சிறுவயதில்
நூல்கட்டி விளையாடியதற்காய்
மன்னிப்புக்கேட்க வேண்டும் !
ஊசித்தட்டானே
நீ
எங்கிருக்கிறாய் ?
=============================
ஊரில்
பல்லாங்குழிச் சிறுமிகளையும்
கில்லித்தட்டு சிறுவர்களையும்
காணவில்லை !
திரும்பிப்பார்க்கிறேன் .......
என்னுடனே
வந்துகொண்டிருந்த
என் பால்யத்தையும்
காணவில்லை !
=============================
எங்களூரின்
தாவணிக்கனவுகள் எல்லாம்
இப்போது
சுடிதார்க் கனவுகளாக !
அந்தக்கனவில்
வண்ணம் இருந்தது !
இந்தக் கனவில்
சாயம் மட்டுமே இருக்கிறது !
=============================
கட்டிப்பிடித்துக்
கதற வேண்டும் போலிருந்தது !
பாலித்தீன் பைகளை
மேய்ந்து கொண்டிருந்த
எங்களூர்
பசுமாட்டை !
=============================
ஒரு
நோயுற்ற
முதியவளைப் போல
குற்றுயிராக
சுருண்டு கிடந்தாள்
காவிரி !
முடிந்தமட்டும்
கண்ணீர் வார்த்துத்
திரும்பிவந்தேன் !
=============================
இரட்டை மாட்டுவண்டியில்
கோவணங்கட்டிய
ஒரேயொரு விவசாயி
தென்பட்டான் !
கடவுளையே
பார்த்தது போலிருந்தது !
=============================
வீட்டில்
இரவு உணவுக்கு
இட்டிலி !
ம்ம்ம்..........
அரிசீம்பருப்புச் சோறை
அம்மாவே
மறந்து விட்டாள் !
=============================
சல்லடைபோட்டுத்
தேடியும்
அகப்படவேயில்லை
வீட்டில்
ஒரேயொரு
மஞ்சப்பை !
=============================
ஒரு
முற்பகல் முழுக்கத்
தட்டிப் பார்த்தேன்
எங்களூர்
வெட்டவெளியை !
கடைசிவரை
கதவு திறக்கவில்லை
தென்றல் !
=============================
மின்சாரம்
போனாலொழிய
வாசல்வந்து
கூடிப்பேசுவதில்லை
பக்கத்து வீட்டு
அக்காக்களும்
அண்ணன்களும் !
=============================
இற்றுப்போய்
எங்கள் வீட்டு
பரணில் கிடந்த
ஒரு முறத்தை
எடுத்து பத்திரப்படுத்தினேன் !
என் மகளுக்கு
புலிவிரட்டிய
ஒரு வீரத்தாய்
கதை சொல்ல !
=============================
சுற்றிச் சுற்றித்
தேடினேன் !
" எதைத் தேடுகிறாய் ? "
என்றாள் அம்மா !
" இங்கேயே
சுற்றிக்கொண்டிருக்கும்
இரண்டு சிட்டுக்குருவிகளை "
என்றேன் !
Comments
Post a Comment