Skip to main content
பரிசு




ஏதோ ஒரு மழைநாளில்


நிழற்குடையை


மழைக்குடையாக்கி ,


நாம் அருகருகே


நின்றிருக்கும் போது


அதிர வைக்கும் இடியோசை கேட்டு


அர்ச்சுனா அர்ச்சுனா வென்று


இருவரும் ஒருசேரச் சொன்னோமே !


நினைவிருக்கிறதா ?




பூங்காவில் ஒருநாள் ,


புணர்ந்து கொண்டிருந்த


இரண்டு சிட்டுக் குருவிகளுக்குத்


தொந்தரவாய் இருக்குமென்று


வேறிடம் போய் அமர்ந்தோமே


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு திரைப்படத்தில்


நெகிழ்ச்சியான காதல் காட்சி கண்டு


கலங்கிய நம் கண்களைக்


கைக்குட்டையால்


துடைத்துக் கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




உனது பிறந்த நாளின் போது


உதட்டு முத்தம் பகிர்ந்து விட்டு


ஒரு வாரம் முழுக்க இருவரும்


காய்ச்சலில் கிடந்தோமே


நினைவிருக்கிறதா ?




தேர்வில் தோற்றேனென்று


நாள் முழுக்க


நூலகத்தில் பழி கிடந்து


நல்ல புத்தகமொன்றத்


தேடிஎடுத்து நீ தந்த போது


அப்புத்தகத்தின் தடிமன் கண்டு


தலையணை என்று தான்


வருணனை செய்ததற்கு


திட்டிக் கொண்டே


தலையில் குட்டினாயே !


நினைவிருக்கிறதா ?




கடற்கரையில் ஒருநாள்


ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி


நீ உண்பாயென நானும்


நான் உண்பேன் என நீயும்


வெறுமனே பேசிக்கொண்டே இருந்து


சுண்டல் சீண்டப்படாமலேயே இருப்பதைப்


புறப்படும் போது உணர்ந்து கொண்டு ,


எனக்கு நீயும் உனக்கு நானும்


மாறி மாறி ஊட்டிக்கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு ஊடலில்


நாள் முழுக்கப் பேசாதிருந்து


பின்பு மனது பொறுக்காமல்


குறுஞ்செய்தியாலே


இரவு முழுவதும்


குசலம் விசாரித்தோமே !


நினைவிருக்கிறதா ?




இருசக்கர வாகனத்தில்


இருவரும் போனபோது ,


வேகத்தடை வரும்போதெல்லாம்


உந்துதடையை நான் போட ,


புத்தகப் பையை நடுவில் வைத்து


என் தோள் மீது தலைசாய்த்து


வழிநெடுக வந்தாயே


நினைவிருக்கிறதா ?




ஒருநாள் என்னைத்


தனியே அழைத்து ,


தந்தை சம்மதித்து விட்டாரென்று


தேம்பி அழுத உன்னைத்


தேற்ற முயன்று தோற்றுப்போய்


நானும் அழ ,


ஆனந்தக் கண்ணீரில் இருவரும்


அமிழ்ந்து போனோமே !


நினைவிருக்கிறதா ?




என்னையே நினைத்து ,


என்னையே காதலித்து ,


என்னையே மணந்த


உத்தமக் காதலியே !


தொடங்கி விட்ட நமது


திருமண உறவில்


உனக்கொரு


உயர்ந்த பரிசெனத் தர


இந்த நினைவுகளைத் தவிர


வேறொன்றுமில்லை என்னிடம் !!!












Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...