பரிசு
ஏதோ ஒரு மழைநாளில்
நிழற்குடையை
மழைக்குடையாக்கி ,
நாம் அருகருகே
நின்றிருக்கும் போது
அதிர வைக்கும் இடியோசை கேட்டு
அர்ச்சுனா அர்ச்சுனா வென்று
இருவரும் ஒருசேரச் சொன்னோமே !
நினைவிருக்கிறதா ?
பூங்காவில் ஒருநாள் ,
புணர்ந்து கொண்டிருந்த
இரண்டு சிட்டுக் குருவிகளுக்குத்
தொந்தரவாய் இருக்குமென்று
வேறிடம் போய் அமர்ந்தோமே
நினைவிருக்கிறதா ?
ஏதோ ஒரு திரைப்படத்தில்
நெகிழ்ச்சியான காதல் காட்சி கண்டு
கலங்கிய நம் கண்களைக்
கைக்குட்டையால்
துடைத்துக் கொண்டோமே !
நினைவிருக்கிறதா ?
உனது பிறந்த நாளின் போது
உதட்டு முத்தம் பகிர்ந்து விட்டு
ஒரு வாரம் முழுக்க இருவரும்
காய்ச்சலில் கிடந்தோமே
நினைவிருக்கிறதா ?
தேர்வில் தோற்றேனென்று
நாள் முழுக்க
நூலகத்தில் பழி கிடந்து
நல்ல புத்தகமொன்றத்
தேடிஎடுத்து நீ தந்த போது
அப்புத்தகத்தின் தடிமன் கண்டு
தலையணை என்று தான்
வருணனை செய்ததற்கு
திட்டிக் கொண்டே
தலையில் குட்டினாயே !
நினைவிருக்கிறதா ?
கடற்கரையில் ஒருநாள்
ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி
நீ உண்பாயென நானும்
நான் உண்பேன் என நீயும்
வெறுமனே பேசிக்கொண்டே இருந்து
சுண்டல் சீண்டப்படாமலேயே இருப்பதைப்
புறப்படும் போது உணர்ந்து கொண்டு ,
எனக்கு நீயும் உனக்கு நானும்
மாறி மாறி ஊட்டிக்கொண்டோமே !
நினைவிருக்கிறதா ?
ஏதோ ஒரு ஊடலில்
நாள் முழுக்கப் பேசாதிருந்து
பின்பு மனது பொறுக்காமல்
குறுஞ்செய்தியாலே
இரவு முழுவதும்
குசலம் விசாரித்தோமே !
நினைவிருக்கிறதா ?
இருசக்கர வாகனத்தில்
இருவரும் போனபோது ,
வேகத்தடை வரும்போதெல்லாம்
உந்துதடையை நான் போட ,
புத்தகப் பையை நடுவில் வைத்து
என் தோள் மீது தலைசாய்த்து
வழிநெடுக வந்தாயே
நினைவிருக்கிறதா ?
ஒருநாள் என்னைத்
தனியே அழைத்து ,
தந்தை சம்மதித்து விட்டாரென்று
தேம்பி அழுத உன்னைத்
தேற்ற முயன்று தோற்றுப்போய்
நானும் அழ ,
ஆனந்தக் கண்ணீரில் இருவரும்
அமிழ்ந்து போனோமே !
நினைவிருக்கிறதா ?
என்னையே நினைத்து ,
என்னையே காதலித்து ,
என்னையே மணந்த
உத்தமக் காதலியே !
தொடங்கி விட்ட நமது
திருமண உறவில்
உனக்கொரு
உயர்ந்த பரிசெனத் தர
இந்த நினைவுகளைத் தவிர
வேறொன்றுமில்லை என்னிடம் !!!
Comments
Post a Comment