அம்மா .............
அறியாத வயதில்
அம்மா அம்மாவென்று
நாய்குட்டி போல
உன் காலடியைச்
சுற்றிச் சுற்றி வருவேனாம் .
பக்கத்து வீட்டுக் கிழவி
அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் !
அம்மா ,
அப்போது மட்டுமல்ல , எப்போதும்
உன் காலைச் சுற்றி வரும்
நாயாகவே நானிருக்க விழைகிறேன் !
முதல் வகுப்பு முடியும் வரை
பள்ளி செல்லமாட்டேனென்று
புழுதியில் புரண்டழுவேன் !
அந்தப் புழுதிகளை எல்லாம்
உன் கண்ணீரால் கழுவி விட்டு
என்னை அனுப்பி வைப்பாய் !
மாலையில் ,
பள்ளிவாசலிலேயே
காத்திருக்கும் உன்னை
அம்மாவென்று கத்தியபடி
ஓடிவந்து கட்டிக் கொள்வேன்
பாசத்தில் உன் நெஞ்சோடு
என்னை ஒட்டிக் கொள்வாய் !
திங்கட்கிழமை சந்தையில்
தின்பண்டம் வாங்கி வந்து
அன்போடு நீ கொடுக்கும் போதெல்லாம் ,
தினமும் திங்கட்கிழமையாகவே
இருக்கக் கூடாதா என்று
தவித்துத் திரிந்தவன் நான் !
வளரும் பிராயத்தில்
தவறு செய்தேனென்று
தந்தை என்னை
அடிக்கும் அத்துணை அடிகளும்
எனக்கு விழுந்ததை விட
உன் முதுகில் தான்
அதிகம் விழுந்திருக்கின்றன !
ஒருமுறை ,
முரட்டுத் தனமாய்
மிதிவண்டி ஓட்டியதில் ,
கம்பியொன்று ஆழமாய்க்
காலைக் கிழித்தது !
அதை உன்னிடம் மறைத்து
மருந்திட்டு வந்தேன் !
புண் புரையோடிப் போனது
ஒரு நாள் எப்படியோ
அதனைக் கண்டுபிடித்து
தலையில் அடித்துக் கொண்டு
நீ அழுதாய் !
எந்த மருந்திட்டும்
ஆறாத அந்த ரணம்
உன் கண்ணீர் பட்டு ஆறிப்போனது !
அம்மா ,
என் நலம் பேணியே
நாற்பது வயதில்
நரைத்துப் போனவள் நீ !
நீ மட்டும் இல்லையென்றால்
ஏதாவது ஒரு நோயில்
எப்போதோ இறந்திருப்பேன் !
எனக்காக
ஒருமுறை மட்டுமல்ல
ஒவ்வொரு முறையும்
உயிர் கொடுத்துக் கொண்டிருப்பவள் நீ !
பணி நிமித்தம்
நான் உன்னைப்
பிரிந்து செல்ல நேர்ந்தது !
போகும் வரை பொறுமையாய் இருந்து ,
போன பின்பு
புலம்பி அழுதாய் என
தங்கை ஒருநாள்
தனியே சொன்னாள் !
நாளும் கிழமையுமாய்
நல்லது பொல்லது செய்து ,
சுற்றத்தோடு கூடியிருக்கையிலும்
அங்கே தொலைவில்
தனித்திருக்கும் நான்
என்ன உண்டேனோ ?
எவ்வாறு உறங்கினேனோ ?
என்று நினைத்து நினைத்து
கண்ணீர் உகுக்க
அம்மா
உன்னை விட்டால் எனக்கு
உலகத்தில் நாதியில்லை !
ஒவ்வொரு முறையும்
நான் ஊருக்கு வரும்போது
பாசம் பிழிந்து
முறுக்கு செய்து கொடுப்பாய் !
அன்பை உருட்டி
லட்டு செய்து கொடுப்பாய் !
போகும் பொது
உயிரை உருக்கி
கண்ணீர் உகுப்பாய் !
இதற்கெல்லாம் கைம்மாறு செய்ய - எனக்கு
இந்த ஜென்மம் போதாதம்மா !
அடுத்த ஜென்மம்
என்று ஒன்றிருந்தால் ,
நான் பெண்ணாகப் பிறக்க வேண்டும் !
பத்து மாதம் சுமந்து
உன்னைப் பெற்றெடுக்க வேண்டும் !
இதற்காகவே அம்மா ,
நான் உனக்கு முந்தி சாக வேண்டும் !
நான் உனக்கு முந்தி சாக வேண்டும் !
Comments
Post a Comment