Skip to main content
தேடிக்கொண்டே இருக்கிறேன் நான் ...................






அது ஒரு


திருமண நிகழ்ச்சி !




தோழிகளுடன்


துள்ளிக் கொண்டிருந்தாள் அவள் !




நண்பர்களுடன்


நகைத்துக் கொண்டிருந்தேன் நான் !




அவள் ,


மின்மினி போல


மின்னிக் கொண்டிருந்தாள் !




சிரித்தபடி


ஜொலித்துக் கொண்டிருந்தாள் !




அதற்குக் காரணம் ,


அவளது அங்கமா ? அல்லது ,


அவளணிந்த தங்கமா ?


பங்கப்பட்ட சிந்தையோடு


புறவுலகம் மறந்து


பரிதவித்தேன் நான் !




எங்கேயோ பார்ப்பது போல


எனைப் பார்த்தாள் !




வேண்டுமென்றே நான்


அவளைப் பார்த்தேன் !




அவள் ,


யாருக்கோ வீசிய புன்னகை ,


எனக்காக மட்டும் என்பது


எனக்கு மட்டும் புரிந்தது !




என்


காது மடல்


வெப்பமானது !




உணர்ச்சி பொங்கித்


தெப்பமானது !




அழகான


அவஸ்தைப் பந்து ஒன்று


அடிவயிற்றில் புகுந்து கொண்டது !




பெருவிரலால் கோலமிட்டு


அவள் நின்றிருந்த கோலம் ,


அங்கு அவளுக்கும் அதே நிலை


என்பதைக் கோடிட்டுக் காட்டியது !




அவள் ,


என் பார்வையின் தூண்டிலில்


சிக்கி நின்றாள் !




வெட்கத்தை விழுங்காமல்


விக்கி நின்றாள் !




அங்கே ,


மணமகன் பெண்ணுக்குத்


தாலி கட்டினான் !


இங்கே ,


விழிகளால் நாங்கள்


வேலி கட்டினோம் !




அடுத்ததாக ,


உணவுண்ணும் போது ,


எங்கிருந்தோ வந்தவள்


எனக்கெதிரே அமர்ந்தாள் !




அதிசயமாய்


அனைத்துமே எனக்குத் தித்தித்தது !


நண்பனிடம் நவின்ற போது


நாக்கில் தான் கோளாறு என்றான் !


அவனுக்குத் தெரியுமா ?


நங்கையை நினைத்த


என் மனதில் தான் கோளாறு என்பது ?




தாம்பூலம் தரிக்கும் போது


நானும் அவளும் தனித்திருந்தோம் !


வெற்றிலையின் சிவப்பை விட - அவள்


வெட்கத்தின் சிவப்பே


விஞ்சி நின்றது !


அவள் பெயரைக் கேட்கலாம்


என நினைத்தேன் .


அந்தோ !


தடுமாற்றத்தில்


தாய்மொழியை மறந்து விட்டேன் !


ஒருவழியாக மண்டைக்குள்


தேடிப்பிடித்துத் தெளிந்த போது - அவள்


ஓடிப் போய் விட்டிருந்தாள் !




மறுபடியும்


அவளைப் பார்த்த போது


மழலை ஒன்றை


மடியில் வைத்திருந்தாள் !


கொஞ்சம் கொஞ்சமாய்


எனைப் பார்த்துக்கொண்டே - குழைந்தையை


கொஞ்சிக் கொஞ்சிக் குதூகலித்தாள் !




ஏதோ ஒரு தருணத்தில் என்னைப்


பித்தமாய்ப் பார்த்துவிட்டு - மழலையை


மொத்தமாய் முத்தி எடுத்தாள் ! - நான்


சுத்தமாய் சூழல் மறந்தேன் !




புறப்படும் நேரம் ,


அனைவரிடமும் ,


வார்த்தையால் விடை பெற்றாள்


என்னிடம் மட்டும்


விழிகளால் விடை பெற்றாள் !




இனி எப்போது என


ஏக்கத்தைத் தேக்கி


அவளைப் பார்த்தேன் .


அந்தத் தேக்கம்


அவளது கண்களிலும்


தொக்கித் தெரிந்தது !




தோழிகளுடன் அவள்


திரும்பிச் சென்ற போது


திரும்பிப் பார்த்துத்


திரும்பவும் பார்த்தாள் !




நான் ,


உன்மத்தம் பிடித்தவனாய் - அவள்


உருவத்தை மட்டும்


உள்ளத்தில் பதித்தவனானேன் !


அவள் தந்த பிரிவென்னும்


பள்ளத்தில் குதித்தவனானேன் !




அதன் பிறகு


நான் அவளை ,


எங்கேயும் பார்க்கவில்லை !




அன்றிலிருந்து ,


திருமணம் என்று


எங்கு சென்றாலும்


தேவதை தென்படுவாளா என


தேடிக் கொண்டிருக்கிறேன் - நான்


தேடிக்கொண்டே இருக்கிறேன் !!!




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...