இது காதல் கடிதமும் கூட .................
என்னை பற்றிச் சொல்ல
என்ன இருக்கிறது ?
உன்னைப் பற்றிச் சொல்லத்தான்
உலகளவு உள்ளது !
முன்வரிசை முதல்வி நீ !
பின்வரிசைப் புறம்போக்கு நான் !
சிகரத்தின் அரசி நீ !
சாக்கடைப் புழு நான் !
கொம்புத்தேன் நீ !
முடவன் நான் !
அகிலத்தையே
விரல் நுனியில்
வைத்திருப்பவள் நீ !
அடுத்த தெருவில்
எத்தனை தாவணிகள்
என்பது வரையில் தான்
எனது பொது அறிவு !
அன்றைய பாடத்தை
அன்றே படித்தால் தான்
உனக்கு உறக்கம் வரும் !
அப்பனிடம் அன்றாடம்
திட்டு வாங்கினால்தான்
எனக்கு உறக்கம் வரும் !
ஒரு மாலைப் பொழுதிற்கு
நீ செலவிடும் தொகையை வைத்து
ஒரு மாதத்தையே
ஓட்டி விடுவேன் நான் !
வெள்ளிக்கிழமை என்றால்
விளக்கேற்ற கோவிலுக்குப்
போவாய் நீ !
நானோ
வீணா தியேட்டரில்
வீணான படம் பார்த்து
வீணாய்ப் போய்க்கொண்டிருப்பேன் !
நீ நடக்கும் போது
குனிந்தே செல்வாய் !
நாணம் என்று தான்
நான் நினைத்தேன் !
பிற்பாடுதான் தெரிந்தது
பாதையில் இருக்கும்
புழு பூச்சிகளின் மீது
பாதம் பட்டுவிடக்கூடாதென்ற
பரிதவிப்பு அது என்பது !
இங்கே ,
குவாட்டருக்கு
கோழி இல்லை என்றால்
கொலையே நடக்கும் !
காதலும் காமமும்
கணவனிடம் மட்டுமே என்று
கண்ணியமாகக்
காத்திருப்பவள் நீ !
நானோ ,
கண்களைக் கவருவது
கிழவி என்றாலும்
கற்பனையிலேயே
கற்பழித்து விடுவேன் !
ஒருமுறை
கரும்பலகையில்
கணிதம் போட்டுக் காட்டி
விளக்கிச் சொல்லி
வகுப்பெடுத்தாய் !
கணக்கோடு
எனக்கிருந்த பிணக்கு
அன்றோடு அகன்றது !
வகுப்பிற்குத் தாமதமாய்
வந்தேனென்று
வாத்தியார் ஒருவர்
வார்த்தையாலேயே
விளாசித் தள்ளினார் !
அனைவரும்
புன்னகையோடு பார்க்க
நீ மட்டும் என்னைப்
பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாய் !
ஒரு நாள்
என பிறந்த நாளை
எப்படியோ தெரிந்து கொண்டு
என்னிடம் இனிப்பு கேட்டாய் !
எனது சக்திக்கு
ஐந்து ரூபாய் தான் செலவழித்தேன் .
நன்றாக இருந்ததென்று
ஐநூறு முறை சொல்லியிருப்பாய் !
அதன் பிறகு
நாம் நண்பர்களானோம் !
நான் உன்னால்
திருத்தி எழுதப்பட்டேன் !
நீ படிக்கும் பாடங்களை
நானும் படிக்கிறேன்
என்பதாலேயே
படிப்பு மீது எனக்கு ஒரு
பிடிப்புத் தோன்றி விட்டது !
அடுத்த தேர்வு முடிவில்
முதலாவதாக நீ !
இரண்டாவதாக நான் !
" எல்லாம் உன்னால் தான் "
என்று நான் ,
தழுதழுத்துச் சொன்ன போது
உன் கண்கள்
எனக்காகக் கலங்கின
ஒருமுறை
நீ என் இல்லம் வந்து
சென்ற பிறகு
என் வீட்டில் எனக்கிருந்த
மரியாதை
ஒருபடி உயர்ந்து விட்டது !
அம்மா
அந்த வாரம் முழுக்க
உன்னைப் பற்றியே
பேசிக்கொண்டிருந்தாள் !
இப்போதெல்லாம்
அப்பாகூட
அதிர்ந்து பேசுவதில்லை !
பேர் சொல்லி
அழைக்கும் தங்கை
அண்ணா என்று
அன்போடு அழைக்கிறாள் !
ஏறெடுத்தும் பார்க்காத
ஆசிரியர் ஒருமுறை
எதிரே வந்த போது
எனது எதிர்காலம் குறித்து
அக்கறையாய் அறிவுரை கூறிச்சென்றார் !
வீட்டிலிருந்த போது
உன்னை என்
வாழ்க்கைத் துணையாய்
நினைத்துப் பார்த்தேன் .
போயிருந்த மின்சாரம்
பளிச்சென்று வந்தது !
உன்மீது
எனக்கிருந்த காதல்
முழுமையடைந்த கணம்
அதுதான் !
அதன் பிறகு
உன் கண்களை
என்னால் நேரடியாக
சந்திக்க முடியவில்லை !
இப்போதெல்லாம்
நிறைய தடுமாறுகிறேன் !
எனக்கு
அருகதை இருக்கிறதா என்பது
விடுகதையாய் இருக்கிறது !
இது தவறு என்று
நீ நினைத்தால்
மற்றவைகளில்
என்னைத் திருத்தியது போல
இதிலிருந்தும் என்னைத் திருத்து !
இது
காதல் கடிதம் அல்ல .
ஆனால்
காதல் கடிதமும் கூட !!!
Comments
Post a Comment