Skip to main content
காதலியே கேள் .....



காதலியே கேள் !

இனிமேல் நாம்

மழையில் நனைய வேண்டாம் !

அமுத மழை இப்போதெல்லாம் ,

அமிலத்தை அணிந்துதான்

தரையையே தொடுகிறது !


வடுகப்பட்டிக் கவிஞன் சொன்னானென்று ,

வானின் நிறத்தை மையாக்கி ,

காதல் கடிதம் தீட்டச் சொன்னாய் !


நானிலத்தின் கழிவுகளால் ,

நீலம் எல்லாம் நீர்த்துப்போக ,

வார்த்தையை வடிக்க

வழியின்றி விழிக்கிறேன் !


தண்ணீரை உன்னுடன்

ஒப்பிடச் சொல்கிறாய் !

குளோரின் குரூரமாகச் சிரிப்பது

கேட்கவில்லையா உனக்கு ?


மொட்டை மாடியில் ,

காற்று வாங்குவதைக் குறைத்துக்கொள்வோம் !

ஏனென்று கேட்கிறாயா?

ஹைக்கூத் தென்றலை ,

ஹைட்ரோ கார்பன் கவர்ந்து விட்டதாம் !

செய்தியை , செவிமடுக்க வில்லையா நீ ?


கணநேரமாவது ,

குளிர்ச்சியைக் குறைத்துக்கொள்வோம் !

ஓசோன் ஒருநாளாவது

ஓய்வெடுக்கட்டும் !


உந்தன் ,

பார்வையின் மின்சாரமே போதுமே !

புறவுலக மின்சாரத்தை

பத்திரப்படுத்துவோம் !


பூச்சிக்கொல்லிகள்

ஆட்சி செய்வதால் ,

பருக்கைச்சோற்றைப் பகிர்ந்து கொள்வதை

பெருமளவில் குறைத்துக்கொள்வோம் !


புகையின் பகையை ,

பூமி இனிமேலும் பொறுக்காது !

ஆகையால் ,

காலாற நடந்தே ,

காதலை அனுபவிப்போம் !


இனிமேலான இரவுகளில் ,

காற்றைத் தூது விட்டே பேசிக்கொள்ளலாம் !

கதிர்வீச்சுக்களின் கோபமூச்சு ,

கடுகளவேனும் குறையட்டுமே !!!



Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது