அப்பா
தாய்ப்பால் உண்ட உற்சாகத்தில்
தொட்டிலுக்குள்ளே நான்
துள்ளிக்கொண்டிருக்கும் போது
ஆசையோடு எட்டிப்பார்க்கும்
மீசை மனிதராய் எனக்கு
அறிமுகமானவர் நீங்கள் !
வளரும் பிராயத்தில்
நான் உங்களைப்போலவே
நடப்பதாகவும்
உங்களைப்போலவே
பேசுவதாகவும்
ஊர் உலகம் சொல்லும்போதெல்லாம்
பெருமையோடு நீங்கள்
புன்னகை சிந்துவதைப்
பலமுறை பார்த்திருக்கிறேன் !
அம்மா எனக்கு
நிலவை ரசிக்கக்
கற்றுத்தந்தாள் !
நீங்கள் எனக்கு
சூரியனை வணங்கக்
கற்றுத்தந்தீர்கள் !
மிதிவண்டியின் பின்புறம்
என்னை அமர்த்திக்கொண்டு
ஒரு அரசனைப் போல நீங்கள்
நகர்வலம் செல்லும்போது ,
வழிநெடுக எனக்கு
வாழ்க்கைப் பாடம் போதிப்பீர்கள் !
ஒரு நாள் காலையில்
ஆறு பார்க்கப் போவேனென்று
அழுது நான் அடம் பிடிக்க
அழைத்துப் போனீர்கள் !
அங்கே ,
ஆற்று வெள்ளத்தின்
போக்கு புரியாமல்
எதோ ஒரு பள்ளத்தில்
காலை விட்டு ,
நீருக்குள் மூழ்கி
மூச்சடைத்தேன் நான் !
ஆனாலும் நீங்கள்
உடனிருக்கும் தைரியத்தில்
எதிரே வந்த எமனை
எட்டி உதைத்து விட்டு
முட்டி முளைத்தெழுந்தேன் !
சாவின் மீது எனக்கிருந்த பயம்
அன்றோடு செத்துப் போனது !
வாலிபனானதும் நான்
வழிமாறிப்போய்விடக்கூடாதென்று ,
வசைகளாலேயே எனக்கு
திசைகளைக் காட்டியவர் நீங்கள் !
ஆனாலும் ,
" என் மகன் இந்தப்படிப்பு
படித்திருக்கிறான் !
என் மகன் இந்த வேலையில்
இருக்கிறான் !
என் மகன் இந்த சம்பளம்
வாங்குகிறான் ! " என்று
என்னைப் பற்றி ,
பிறரிடம் பெருமையாய்ச்
சொல்லிக் கொள்வதில் தான்
உங்கள் பெருமையே இருக்கிறது !
உள்ளுக்குள்ளே உங்களை
ஆயிரம் விமர்சித்தாலும்
எங்கேயாவது எவனாவது
உங்களைப் பற்றி
பொல்லாங்கு சொன்னால் ,
அவன் முகரையைப் பெயர்க்கும்
முன்கோபத்தில் எனது
மூக்கின் நுனி சிவக்கிறதே !
நம் ரத்த பாசத்தின்
ரசாயனமென்பது இதுதானோ ?
இப்போது கூட
தொலைக்காட்சியில் தனியே
சூரிய வம்சம் படம் பார்க்கையில்
கண்களில் கண்ணீர் வழிவதை
கட்டுப்படுத்த முடியாது என்னால் !
பணி நிமித்தம் உங்களைப்
பிரிந்து வந்த பிறகு
மதுவருந்தும் ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமையிலும்
நான் நினைத்துக் கொள்வேன் ,
நீங்கள் மட்டும்
அருகே இருந்திருந்தால்
அடித்தாவது என்னைத்
திருத்தியிருப்பீர்கள் என்று !
என்னைத் திட்டவோ
அடிக்கவோ செய்ய
உங்களை விட்டால்
உலகத்தில் எவனுக்கு
உரிமை இருக்கிறது ?
இப்போது கூட
நான் தெருவில் நடக்கையில்
என்னைப் புன்னகையோடு விசாரிக்கவும்
நான்கு பேர் இருக்கிறார்கள்
என்று அறியும் போது உணர்கிறேன் ,
உங்களது அத்தனை திட்டுக்களும்
என்னை சிதைத்து விடவில்லை ,
மாறாக செதுக்கியிருக்கின்றன என்று !!!
Comments
Post a Comment