கவிதை செய்தல்
உயிரை உருக்கித்
தயாரிக்கும்
உணர்வின் இரசம் !
மூளையைப் பிழிதெடுக்கும்
மொழிச்சாறு !
உணவுண்ணும் போதும்
கனவுண்ணும் கைங்கர்யம் !
கற்பனையின் ,
கையில் அகப்பட்டது
கைவிட்டுப் போகாதிருக்க
கையோடு இருக்கும்
கைக்குறிப்பு !
குளியலறையிலும்
குதித்தாடும் சிந்தனைகள் !
பணிநடுவிலும்
அணிவகுக்கும் அழகுணர்ச்சி !
சக மனிதனின்
சூழல் திருடும் சாமார்த்தியம் !
உலகப் படைப்புகளில்
ஊழல் செய்யும் சாணக்கியம் !
ரகசியங்களை
ரசனைப் படுத்தும் ரசாயனம் !
பழமையைப் புறந்தள்ளும்
பௌதிகம் !
பிறப்பெடுத்த மலர்ச்சியிலும்
பிரசவித்த அயர்ச்சி !
புத்தி சொல்லும் கேனத்தனம்
புத்தி இழக்கும் ஞானத்தனம் !
உணர்ச்சிக்கு
வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான
புணர்ச்சிக்கு
படுக்கை விரிக்கும் மெத்தை !
எண்ணங்களின் வானவில்லுக்குப்
பேனாவால் மழை பொழிதல் !
உண்மையின் அந்தரங்கம் மறைக்க
பொய்யால் ஆடை நெய்தல் !
ஒரே ஒரு வார்த்தைக்கும்
வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !
பாலையில் சோலை தேடுதல்
சோலையில் பாலை தேடுதல் !
எண்ணங்களின் கோலத்திற்கு
வார்த்தைகளால் வண்ணமிடுதல் !
அறிவு என்னும் தறி கொண்டு
வரி எனும் நூல் கொண்டு
மொழிப்பெண்ணின் மானம் காக்க
சேலை நெய்யும் கலை !
கவியில் வாழாத நாட்கள் ,
புவியில் வாழாத நாட்கள் !
யாசித்ததை வாசித்து
வாசித்ததை நேசித்து ,
நேசித்ததை யோசித்து ,
யோசித்ததை வேசித்து
வேசித்ததை .....................
ச்சே ! இதற்கு மேல்
எதுகை எட்டவில்லை
விட்டு விடுங்கள் !
இதைப் பற்றி
சொல்லிக்கொண்டே போனால் ,
இது ஒரு
முடியாத முடிவிலி !
இதை ,
இப்போதைக்கு
நிறுத்தி வைக்கும் நான் ஒரு
" முடியாத " அறிவிலி !!!
Comments
Post a Comment