Skip to main content

அழைப்பு வருமா ?

அழைப்பு வருமா ?



இரண்டு நாட்களாகி விட்டன !
இன்றாவது அழைப்பு வருமா ?
இனிமையை அழைத்து வருமா ?

எங்கிருந்து
என்கிறீர்களா ?
வேறு எங்கிருந்து ?
வீட்டில் இருந்துதான் !

என்றாவது ஓர்நாள்
வீடு அழைக்கும்,
வரன் பார்த்திருப்பார்கள்,
வரச் சொல்வார்கள்
விதி மாறப் போகிறது
வேதனை தீரப் போகிறது !
 -  என்று நான்
காத்திருக்கிறேன் !
காத்துக் கொண்டேயிருக்கிறேன் !

அப்பா,
வேலையைப் பற்றியே
கேட்கிறார் !
அம்மாவோ
உணவு உண்ட
வேளையைப் பற்றியே
கேட்கிறாள் !
" வேறு சங்கதி உண்டா ? "
என்று நானும்
பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் !
நாடகமாகவாவது
நல்லது சொல்வார்கள் என்று !
ம்ஹூம்...
ஒரு ஆணியும்
பெயரவில்லை !
ஒரு அணுவும்
அசையவில்லை !

இந்தக் காலப்
பெண்கள் இருக்கிறாள்களே !
அம்மம்ம்மா !
அப்பப்ப்ப்பா !
அய்யய்யோ !

ஆர்யா போல வேண்டுமாம் !
சூர்யா போல வேண்டுமாம் !
அவனைப் போல வேண்டுமாம் !
இவனைப் போல வேண்டுமாம் !

ஜவுளிக் கடையில்
குவிந்து கிடக்கும்
ஆடையைத்
தேடுவது போலத்தான்  - தனக்கான
ஆடவனையும்
தேடத் தலைப்படுகிறாள்
இங்கு ஒவ்வொரு பெண்ணும் !

பகட்டானது மட்டுமே
பக்குவமாய்
விலைபேசப் படுகிறது !

இங்கு,
முன்னுரிமை எல்லாம்
மென்பொருள் மேதைகளுக்கே !

அமெரிக்கவாசிகளுக்கு
ஆரவார வரவேற்பு !

சம்பளம்
ஆறு இலக்கமா ?
சாதி தடையில்லை !

முக்கியமாக,
தமிழனாக இருந்தால்
தமிழ் தெரியக்கூடாது !

உயர்நிலைப் பள்ளி தாண்டாத
உத்தமி ஒருத்தி
அறைகூவல் விடுக்கிறாள்,

" மனமுவந்து
மணப்பதென்றால்
மருத்துவனையே
மணப்பேன் ! "

" பொறிவைத்துப்
பிடித்தாலும்
பொறியாளனையே
பிடிப்பேன் ! "

" எழிலதிபனாயினும் - அவன்
தொழிலதிபனாயிருந்தால்
இப்போதே ஒகே ! "


பெண்ணுக்கு
ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட
மூன்று விட்ட
சித்தப்பா மகன் சொல்கிறான்,
" மணமகனுக்கு
புருவம் அடர்த்தியில்லை
புறக்கணித்து விடு ! "

ஏழுவிட்ட
எட்டு விட்ட
அத்தை மகள் சொல்கிறாள்,
"  மாப்பிள்ளைக்கு
மூக்கு நீளமில்லை
மறுத்துவிடு ! "

- இதில்
இந்த அக்கப்போருகள் வேறு !






காலன் அழைப்பதற்குள்ளாவது
காமன் வந்து அழைப்பானா ?

மரண ஓலை வருவதற்குள்ளாவது
மணமாலை கிட்டுமா ?

ஆனாலும்
ஆனாலும்

இதோ
இரண்டு நாட்களாகிவிட்டன
வீட்டிலிருந்து அழைப்பு வரும்
என்று
நான் ....இல்லையில்லை
நாங்கள் காத்திருக்கிறோம்
காத்துக்கொண்டே இருக்கிறோம் !!!


Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...