புன்னகையோடு விசாரிக்கவும்


நான்கு பேர் இருக்கிறார்கள்


என்று அறியும் போது உணர்கிறேன் ,


உங்களது அத்தனை திட்டுக்களும்


என்னை சிதைத்து விடவில்லை ,


மாறாக செதுக்கியிருக்கின்றன என்று !!!






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...