Skip to main content



 முக்கியமாக ஒன்று


ஆலையில் வைத்து
மாலையில் நேற்று
மேலதிகாரி திட்டிவிட்டார் !
மேலிடம் கொடுத்த
மேலான வேலையை
மேற்கொண்டு முடிக்க
என்னைப் பணித்திருந்தார்,
மேனி வளையவில்லை - சற்றுநேரம்
மேஜையில் படுத்ததில்
மேலும் இழுத்து விட்டது - ஆகவே
மேற்படி திட்டிவிட்டார் !

கத்துக்குட்டிகள் முன்னிலையில்
கத்திவிட்டார் !

அவமானமாகிவிட்டது                                         
ஆத்து ஆத்துப் போனது !

எல்லா வேலையையும்
என் தலையில் கட்டி
குல்லா போட்ட
கல்லா முதலாளியாய்
அல்லா என்றபடி
அவர் அங்கே அமர்ந்திருப்பார்,
இங்கே நான் சற்றுநேரமும்
நில்லாமல்,
வேதனையை வெளியில்
சொல்லாமல்
உண்பதற்கும் நேரம்
இல்லாமல்
பறந்து பறந்து
விரைந்து முடிக்கவேண்டும்
நல்லாயிருக்கிறது கதை !

ச்சே !
இதெல்லாம் ஒரு
உழைப்பா ?
இப்படியும் ஒரு
பிழைப்பா ?

வைத்துக்கொள்கிறேன் !
வஞ்சகத்தை நெஞ்சோடு
தைத்துக் கொள்கிறேன் !

மாலை வந்தது !
ஆலை முடிந்தது !

விதியை நொந்தேன்
வீதியில் நடந்தேன் !

தேநீர் அருந்தியாவது
தேற்றிக்கொள்ளலாமென
கடையை நோக்கி
நடையைப் போட்டேன் !

ஆறு ரூபாய்க்கு
அரைடம்ளர் கொடுத்தான் !

திகட்டுமளவு
தித்திப்பு இருந்தும்
தேநீர் எனக்குத்
தித்திக்கவில்லை !

குடித்துவிட்டு,
காசுகொடுத்து -  கணக்கை
முடித்துவிட்டு,
நிறுத்தத்தில்
நின்றபோது
வருத்தம் என்னை
வறுத்தெடுத்தது !

வாட்டத்தைப் போக்க
நோட்டத்தப் போட்டேன் !

மரக்கிளையில்
பட்டுப்போன்ற - இரண்டு
சிட்டுக்குருவிகள் !

கீச்கீச்சென
காதுக்குள் அவை
கிச்சுக்கிச்சு மூட்டின !

தரையைத் துறந்து
இரையை மறந்து,
குருவிகளிரண்டும்
அருவியைப் போலக்
காதல் பொழிந்தன !

அந்தப்பக்கம்
ஒரு அணில்,
விழுந்த பழத்தைக்
கவ்விக்கொண்டு
தவ்விச்சென்றது !

பார்க்கப்பார்க்க
பாரம் எல்லாம்
பனித்துளியாக,
காலம் என்பது
பொன்னில் செய்த
மணித்துளியாக,

ஆஹா !!!
இதுவல்லவோ
இயற்கையின் மகத்துவம் !
இன்னும் சொன்னால்
இறைமையும்
இயற்கையும்
ஒரே சமத்துவம் !

அப்புறம்
முக்கியமாக ஒன்று,

அணிலுக்காகவும்
குருவிக்காகவுமாவது
மரங்களை
விட்டு வையுங்கள் !
முடிந்தால்
வீட்டருகே ஒரு செடியையாவது
நட்டு வையுங்கள் !!!







Comments

  1. அருமை. எந்த வரி மிகப் பிடித்த வரி என்று சொல்லத் தெரியவில்லை எனக்கு, அத்தனை வரிகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாகப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி தோழி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...