Skip to main content
இப்படிக்கு இல்லத்தரசி


எங்கள் வீட்டில்
என் கணவரின்
டாபர் மேன்
வள் என்கிறது !

மகனின்
அல்சேஷன்
லொள் என்கிறது !

மகளின்
பொமரேனியன்
கீச் என்கிறது !

எனது வெறுமை
மியாவ் என்கிறது !

======================================

என் கணவர்
தொலைகாட்சியில்
மூழ்கிக்கொண்டு !

மகன்
இணையத்தில்
மூழ்கிக்கொண்டு !

மகள்
அலைபேசியில்
மூழ்கிக்கொண்டு !

நான்
பாத்திரங்களில்
மூழ்கிக்கொண்டு !

======================================

என் கணவர்
வீட்டிலிருந்து
வங்கிக்குச் செல்கிறார் !

மகன்
வீட்டிலிருந்து
நிறுவனத்திற்குச் செல்கிறான் !

மகள்
வீட்டிலிருந்து
கல்லூரிக்குச் செல்கிறாள் !

நான்
வீட்டிலிருந்து
வீட்டிற்குச் செல்கிறேன் !

======================================

தன்னுடைய
வேஷ்டியை
என் கணவர்
வாங்கி விடுகிறார் !

தன்னுடைய
ஜீன்ஸை
என் மகன்
வாங்கி விடுகிறான் !

தன்னுடைய
சுடிதாரை
என் மகள்
வாங்கி விடுகிறாள் !

என்னுடைய
சேலையை
மூவரும்
வாங்கி விடுகின்றனர் !

======================================

வீட்டில்
என் கணவருக்கென்று
தனியறை !

மகனுக்கென்று
தனியறை !

மகளுக்கென்று
தனியறை !

எனக்கென்று,
அறிவிப்புப் பலகை !

======================================

புதிதாய்
நிலம் வாங்குவது
பற்றி
என் கணவர்,

என் மகனிடம்
கருத்துக் கேட்டார் !

என் மகளிடம்
கருத்துக் கேட்டார் !

என்னிடம்
காபி கேட்டார் !

======================================

என் கணவருக்கு
புல்லட் !

மகனுக்கு
பல்சர் !

மகளுக்கு
ஸ்கூட்டி !

எனக்கு
கால்கள் !

======================================

என் கணவர்
என் மகன்
என் மகள்
நான் .........
என்று
எங்கள் வீட்டில்
நான்கு பேர்கள் !
அவரவர்க்கு
அவரவர் உலகங்கள் !
ஆகமொத்தம்
மூன்று உலகங்கள் !



 

Comments

  1. இல்லத்தரசியின் இயல்பான குமுறல். அடுத்த தலைமுறை மகள் அப்படி இல்லை என்பதில் மகிழ்வே.... அப்புறம் உங்கள் பதிவுகள் படித்து நீண்ட நாளாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! வணக்கம் ...........நலமா ? நாம் உரையாடி நீண்ட நாட்கள் ஆகின்றன என நினைக்கிறேன். முன்னைப்போல் வலைப்பூவில் சுறுசுறுப்பாக இயங்கத்தோன்றவில்லை ! தங்கள் வாசிப்புக்கும் கருத்தும் மழ்ச்சியை அளிக்கின்றன நன்றிகள் ..............

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...