தேடிக்கொண்டே இருக்கிறேன் நான் ...................
அது ஒரு
திருமண நிகழ்ச்சி !
தோழிகளுடன்
துள்ளிக் கொண்டிருந்தாள் அவள் !
நண்பர்களுடன்
நகைத்துக் கொண்டிருந்தேன் நான் !
அவள் ,
மின்மினி போல
மின்னிக் கொண்டிருந்தாள் !
சிரித்தபடி
ஜொலித்துக் கொண்டிருந்தாள் !
அதற்குக் காரணம் ,
அவளது அங்கமா ? அல்லது ,
அவளணிந்த தங்கமா ?
பங்கப்பட்ட சிந்தையோடு
புறவுலகம் மறந்து
பரிதவித்தேன் நான் !
எங்கேயோ பார்ப்பது போல
எனைப் பார்த்தாள் !
வேண்டுமென்றே நான்
அவளைப் பார்த்தேன் !
அவள் ,
யாருக்கோ வீசிய புன்னகை ,
எனக்காக மட்டும் என்பது
எனக்கு மட்டும் புரிந்தது !
என்
காது மடல்
வெப்பமானது !
உணர்ச்சி பொங்கித்
தெப்பமானது !
அழகான
அவஸ்தைப் பந்து ஒன்று
அடிவயிற்றில் புகுந்து கொண்டது !
பெருவிரலால் கோலமிட்டு
அவள் நின்றிருந்த கோலம் ,
அங்கு அவளுக்கும் அதே நிலை
என்பதைக் கோடிட்டுக் காட்டியது !
அவள் ,
என் பார்வையின் தூண்டிலில்
சிக்கி நின்றாள் !
வெட்கத்தை விழுங்காமல்
விக்கி நின்றாள் !
அங்கே ,
மணமகன் பெண்ணுக்குத்
தாலி கட்டினான் !
இங்கே ,
விழிகளால் நாங்கள்
வேலி கட்டினோம் !
அடுத்ததாக ,
உணவுண்ணும் போது ,
எங்கிருந்தோ வந்தவள்
எனக்கெதிரே அமர்ந்தாள் !
அதிசயமாய்
அனைத்துமே எனக்குத் தித்தித்தது !
நண்பனிடம் நவின்ற போது
நாக்கில் தான் கோளாறு என்றான் !
அவனுக்குத் தெரியுமா ?
நங்கையை நினைத்த
என் மனதில் தான் கோளாறு என்பது ?
தாம்பூலம் தரிக்கும் போது
நானும் அவளும் தனித்திருந்தோம் !
வெற்றிலையின் சிவப்பை விட - அவள்
வெட்கத்தின் சிவப்பே
விஞ்சி நின்றது !
அவள் பெயரைக் கேட்கலாம்
என நினைத்தேன் .
அந்தோ !
தடுமாற்றத்தில்
தாய்மொழியை மறந்து விட்டேன் !
ஒருவழியாக மண்டைக்குள்
தேடிப்பிடித்துத் தெளிந்த போது - அவள்
ஓடிப் போய் விட்டிருந்தாள் !
மறுபடியும்
அவளைப் பார்த்த போது
மழலை ஒன்றை
மடியில் வைத்திருந்தாள் !
கொஞ்சம் கொஞ்சமாய்
எனைப் பார்த்துக்கொண்டே - குழைந்தையை
கொஞ்சிக் கொஞ்சிக் குதூகலித்தாள் !
ஏதோ ஒரு தருணத்தில் என்னைப்
பித்தமாய்ப் பார்த்துவிட்டு - மழலையை
மொத்தமாய் முத்தி எடுத்தாள் ! - நான்
சுத்தமாய் சூழல் மறந்தேன் !
புறப்படும் நேரம் ,
அனைவரிடமும் ,
வார்த்தையால் விடை பெற்றாள்
என்னிடம் மட்டும்
விழிகளால் விடை பெற்றாள் !
இனி எப்போது என
ஏக்கத்தைத் தேக்கி
அவளைப் பார்த்தேன் .
அந்தத் தேக்கம்
அவளது கண்களிலும்
தொக்கித் தெரிந்தது !
தோழிகளுடன் அவள்
திரும்பிச் சென்ற போது
திரும்பிப் பார்த்துத்
திரும்பவும் பார்த்தாள் !
நான் ,
உன்மத்தம் பிடித்தவனாய் - அவள்
உருவத்தை மட்டும்
உள்ளத்தில் பதித்தவனானேன் !
அவள் தந்த பிரிவென்னும்
பள்ளத்தில் குதித்தவனானேன் !
அதன் பிறகு
நான் அவளை ,
எங்கேயும் பார்க்கவில்லை !
அன்றிலிருந்து ,
திருமணம் என்று
எங்கு சென்றாலும்
தேவதை தென்படுவாளா என
தேடிக் கொண்டிருக்கிறேன் - நான்
தேடிக்கொண்டே இருக்கிறேன் !!!
Comments
Post a Comment