Skip to main content
இது காதல் கடிதமும் கூட .................



என்னை பற்றிச் சொல்ல

என்ன இருக்கிறது ?

உன்னைப் பற்றிச் சொல்லத்தான்

உலகளவு உள்ளது !


முன்வரிசை முதல்வி நீ !

பின்வரிசைப் புறம்போக்கு நான் !


சிகரத்தின் அரசி நீ !

சாக்கடைப் புழு நான் !


கொம்புத்தேன் நீ !

முடவன் நான் !


அகிலத்தையே

விரல் நுனியில்

வைத்திருப்பவள் நீ !


அடுத்த தெருவில்

எத்தனை தாவணிகள்

என்பது வரையில் தான்

எனது பொது அறிவு !


அன்றைய பாடத்தை

அன்றே படித்தால் தான்

உனக்கு உறக்கம் வரும் !


அப்பனிடம் அன்றாடம்

திட்டு வாங்கினால்தான்

எனக்கு உறக்கம் வரும் !


ஒரு மாலைப் பொழுதிற்கு

நீ செலவிடும் தொகையை வைத்து

ஒரு மாதத்தையே

ஓட்டி விடுவேன் நான் !


வெள்ளிக்கிழமை என்றால்

விளக்கேற்ற கோவிலுக்குப்

போவாய் நீ !


நானோ

வீணா தியேட்டரில்

வீணான படம் பார்த்து

வீணாய்ப் போய்க்கொண்டிருப்பேன் !


நீ நடக்கும் போது

குனிந்தே செல்வாய் !

நாணம் என்று தான்

நான் நினைத்தேன் !

பிற்பாடுதான் தெரிந்தது

பாதையில் இருக்கும்

புழு பூச்சிகளின் மீது

பாதம் பட்டுவிடக்கூடாதென்ற

பரிதவிப்பு அது என்பது !


இங்கே ,

குவாட்டருக்கு

கோழி இல்லை என்றால்

கொலையே நடக்கும் !


காதலும் காமமும்

கணவனிடம் மட்டுமே என்று

கண்ணியமாகக்

காத்திருப்பவள் நீ !


நானோ ,

கண்களைக் கவருவது

கிழவி என்றாலும்

கற்பனையிலேயே

கற்பழித்து விடுவேன் !


ஒருமுறை

கரும்பலகையில்

கணிதம் போட்டுக் காட்டி

விளக்கிச் சொல்லி

வகுப்பெடுத்தாய் !

கணக்கோடு

எனக்கிருந்த பிணக்கு

அன்றோடு அகன்றது !


வகுப்பிற்குத் தாமதமாய்

வந்தேனென்று

வாத்தியார் ஒருவர்

வார்த்தையாலேயே

விளாசித் தள்ளினார் !

அனைவரும்

புன்னகையோடு பார்க்க

நீ மட்டும் என்னைப்

பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாய் !


ஒரு நாள்

என பிறந்த நாளை

எப்படியோ தெரிந்து கொண்டு

என்னிடம் இனிப்பு கேட்டாய் !


எனது சக்திக்கு

ஐந்து ரூபாய் தான் செலவழித்தேன் .

நன்றாக இருந்ததென்று

ஐநூறு முறை சொல்லியிருப்பாய் !


அதன் பிறகு

நாம் நண்பர்களானோம் !

நான் உன்னால்

திருத்தி எழுதப்பட்டேன் !


நீ படிக்கும் பாடங்களை

நானும் படிக்கிறேன்

என்பதாலேயே

படிப்பு மீது எனக்கு ஒரு

பிடிப்புத் தோன்றி விட்டது !


அடுத்த தேர்வு முடிவில்

முதலாவதாக நீ !

இரண்டாவதாக நான் !

" எல்லாம் உன்னால் தான் "

என்று நான் ,

தழுதழுத்துச் சொன்ன போது

உன் கண்கள்

எனக்காகக் கலங்கின


ஒருமுறை

நீ என் இல்லம் வந்து

சென்ற பிறகு

என் வீட்டில் எனக்கிருந்த

மரியாதை

ஒருபடி உயர்ந்து விட்டது !


அம்மா

அந்த வாரம் முழுக்க

உன்னைப் பற்றியே

பேசிக்கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்

அப்பாகூட

அதிர்ந்து பேசுவதில்லை !


பேர் சொல்லி

அழைக்கும் தங்கை

அண்ணா என்று

அன்போடு அழைக்கிறாள் !


ஏறெடுத்தும் பார்க்காத

ஆசிரியர் ஒருமுறை

எதிரே வந்த போது

எனது எதிர்காலம் குறித்து

அக்கறையாய் அறிவுரை கூறிச்சென்றார் !


வீட்டிலிருந்த போது

உன்னை என்

வாழ்க்கைத் துணையாய்

நினைத்துப் பார்த்தேன் .

போயிருந்த மின்சாரம்

பளிச்சென்று வந்தது !


உன்மீது

எனக்கிருந்த காதல்

முழுமையடைந்த கணம்

அதுதான் !


அதன் பிறகு

உன் கண்களை

என்னால் நேரடியாக

சந்திக்க முடியவில்லை !


இப்போதெல்லாம்

நிறைய தடுமாறுகிறேன் !


எனக்கு

அருகதை இருக்கிறதா என்பது

விடுகதையாய் இருக்கிறது !


இது தவறு என்று

நீ நினைத்தால்

மற்றவைகளில்

என்னைத் திருத்தியது போல

இதிலிருந்தும் என்னைத் திருத்து !


இது

காதல் கடிதம் அல்ல .

ஆனால்

காதல் கடிதமும் கூட !!!









Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...