பிழைப்பு
மூன்று மணிக்கு
முந்தி எழுந்து ,
காபி குடித்து
கண்ணுறக்கம் தொலைத்து ,
காலைக் கடன்களைக்
கடிதே முடித்து ,
வெள்ளாவி வெந்நீரை
விரலிடுக்கில்
விளாவிக் குளித்து ,
அழுக்கு சீருடையை
அலுக்காமல் அணிந்து கொண்டு ,
தூக்கத்தில் திளைக்கும்
அறை நண்பனை
ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ,
கலைத்து விடாமல்
கதவைச் சாத்தி ,
வெளியே வந்து
விதியை நொந்து ,
நிறுத்தத்தில்
நின்றபடியே
நேரம்போகக் காத்திருந்து ,
தொழிற்ச்சாலை ஊர்தியில்
சிறைச்சாலைக் கைதி போல ,
விடுபட்ட உறக்கத்தை
வழிநெடுக விரட்டிப் பிடித்து ,
வளாகம் வந்ததும்
விரைந்து இறங்கி ,
வரிசையில் நின்று
வருகையைப் பதிந்து ,
அதிகாலை இட்டிலியை
அரைவயிற்றில் அடைத்து விட்டு ,
இரவுப் பணியாளனிடம்
இறுதி நிலவரம் இயம்பக் கேட்டு ,
விட்டுப் போன பணிகளைத்
தொட்டுத் துலக்கி தூசி தட்டி
சமயம் வாய்த்தபோது
சாயவிருக்கையில் சாய்ந்துறங்கி ,
போன பொழுதுணர்ந்து
பதறி எழுந்து ,
பாதிப் பணியின்
மீதி முடித்து ,
மேலதிகாரியின்
முறைப்பை
முகத்தில் வாங்கி ,
ஓய்வு இன்றி
ஆய்வு செய்து ,
உடல் நோக
உள்ளம் சாக ,
இட்ட வேலையை
ஓட்ட முடித்து ,
வசதி வாய்த்தால்
வம்பு பேசி வம்பு வளர்த்து ,
அந்தி சாய்வில்
அலுவல் முடித்து ,
அயர்ந்து போய்
அறைக்குத் திரும்பி ,
தானே சமைத்து
தானே உண்டு ,
திரும்பவும் படுத்து
திரும்பவும் எழுந்து ,
மற்றுமொரு நாளை
மறுபடியும் தொடங்கி ,
...............................................
...............................................
...............................................
இப்போதெல்லாம்
தெரு நாயைப் பார்த்தால் கூட
சற்று பொறாமையாய் இருக்கிறது !!!
Comments
Post a Comment